குரு பெயர்ச்சி பலன்கள் 2016 - 17 (மேஷம்)

அழுத்தமான கொள்கை பிடிப்புள்ளவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு நினைத்த காரியங்களையெல்லாம் நிறைவேற்றி தந்ததுடன், சமூகத்தில் ஓருபடி அந்தஸ்தை உயர்த்திய குருபகவான் இப்போது 02.8.2016 முதல் 1.09.2017 வரை ஆறாவது வீட்டில் அமர்ந்து பலன் தருவார். 'சத்ய மாமுனி ஆறிலே இருகாலிலே தளைப்பூண்டதும்' என்று பழைய பாடல் கூறுகிறது. சகட குருவாச்சே! எதிர்ப்புகளையும், ஏமாற்றங்களையும், வீண் பழிகளையும் உண்டாக்குவாரே! என்று கலங்காதீர்கள்.

அதன்படி எதிலும் சின்ன சின்ன இழப்பங்களும், மனக்குழப்பங்களும், தடுமாற்றங்களும் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். அதற்காக அஞ்ச வேண்டாம். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று எப்போது நினைத்தாலும் முடியாமல் போகும். செலவினங்கள் அதிகமாகும். இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், வயிற்று உப்புசம், சிறுசிறு அறுவை சிகிச்சைகளெல்லாம் வந்துப் போகும். சில பல நோய்கள் இருப்பதாக யூகிப்பீர்கள். உரிய மருத்துவரை அணுகி தக்க சமயத்தில் மருந்து, மாத்திரை உட்கொள்வது நல்லது.

சில காரியங்களை இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். ஒரு விஷயத்தை செய்வதென்றால் அது முடியாவிட்டால் அடுத்தது என்ன செய்யலாம் என்று முன்னரே யோசித்து செய்வது நல்லது. குடும்பத்தில் சச்சரவுகள் வந்துப் போகும். கணவன்-மனைவிக்குள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தி பிரிவை உண்டாக்க முயற்சி செய்வார்கள். அவர்களின் பேச்சை கேட்டு மனைவியை சந்தேகப்பட்டுக் கொண்டிருக்க வேண்டாம்.

பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டேப் போகும். யாருக்காகவும் எந்த வாக்குறுதியும் தர வேண்டாம். உறவினர்களுக்காக நாம் எவ்வளவு கொடுத்து உதவினாலும் நமக்கு நல்ல பெயர் இல்லையே என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். பல காலமாக நெருங்கிப் பழகிய நண்பர்கள் கூட உங்களை தவறாகப் புரிந்துக் கொண்டு விலகுவார்கள். சமூகத்தின் மீதும் சின்ன சின்ன கோபமெல்லாம் வந்து நீங்கும். உங்கள் குடும்ப விஷயத்தில் மூன்றாவது நபர் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம்.

உங்கள் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்க சிலர் முயற்சி செய்வார்கள். கவனமாக இருங்கள். முக்கிய நிகழ்ச்சிகளை தவிர மற்ற விழாக்களில் கலந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. பாதை மாறிச் செல்பவர்களின் நட்பை தவிர்த்து விடுங்கள். தர்ம சங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். தங்க ஆபரணங்களை யாருக்கும் இரவல் தரவோ, வாங்கவோ வேண்டாம். வழக்குகளில் வழக்கறிஞரின் போக்கு சரியாக இருக்கிறதா என்பதை அவ்வப்போது நீங்கள் ஆராய்வது நல்லது. கடனை நினைத்தும் கலங்குவீர்கள். அரசுக்கு முரணான விஷயங்களில் தலையிடாதீர்கள்.

காலமெல்லாம் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க வேண்டியது தானா, மகிழ்ச்சியே வாழ்க்கையில் இருக்காதா என்றெல்லாம் புலம்புவீர்கள். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட விவகாரத்தில் கோர்ட், வழக்கு என்று நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்காதீர்கள். மனைவிக்கு தைராய்டு, ஃபைப்ராய்டு, கர்பப்பை வீக்கம், அப்ரண்டீஸ் வரக்கூடும். அலைப்பேசியில் பேசிக் கொண்டே வாகனத்தை இயக்கவோ, சாலைகளைக் கடக்கவோ வேண்டாம். சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். வங்கிக் கணக்கில் இருப்பை அறிந்து கொண்டு காசோலை கொடுங்கள்.

 
குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் குடும்ப ஸ்தானமான 2-ம் வீட்டை பார்ப்பதால் இழுபறி நிலை மாறும். கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். வருமோ, வராதோ என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்தப் பிணக்குகள் நீங்கும். மற்றவர்களின் மனதைப் புரிந்துக் கொள்ளத் தொடங்குவீர்கள். தேங்கிக் கிடந்த வழக்கில் வெற்றியுண்டு. ஆரோக்யம் சீராகும்.
 
குரு தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் மாறுபட்ட யோசனையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றிப் பெற்று அப்பாயிண்ட் ஆர்டருக்காக காத்திருந்தவர்களுக்கு அழைப்பு வரும். டிரெஸ்ட், சங்கம், இயக்கம் இவற்றில் புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ஊர் பொதுக் காரியங்களையெல்லாம் எடுத்து நடத்துவீர்கள். வேற்று மதத்தவர், மாநிலத்தவர்களால் அனுகூலம் உண்டாகும்.
 
குருபகவான் தனது 7-ம் பார்வையால் உங்களின் 12-ம் வீட்டை பார்ப்பதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும். நீண்ட காலமாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள்.       
 
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
02.8.2016 முதல் 19.9.2016 வரை உங்கள் பூர்வ புண்யாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் குரு பயணிப்பதால் குழந்தை பாக்யம் கிட்டும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பூர்வீகச் சொத்தில் உங்களுக்கு சேர வேண்டிய பங்கு வந்து சேரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். விலையுயர்ந்த மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். அதிக வட்டிக் கடனை தீர்க்க புதுவழி பிறக்கும். நட்பு வட்டம் விரியும்.
 
20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை உங்கள் சுகாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் நல்ல காற்றோட்டம், குடி நீர் வசதியுள்ள வீட்டிற்கு குடிப் புகுவீர்கள். தாயாருக்கு இருந்த நோய் குணமாகும். அவருடனான கசப்புணர்வுகளும் நீங்கும். கலை, இசையில் நாட்டம் அதிகரிக்கும். சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ ப்ளான் அப்ரூவல் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். கோழித்தூக்கம் போய், இனி நிம்மதியான குறட்டைத் தூக்கம் வரும்.
 
25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை உங்கள் ராசிநாதனும்-அஷ்டமாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் குருபகவான் செல்வதால் உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களை சரியாகப் புரிந்துக் கொள்வார்கள். சகோதரிக்கு திருமணம் முடியும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். ஆனால் கொஞ்சம் அலைச்சலும், செலவினங்களும் இருந்துக் கொண்டேயிருக்கும்.
 
17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசியில் குரு அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்க்கயிருப்பதால் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். மனைவிவழியில் மதிப்புக் கூடும். புதிதாக வாகனம் வாங்குவீர்கள். 
 
குருபகவானின் வக்ர சஞ்சாரம்:
 
22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் வீண் பிரச்னை, சகோதர வகையில் மனவருத்தம், சிறுசிறு நெருப்புக் காயங்கள், இனந்தெரியாத கவலை, சொத்து வாங்குவது, விற்பதில் சிக்கல்கள், வழக்கால் நிம்மதியின்மை வந்துச் செல்லும். தன்னம்பிக்கை குறையும். ஆனால் பணவரவு குறையாது. முன்னேற்றம் தடைபடாது.
 
வியாபாரிகளே! ஏற்ற-இறக்கங்கள் இருந்துக் கொண்டேயிருக்கும். திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி எந்த முதலீடுகளும் செய்ய வேண்டாம். சந்தை நிலவரத்தை தெரிந்துக் கொள்ளுங்கள். வேலையாட்களை வேலைக்கு வைக்கும் போது அவர்களை நன்றாக விசாரித்துவிட்டு பணியில் சேர்ப்பது நல்லது. இல்லையென்றால் உங்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள் அறிமுகம் செய்து வைப்பவர்களை வேலையில் சேர்த்துக் கொள்வது நல்லது. பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளுங்கள். கடையை மாற்ற வேண்டாம். இருக்கும் இடத்திலேயே தொடர்வது நல்லது. கமிஷன், உணவு, மருந்து, கன்சல்டன்சி வகைகளால் ஆதாயமடைவீர்கள்.
 
உத்யோகஸ்தர்களே! வேலைச்சுமையால் மனஇறுக்கம் உண்டாகும். தன்நிலையை தக்க வைத்துக் கொள்ளப் போராட வேண்டியிருக்கும். உங்கள் உழைப்பை பயன்படுத்தி வேறு சிலர் முன்னேறுவார்கள். உயரதிகாரிகளின் பார்வை உங்கள் மீது திரும்பும். அவர்களிடம் உஷாசாராக இருங்கள்.

நன்றி மறந்த சக ஊழியர்களை நினைத்து கொஞ்சம் ஆதங்கப்படுவீர்கள். சிலர் தங்களின் ஆதாயத்திற்காக உங்களைப் பற்றிய தவறான வதந்திகளைப் பரப்புவார்கள். நீங்கள் வேலைப் பார்க்கும் நிறுவனத்தை வேறு நிறுவனம் வாங்க வாய்ப்பிருக்கிறது. விரும்பத்தகாத இடமாற்றங்களெல்லாம் வந்துப் போகும். உங்கள் மீது சிலர் வழக்கு தொடுக்க வாய்ப்பிருக்கிறது. நியாயமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வுகளெல்லாம் சற்று தாமதமாகும்.

 
கன்னிப் பெண்களே! கல்யாணம் தாமதமாகும். காதல் விஷயத்திலும் தெளிவாக முடிவெடுக்க முடியாமல் போகும். கொஞ்சம் தள்ளியே இருங்கள். எஸ்.எம்.எஸ்., இமெயிலை கவனமாக கையாளுங்கள். முன்பின் தெரியாத நபர்களை நம்பி சொந்த விஷயங்களையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். தைராய்டு பிரச்னை, வயிற்று வலி, தோலில் அலர்ஜி வந்துப் போகும். பெற்றோருக்கு தெரியாமல் எந்த நட்பும் வேண்டாம். சிலருக்கு வேலை அமையும்.
 
மாணவ-மாணவிகளே! தொடக்கத்திலிருந்தே படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். விடைகளை எழுதிப்பாருங்கள். கூடாப்பழக்க முள்ளவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது. கட்டுரை, பேச்சு, இலக்கிய போட்டிகளில் பரிசு பெறுவீர்கள். நீங்கள் விரும்பிய பாடப் பிரிவில் சேர சிலரின் சிபாரிசை நாடுவீர்கள்.
 
கலைத்துறையினரே! போட்டிகள் இருக்கும். வதந்திகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். உங்கள் உழைப்பிற்கு சிலர் உரிமை கொண்டாடுவார்கள்.  
அரசியல்வாதிகளே! ஆதாரமின்றி மேடையில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். கோஷ்டி பூசலில் சிக்குவீர்கள். தலைமையை மீறி எந்த முயற்சியிலும் இறங்க வேண்டாம். 
 
இந்த குருமாற்றம் முயன்று தவறி ஒரளவு முன்னேற வைக்கும்.
 
பரிகாரம்:
 

உளுந்தூர் பேட்டைக்கு அருகில் பரிக்கல் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மரை துவாதசி திதி நாளில் சென்று வணங்குங்கள். ஆதரவற்ற முதியவருக்கு உதவுங்கள்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2016 - 17 (ரிஷபம்)

பிரச்சனைகளை கண்டு அஞ்சாதவர்களே! இதுவரை உங்களின் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ம் இடத்தில் அமர்ந்துக் கொண்டு உங்களை எந்த வேலைகளையும் முழுமையாக முடிக்க விடாமல் திணறடித்ததுடன், கைக்கு எட்டியதையெல்லாம் வாய்க்கு எட்ட விடாமல் தடுத்து, தாயாருடன் மனஸ்தாபங்களையும், அவருக்கு ஆரோக்யக் குறைகளையும் ஏற்படுத்தி வந்த குருபகவான் 02.08.2016 முதல் 01.09.2017 வரை உங்கள் ராசிக்கு பூர்வ புண்ய ஸ்தானமான 5-ம் வீட்டில் அமர்கிறார்.

இனி எதிலும் வெற்றி உண்டாகும். உங்களுடைய அடிப்படை வசதி, வாய்ப்புகளும் அதிகமாகும். கழுத்தை நெருக்கிப் பிடித்த கடன் தொல்லைகளை கொஞ்சம் கொஞ்சமாக பைசல் செய்யுமளவிற்கு பணவரவு அதிகரிக்கும். வருடக் கணக்கில், மாதக் கணக்கில், நாள் கணக்கில் கிடப்பில் கிடந்த காரியங்களெல்லாம் இனி அடுத்தடுத்து முடிவடையும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். சோர்ந்திருந்த முகம் மலரும். செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.

கணவன்-மனைவிக்குள் நிலவி வந்தப் பனிப்போர் நீங்கும். தாம்பத்யம் இனிக்கும். எத்தனையோ, கோவில் குலம் சுற்றியும், எவ்வளவோ மருத்துவரை அணுகி மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் வீட்டில் துள்ளி விளையாட ஒரு பிள்ளை இல்லையே என கவலைப்பட்டுக் கொண்டிருந்தீர்களே! இனி அழகு, அறிவுள்ள குழந்தை பிறக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையறிந்துப் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். மகளுக்கு வரன் தேடி அலைந்து அலுத்துப் போனீர்களே! நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல குடும்பத்திலிருந்து மணமகன் அமைவார். திருமணமும் முடியும். மகனின் உயர்கல்வி, உத்யோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும். கண்டும் காணாமல் சென்றுக் கொண்டிருந்த உறவினர்கள் வலிய வந்துப் பேசத் தொடங்குவார்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள்.

உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் உங்கள் மீது உண்மையான அக்கறை உள்ளவர்கள் யார் என்பதை உணர்ந்து அவர்களிடம் மட்டும் இனி உறவுக் கொண்டாடுவீர்கள். தாயாருடனான மோதல்கள், அவருக்குக் இருந்து வந்த மருத்துவச் செலவுகளெல்லாம் விலகும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். எதிர்தரப்பினர் வாய்தா வாங்கி தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். ஆழ்ந்த உறக்கமும் வரும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

 
குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்கள் ராசியை பார்ப்பதால் தோற்றப் பொலிவுக் கூடும். கோபம் குறையும் இனி சாந்தமாவீர்கள். பழைய நகையை மாற்றி புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.
 
குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்களின் 9-ம் வீட்டை பார்ப்பதால் மாறுபட்ட யோசனைகள் மனதில் உதயமாகும். வி.ஐ.பிகளுக்கு நெருக்கமாவீர்கள். தந்தையாரின் உடல் நிலை சீராகும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். அடகிலிருந்த பத்திரங்களை மீட்பீர்கள்.
 
உங்களின் லாப வீடான 11-ம் வீட்டை குரு தனது 7-ம் பார்வையால் பார்ப்பதால் தொட்ட காரியம் துலங்கும். மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. பங்குச் சந்தை மூலமாக பணம் வரும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். விருந்தினர்களின் வருகை அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். புது பதவிக்கு உங்களுடைய பெரிய பரிந்துரை செய்யப்படும்.  
 
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்கள் சுகாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 02.8.2016 முதல் 19.9.2016 வரை குருபகவான் பயணிப்பதால் தள்ளிப் போன வேலைகள் முடியும். நாடாளுபவர்களின் அறிமுகம் கிடைக்கும். சிலர் இருக்கும் வீட்டை இடித்து கூடுதல் அறை அல்லது தளம் அமைக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். வங்கிக் கடன் உதவி கிட்டும். பெற்றோரின் ஆரோக்யம் சீராகும். அரசால் அனுகூலம் உண்டு. அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.
 
20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை உங்கள் சேவகாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் உங்களுடைய பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படத் தொடங்குவீர்கள். சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதர வகையில் நன்மை உண்டாகும். நவீனரக வாகனம் மற்றும் கைப்பேசி வாங்குவீர்கள். சபைகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். உங்களை அவமதித்தவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள்.
 
உங்கள் சப்தம-விரையாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை குருபகவான் செல்வதால் கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகமாகும். மனைவி உங்களுடைய புது முயற்சிகளை ஆதரிப்பார். மனைவிவழி உறவினர்களும் உறுதுணையாக இருப்பார்கள். திடீர் பயணங்களால் செலவுகள் இருக்கும். கடந்த கால கசப்பான சம்பவங்களை நினைத்து அவ்வப்போது டென்ஷனாவீர்கள்.
 
17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 6-ம் வீட்டில் குரு மறைவதால் குடும்பத்தில் சின்ன சின்ன குழப்பங்கள் வரக்கூடும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்துப் போகும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். ஒற்றை தலை வலி, காலில் அடிப்படுதல், சிறுநீர் பாதையில் அழற்சி, தோலில் தடிப்பு, பசியின்மை, தூக்கமின்மை வந்துச் செல்லும்.
 
குருபகவானின் வக்ர சஞ்சாரம்:
 
22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் சுபச் செலவுகள் அதிகமாகும். நீண்ட காலமாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த சுற்றுலா தலங்களுக்கு குடும்பத்தினருடன் சென்று வருவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். மாற்றுமொழிப் பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். சகோதர வகையில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும்.

வியாபாரத்தில் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு புது யுக்திகளை கையாளுவீர்கள். பற்று வரவு உயரும். புதிய சரக்குகள் கொள்முதல் செய்வதற்கு பண உதவிகள் கிடைக்கும். வேலையாட்களின் பிடிவாதப் போக்கு மாறும். உங்களின் புதிய திட்டங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். கடையை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பிரபலமான இடத்திற்கு சிலர் மாற்றுவீர்கள். வியாபாரிகள் சங்கத்தில் புது பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும். ரியல் எஸ்டேட், மூலிகை, ஏற்றுமதி-இறக்குமதி, ஜுவல்லரி வகைகளால் லாபம் வரும். தொல்லை தந்த பங்குதாரரை மாற்றிவிட்டு புதியவரை சேர்ப்பீர்கள்.
 
உத்யோகத்தில் அங்கும் இங்குமாக அலைக்கழிக்கப்பட்டீர்களே! அடிக்கடி அவமானப்படுத்தப்பட்டீர்களே! அதிக நேரம் உழைத்தும் அதிகாரிகளை திருப்திபடுத்த முடியாமல் அல்லாடினீர்களே! இனி அலுவலகத்தில் நிம்மதி கிட்டும். உங்களைக் குறை சொல்லிக் கொண்டிருந்த சக ஊழியர்களும் இனி மதிக்கத் தொடங்குவார்கள். வேலைச்சுமை குறையும். உயரதிகாரிகளும் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். உங்கள் ஆலோசனைகளையும் ஏற்றுக் கொள்வார்கள். கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்வீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வுத் தேடி வரும். சிலர் உத்யோகம் சம்பந்தமாக அயல்நாடு சென்று வருவீர்கள்.

கன்னிப் பெண்களே! காதலும் கனியும். கல்யாணமும் கூடி வரும். போலித்தனமாக பழகியவர்களிடமிருந்து ஒதுங்குவீர்கள். விடுபட்ட பாடத்தை முடிப்பீர்கள். எதிர்பார்த்த நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் உத்யோகம் அமையும். பெற்றோரின் கனவுகளை நனவாக்குவீர்கள். தாயாருடனான இடைவெளி குறையும்.
 
மாணவ-மாணவிகளே! படிப்பில் ஆர்வம் பிறக்கும். வகுப்பறையில் சக மாணவர்கள் மத்தியில் பாராட்டப்படுவீர்கள். தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் விரும்பிய பாடப்பிரிவில் சேருவீர்கள். ஆசிரியரின் நன்மதிப்பை பெறுவீர்கள். விளையாட்டிலும் பதக்கம் பெறுவீர்கள்.
 
கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமாகும். அரசால் கௌரவிக்கப்படுவீர்கள். உங்களுடைய கலைத் திறன் வளரும்.
 
அரசியல்வாதிகளே! தலைமைக்கு ஆலோசனை சொல்லும் அளவிற்கு நெருக்கமாவீர்கள். கட்சிக்குள் இருந்த சலகலப்புகள் நீங்கும். சகாக்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.
 
ஆகமொத்தம் இந்த குருமாற்றம் வருமானத்தையும், வசதி, வாய்ப்புகளையும் பெற்று தரும்.
 
பரிகாரம்:
 

மேல்மருவத்தூர் அருகிலுள்ள அச்சிறுப்பாக்கம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீஆட்சீஸ்வரர் மற்றும் உமையாட்சீஸ்வரரையும் பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள். தாயை இழந்து தவிக்கும் பிள்ளைகளுக்கு உதவுங்கள்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2016 - 17 (மிதுனம்)

பந்த, பாசத்திற்கு கட்டுப்பட்டவர்களே! இதுவரை உங்களின் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு உங்களின் புது முயற்சிகளை முடக்கி வைத்ததுடன், எந்த ஒரு விஷயத்திலும் ஆர்வமின்மையையும், பிடிப்பற்றப்போக்கையும் ஏற்படுத்தி வந்த குருபகவான் இப்போது 02.8.2016 முதல் 1.09.2017 வரை 4-ம் வீட்டில் அமர்வதால் எதிலும் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப் பூர்வமாகவும், அனுபவப்பூர்வமாக அணுகுவது நல்லது. சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து செயல்படும் சாமர்த்தியத்தை கற்றுக் கொள்ளுங்கள்.
 
உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதை தெரிந்துக் கொள்வதில் குழப்பம் வரும். எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகள் துரத்தும். சிக்கனமாக இருக்கலாம் என்று நீங்கள் எப்போது நினைத்தாலும் முடியாமல் போகும். அடுத்தடுத்த வேலைச்சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். சிலர் பூர்வீகத்தை விட்டு வேறு ஊருக்கு மாற வேண்டியது வரும். இடப்பெயர்ச்சி உண்டு. தாயாருக்கு நெஞ்சு வலி, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் வரக்கூடும்.
 
அவர் ஏதோ கோபத்தில் உங்களை சொல்லியிருந்தால் அதையெல்லாம் பொருட்படுத்திக் கொண்டிருக்காதீர்கள். இலவசமாக சில கூடாப்பழக்க வழக்கங்கள் உங்களைத் தொற்றிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. எனவே உங்களுடைய தனித்தன்மையை இழந்து விடாதீர்கள். குடும்பத்தில் பனிப்போர், ஈகோப் பிரச்னையால் போட்டா, போட்டிகள் அதிகரிக்கும். நிம்மதி குறையும். உத்யோகத்தின் பொருட்டோ அல்லது வீண் சந்தேகம், சச்சரவுகளால் கணவன்-மனைவிக்குள் பிரிவுகள் ஏற்படக்கூடும். மனைவி உங்களுடைய குற்றம், குறைகளை சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள்.
 
அரசாங்க அப்ரூவல் வாங்காமல் வீடு கட்டத் தொடங்க வேண்டாம். வெளியூரிலோ, நகர எல்லைப் பகுதியிலோ சொத்து வாங்கியிருந்தால் அவ்வப்போது சென்று கண்காணித்து வருவது நல்லது. சிலர் உங்களுடைய இடத்தை ஆக்கிரமிக்கவும் வாய்ப்பிருக்கிறது. எனவே பட்டா, வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் சரி பார்த்து வாங்குவது நல்லது. விமர்சனங்களை கண்டு வெம்ப வேண்டாம். ஏறிக் கொண்டேப் போகும் கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள்.
 
புதிது புதிதாக வரும் விளம்பரங்களைக் கண்டு ஏமாந்து சோப்பு, ஷாம்பு, வாசனை திரவியங்களையெல்லாம் மாற்றிக் கொண்டிருக்காதீர்கள். அலர்ஜி, இன்பெக்ஷன் வரக்கூடும். உடல் அசதி, சோர்வு, கை, கால் வலி வந்து விலகும். எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை உட்கொள்வது நல்லது. அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். வாகனத்தின் ஓட்டுநர் உரிமத்தை சரியான நேரத்தில் புதுப்பிக்க தவறாதீர்கள்.
 
போக்குவரத்து விதிகளை மீறி வாகனத்தை இயக்க வேண்டாம். சின்ன சின்ன அபராதத் தொகை செலுத்த வேண்டி வரும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வாழ்க்கையில் வெற்றி பெறுவோமோ, மாட்டோமோ இப்படியே காலம் முடிந்துவிடுமோ என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். ஏதோ ஒன்றை இழந்ததைப் போல அவ்வப்போது இருப்பீர்கள்.
 
கடந்த காலத்தில் ஏற்பட்ட நம்பிக்கை துரேகமான செயல்களை நினைத்து வருந்துவீர்கள். உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். மற்றவர்களுக்காக சாட்சி கையெழுத்திட வேண்டாம். தூங்கும் இடத்தையும் அடிக்கடி மாற்ற வேண்டாம். பணப்பட்டுவோட விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். முடிந்த வரை சொந்த வாகனத்தில் இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும்.
 
குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டை பார்ப்பதால் அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் உதவிகள் உண்டு. வெளியூர் பயணங்களால் பயனடைவீர்கள். உங்களின் உத்யோகஸ்தமான 10-ம் வீட்டை குரு தனது 7-ம் பார்வையால் பார்ப்பதால் புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். உத்யோகத்தில் அமைதி உண்டாகும். புது பதவி, பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
 
சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டை குரு பார்ப்பதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேகம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். நீண்ட காலமாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.     
 
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்கள் தைரிய ஸ்தானாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 02.8.2016 முதல் 19.9.2016 வரை குருபகவான் பயணிப்பதால் தைரியம் பிறக்கும். தன்னிச்சையாக செயல்படத் தொடங்குவீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டு மனை வாங்குவீர்கள். இளைய சகோதர வகையில் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாகும்.
 
20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை உங்கள் தனாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் சாமர்த்தியமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு மகிழ்வீர்கள். திருமணம் கூடி வரும். குழந்தை பாக்யம் கிட்டும்.
 
உங்கள் சஷ்டம-லாபாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை குருபகவான் செல்வதால் உடன்பிறந்தவர்கள் உங்களைத் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். சொத்து வாங்குவதாக இருந்தால் தாய்பத்திரத்தை சரி பார்த்து வாங்குவது நல்லது. தோல்விமனப்பான்மையால் மனஇறுக்கம் உண்டாகும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். கௌரவக் குறைவான சம்பவங்கள் அவ்வப்போது நிகழக்கூடும்.
 
17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 5-ம் வீட்டில் குரு அமர்வதால் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பூர்வீக சொத்தில் உங்கள் ரசனைக் கேற்ப மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகள் நீண்ட காலமாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். உறவினர்கள் மதிப்பார்கள். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடன் தொகையை குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி பைசல் செய்வீர்கள். 
 
குருபகவானின் வக்ர சஞ்சாரம்:
 
22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடிவடையும். நெருக்கடிகளை சமாளிக்கும் ஆற்றலும் உங்களுக்கு கிடைக்கும். தன்னம்பிக்கை தரக்கூடிய நூல்களை படித்துத் தெளிவீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். சிலர் வாஸ்து படி வீட்டை மாற்றி, விரிவுப்படுத்துவீர்கள். அவ்வப்போது தொண்டைப் புகைச்சல், வயிற்று உப்புசம், முதுகுத் தண்டில் வலி வந்துப் போகும். நல்லவர்களுடன் நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள்.
 
வியாபாரத்தில் சின்ன சின்ன நஷ்டங்கள் வந்துப் போகும். விளம்பர யுக்திகளை கையாளுங்கள். தொழில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். வேலையாட்களுக்கு அதிக சம்பளம் கொடுத்தும், சலுகைகள் கொடுத்தும் எந்த பிரயோஜனமும் இல்லையே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள்.

கூட்டுத் தொழிலை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. வேறு வழியில்லாமல் கூட்டுத் தொழில் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் முறைப்படி ஒப்பந்தங்களை பதிவு செய்வது நல்லது. எதிர்பார்த்த ஆடர் தாமதமாக வரும். வாடிக்கையாளர்களுடன் கனிவாகப் பழகுங்கள். கட்டிட உதிரி பாகங்கள், கமிஷன், கண்சல்டன்சி, காய்கறி வகைகளால் லாபமடைவீர்கள். கடையை வேறிடத்திற்கு மாற்ற வேண்டிய நிர்பந்தத்திற்குள்ளாவீர்கள்.

 
உத்யோகத்தில் மேலதிகாரி உங்களுக்கு சாதகமாக இருக்கிறாரா, பாதகமாக இருக்கிறாரா என்று உணர்ந்துக் கொள்ள முடியாமல் போகும். யார் எப்படி இருந்தாலும் நம்முடைய கடமையை சரிவர செய்துவிடுவோம் என்ற மனப்பான்மையில் நீங்கள் கடினமாக உழைப்பீர்கள். நேர்மூத்த அதிகாரியை விட, மேல்மட்ட அதிகாரி ஆதரவாக இருப்பார். வேலைச்சுமை இருக்கும். சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னைகள் வந்துப் போகும். அடிக்கடி விடுப்பில் செல்ல வேண்டாம். விரும்பத்தகாத இடமாற்றங்களும் வரும்.
 
கன்னிப் பெண்களே! மனசை அலைபாயவிடாமல் ஒருநிலை படுத்துங்கள். திடீரென்று அறிமுகமாகும் நண்பர்களை நம்பி பழைய நண்பர்களை விட்டுவிடாதீர்கள். ஃபேஸ் புக், டிவிட்டரை கவனமாக பயன்படுத்துங்கள். சிலர் உங்களுடைய பெயருக்கு கலங்கம் விளைவிக்க முயற்சிப்பார்கள். தாயாருடன் மோதல்கள் வரும். கல்யாணம் சற்று தாமதமாகி முடியும். பெற்றோரின் அரவணைப்பு அதிகரிக்கும்.
 
மாணவ-மாணவிகளே! படிப்பு மட்டுமல்லாமல் ஸ்போக்கன் இங்கிலீஷ் போன்ற மொழியறிவுத் திறனையும் நீங்கள் அதிகப்படுத்திக் கொள்வது நல்லது. அறிவியல் சம்பந்தமான இடங்களுக்குச் சென்று வருவது நல்லது. பள்ளி மாற வேண்டி இருக்கும். போராடி சில பாடங்களில் வெற்றி பெறுவீர்கள்.
 
கலைத்துறையினரே! வீண் வதந்திகளாலும், கிசுகிசுத் தொந்தரவுகளாலும் உங்கள் புகழ் குறையும். கிடைக்கின்ற வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும்.
 
அரசியல்வாதிகளே! வழக்கால் அலைக்கழிக்கப்படுவீர்கள். சுற்றியிருப்பவர்களில் யாரை நம்புவது, யாரை தவிர்ப்பது என்பது புரியாமல் தவிப்பீர்கள். சகாக்கள் சிலர் உங்கள் மீது அதிருப்தியடைவார்கள்.
 
இந்த குருப்பெயர்ச்சி வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுத் தரும்.
 
பரிகாரம்:
 

திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாளை ஏகாதசி திதி நாளில் சென்று வணங்குங்கள். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுங்கள்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2016 - 17 (கடகம்)

நேர்மையை நேசிப்பவர்களே! இதுவரை உங்களுடைய ராசிக்கு தன வீடான 2-வது வீட்டில் அமர்ந்துக் கொண்டு உங்களுக்கு பணவரவையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தந்த குருபகவான் இப்போது 3-ம் வீட்டிற்கு அடியெடுத்து வைக்கிறார். 02.8.2016 முதல் 1.09.2017 வரை உங்களின் சஷ்டம-பாக்ய ஸ்தானாதிபதியான குருபகவான் மூன்றாம் வீட்டில் மறைவதால் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு வேலைகளையும் முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று, முறை முயன்று போராடி முடிக்க வேண்டி வரும்.
 
அந்தஸ்து புகழுக்காக கைக்காசை கரைத்துக் கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தில் அவ்வப்போது அமைதியில்லாமல் போகும். கணவன்-மனைவிக்குள் சச்சரவுகள் வந்தாலும், அன்பும், அன்யோன்யமும் குறையாது. பணம் வாங்கித் தருவது, கல்யாண விஷயத்தில் குறுக்கே நிற்க வேண்டாம். இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம். வங்கிக் காசோலையில் முன்னரே கையப்பமிட்டு வைக்காதீர்கள்.
 
வாயுக் கோளாறால் நெஞ்சு வலிக்கும். அச்சப்பட வேண்டாம். கொழுப்புச் சத்து அதிகமுள்ள பதார்த்தங்களை உணவில் சேர்த்துக் கொள்ளாதீர்கள். நடைபயிற்சி அவசியம். எதையோ இழந்ததைப் போல் ஒரு மனவாட்டத்துடன் காணப்படுவீர்கள். யாரேனும் உங்களைப் பற்றி விமர்சித்தால் அதைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள்.
 
"காய்த்த மரம் தான் கல்லடிப்படும் என்பதை மறந்து விடாதீர்கள்". அதேப் போல நெருங்கிய நண்பர்கள், உறவினர்களாக இருந்தாலும் இடைவெளி விட்டு பழகுவது நல்லது. அவர்களை நம்பி பெரிய முடிவுகளெல்லாம் எடுக்க வேண்டாம். உங்களுக்கு பல வருட காலமாக நல்ல நண்பர்களாக இருப்பவர்களை மற்றவர்களுக்கு இப்போது அறிமுகப்படுத்தி வைக்க வேண்டாம். எதிர்வீட்டுக்காரர்களை அனுசரித்துப் போவது நல்லது. சின்ன சின்ன பிரச்னைகளையெல்லாம் பெரிதாக்கிக் கொள்ளாதீர்கள். அடுத்தடுத்து தோல்விகளையும், ஏமாற்றங்களையும் சந்திப்பாக நீங்கள் நினைத்துக் கொள்வீர்கள்.
 
குரு தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டைப் பார்ப்பதால் உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். ஆடை, ஆபரணம் சேரும். முக்கியஸ்தர்களின் நட்பு கிடைக்கும். வாகனப் பழுதை சீர் செய்வீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மோதல்கள் விலகும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது வேலை அமையும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள்.
 
குருபகவான் தனது 7-ம் பார்வையால் உங்களின் 9-ம் வீட்டை பார்ப்பதால் பிதுர்வழி சொத்து கைக்கு வரும். தந்தையாரின் ஆரோக்யம் சீராகும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். தந்தைவழி உறவினர்களால் உதவிகள் உண்டு. சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். பழைய கடனை தீர்க்க புது வழி யோசிப்பீர்கள்.
 
குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் லாப வீட்டை பார்ப்பதால் உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். வீட்டில் தள்ளிப் போன சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும். குழந்தை பாக்யம் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் பிரார்த்தனைகளை முடிக்க நேரம் கிடைக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.
 
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்கள் தனாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 02.8.2016 முதல் 19.9.2016 வரை குரு பயணிப்பதால் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். திடீர் பணவரவு உண்டு. அரசு காரியங்கள் உடனே முடியும். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். வங்கி உதவும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். கண் வலி குறையும்.
 
20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை உங்கள் ராசிநாதனான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் பிரபலமாவீர்கள். வருமானம் உயரும். அழகு, ஆரோக்யம் கூடும். சொந்தம் பந்தங்களின் வருகையால் வீடு களை கட்டும். குலதெய்வப் பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
 
உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை குருபகவான் செல்வதால் நினைத்த காரியங்களை முடிப்பீர்கள். உங்களின் புகழ், கௌரவம் ஒருபடி உயரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும். சகோதர சகோதரிகளுக்காக எவ்வளவு செய்தும் நம்மை புரிந்து கொள்ளவில்லையே, என்று அவ்வப்போது வருந்தினீர்களே! அந்த நிலை மாறும். பாசமாக நடந்து கொள்வார்கள். சிறுக சிறுக சேமித்து வைத்ததில் புறநகர் பகுதியிலாவது வீட்டு மனை வாங்க முயற்சி செய்வீர்கள்.
 
17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 4-ம் வீட்டில் குரு நுழைவதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகும். தாயாரின் உடல் நலம் பாதிக்கும். அவருடன் கசப்புணர்வுகள் வந்து விலகும். வசதி, செல்வாக்கை கண்டு மயங்கி தவறானவர்களுடன் சென்றுவிட வேண்டாம். வாகனத்தில் செல்லும் போது மறவாமல் தலைக்கவசம் அணிந்துச் செல்லுங்கள். சொத்து வாங்கும் போது பட்டா, வில்லங்கம் சான்றிதழ்களையெல்லாம் சரி பார்த்து வாங்குவது நல்லது. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். யாரும் உங்களை சரியாகப் புரிந்துக் கொள்ளவில்லையே என வருத்தப்படுவீர்கள்.
 
குருபகவானின் வக்ர சஞ்சாரம்:
 
22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும். உங்கள் குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். முன்கோபத்தை விட்டுவிடுவது நல்லது. உதவி செய்கிறேன் என்று சொல்லியிருந்தவர்கள் உங்களுக்கு உதவாமல் போகக்கூடும். எனவே மாற்றுவழியை யோசிப்பது நல்லது. பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். என்றாலும் வளர்ச்சி தடைப்படாது.
 
வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலைவிட வேண்டாம். தொடர்ந்து லாபம் பெற முடியவில்லையே என்ற ஒரு கவலைகளும் இருக்கும். ஒரு வாரம் நன்றாக இருந்தால் மறுவாரம் வருமானம் இல்லாமல் போகிறதே என்று நினைத்து கலங்குவீர்கள். வியாபாரத்தை நம்பி ஒரு லோன் வாங்கலாம் என்று நினைத்தால் கூட முடியாமல் போகிறதே நிலையற்ற வருமானமாகி விட்டது என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். பேராசைப்பட்டு நட்டத்தை சந்திக்காதீர்கள்.
 
வேலையாட்களுக்கு எவ்வளவு உதவினாலும் நன்றி மறந்த நிலையில் நடந்துக் கொள்வார்கள். அதை நினைத்து வருத்தப்படுவீர்கள். சிலர் கடன் வாங்கி கடையை விரிவுப்படுத்தி, அழகுப்படுத்துவீர்கள். கூட்டுத் தொழிலில் சிலர் நம்பிக்கையான பங்குதாரரை விட்டு பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். திடீரென்று அறிமுகமாகி கொஞ்ச காலம் பழகியவர்களை பங்குதாரர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டாம். ஸ்டேஷனரி, போடிங், லாஜிங், பெட்ரோ-கெமிக்கல், டிராவல்ஸ் வகைகளால் ஆதாயமடைவீர்கள்.
 
உத்யோகத்தில் பணிகளை கொஞ்சம் போராடி முடிக்க வேண்டி வரும். திறமை இருந்தும், கடினமாக உழைத்தும் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டேயிருப்பீர்கள். அதிகாரிகளின் ஆதரவுக் கூடும். சில நேரங்களில் அதிகாரிகள் கூடுதலாக உங்களுக்கு வேலைகளை தருவார்கள். சலித்துக் கொள்ளாமல் அந்த வேலைகளை முடித்துக் கொடுப்பது நல்லது. சக ஊழியர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். அடிக்கடி இடமாற்றம் வரும்.
 
கன்னிப்பெண்களே! எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சிலர் தடைப்பட்ட உயர்கல்வியை தொடரும் வாய்ப்பு கிட்டும். காதல் கசக்கும். போட்டித் தேர்வுகளில் போராடி வெற்றி பெறுவீர்கள். சிலருக்கு அண்டை மாநிலத்தில் வேலை அமையும்.
 
மாணவ-மாணவிகளே! சின்ன சின்ன தவறுகளையும் திருத்திக் கொள்ளுங்கள். நட்பு வட்டம் விரிவடையும். வகுப்பறையில் ஆசிரியரிடம் தயங்காமல் சந்தேகங்களை கேளுங்கள். விளையாட்டை தவிர்த்து படிப்பில் ஆர்வம் காட்டுங்கள். கணக்கு, வேதியில் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள்.
 
கலைத்துறையினரே! மறைமுகப் போட்டிகள் அதிகரிக்கும். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். சுய விளம்பரத்தை விட்டு விட்டு யதார்த்தமான படைப்புகளை தரப்பாருங்கள்.
 
அரசியல்வாதிகளே! தலைமையை மீறி எந்த முயற்சியிலும் இறங்க வேண்டாம். தொகுதி மக்களை மறக்காதீர்கள். சபை நாகரிகம் அறிந்து பேசுங்கள்.
 
இந்த குரு மாற்றம் முயற்சிகளை முடங்கினாலும் மாறுபட்ட அணுகுமுறையால் முன்னேற வைக்கும்.
 
பரிகாரம்:
 

சென்னை திருவொற்றியூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவடிவுடையம்மனை பஞ்சமி திதி நாளில் சென்று வணங்குங்கள். சாலை துப்பரவுப் பணியாளர்களுக்கு உதவுங்கள்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2016 - 17 (சிம்மம்)

எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்களே! இதுவரை உங்கள் ராசிக்குள் ஜென்ம குருவாக அமர்ந்துக் கொண்டு வாழ்க்கையில் எந்த விதமான சுகங்களையும் முழுமையாக அனுபவிக்க முடியாமல் எப்போதுமே சோகக்கடலில் மூழ்கடித்தாரே! காரண காரியமே இல்லாமல் கோபப்பட்டு பிரச்னைகளில் சிக்க வைத்து வேடிக்கை பார்த்தாரே! எதையும் ஆர, அமர யோசிக்க விடாமல் ஒரு வித அச்சத்தையும், படபடப்பையும் ஏற்படுத்தினாரே! எப்போதும் மருந்து, மாத்திரை கையுமாக சுற்றித் திரிய வைத்தாரே! குடும்பத்திலும் உங்களுக்கென்று தனி அங்கீகாரம் இல்லாமல் செய்தாரே! எவ்வளவு உழைத்தாலும் நல்ல பெயர் இல்லையே என்று ஆதங்கப்பட்டு புலம்ப வைத்தாரே! இப்படி பலவகையிலும் இன்னல்களை மாறி மாறி தந்து மனதில் அமைதியே இல்லாமல் நிலைக்குலையச் செய்த குருபகவான் இப்போது 02.8.2016 முதல் 1.09.2017 வரை உங்கள் ராசியை விட்டு விலகி தன வீடான 2-ம் வீட்டில் அமர்வதால் முடங்கிக் கிடந்த நீங்கள் இனி புத்துயிர் பெறுவீர்கள்.
 
தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தையெல்லாம் திருப்பித் தருவீர்கள். குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால் இனி குடும்பத்திலும் சந்தோஷம் குடிக்கொள்ளும். கல்வியாளர்கள், ஆன்மிக அறிஞர்களின் நட்புக் கிடைக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும்.
 
சோர்வு, சலிப்பு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். இருள் சூழ்ந்த உங்கள் முகம் இனி பிரகாசிக்கும். வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னையால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். மழலை பாக்யம் கிடைக்கும். உங்களை கிள்ளுக் கீரையாக நினைத்தவர்கள் மத்தியில் விஸ்வரூபம் எடுப்பீர்கள். நீங்கள் சொல்லாததையும் சொன்னதாக நினைத்துக் கொண்டு மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த உறவினர்கள் வலிய வந்துப் பேசத் தொடங்குவார்கள். மருந்து, மாத்திரையிலிருந்து விடுபடுவீர்கள். நோய் குணமாகும். உடல் நலம் சீராகும்.
 
சபைகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். தங்க ஆபரணம் வாங்குவீர்கள். இழுபறியாக இருந்து வந்த வேலைகளெல்லாம் முழுமையாக முடிவடையும். கோபம் குறையும். கனவுத் தொல்லையால் தூக்கமில்லாமல் தவித்தீர்களே! இனி ஆழ்ந்த உறக்கம் வரும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களெல்லாம் வலிய வந்து மன்னிப்புக் கேட்பார்கள். ஷேர் மூலமாக பணம் வரும். அரசாங்க பதவி சிலருக்கு தேடி வரும். புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள். தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.
 
குரு தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டைப் பார்ப்பதால் மறைமுக எதிரிகளை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. சொந்த ஊர் பொதுக் காரியங்களையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். தோல்விமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், லேப்-டாப் போன்ற மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். அதிக சம்பளத்துடன் அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும்.
 
குருபகவான் தனது 7-ம் பார்வையால் உங்களின் 8-ம் வீட்டை பார்ப்பதால் திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் அனுசரணையாக நடந்துக் கொள்ளுங்கள். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வேற்றுமதம், மாற்றுமொழியினரால் நன்மை உண்டாகும். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். சொந்த-பந்தங்களின் அன்புத்தொல்லைகள் வரக்கூடும்.
 
குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் 10-ம் வீட்டை பார்ப்பதால் வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள். வேலைச்சுமை குறையும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். சொந்தமாக சிலர் தொழில் தொடங்குவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். தந்தையாரின் ஆரோக்யம் சீராகும்.
 
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
02.8.2016 முதல் 19.9.2016 வரை உங்கள் ராசியாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் குரு பயணிப்பதால் உங்களின் ஆளுமைத் திறன், நிர்வாகத் திறமை அதிகரிக்கும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். பெரிய பொறுப்புகள் தேடி வரும். உறவினர்கள் மதிப்பார்கள். அரசாங்க கெடுபிடிகள் விலகும். அரசால் ஆதாயம் உண்டு. வீடு மனை வாங்குவீர்கள். நோய் விலகும்.
 
20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை உங்கள் விரையஸ்தானாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் அடிக்கடி பதட்டப்படுவீர்கள். முன்கோபத்தால் ஆரோக்யம் குறையும். தூக்கம் கெடும். அனாவசியமாக அடுத்தவர்களை சந்தேகப்பட வேண்டாம். தவிர்க்கமுடியாத செலவுகளும், தர்ம சங்கடமான சூழ்நிலையும் அதிகரிக்கும். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்யாதீர்கள். ஒரே நாள் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
 
25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை உங்களின் யோகாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் குருபகவான் செல்வதால் திடீர் யோகம் உண்டாகும். வசதி, வாய்ப்புகள் கூடும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளை பாக்யம் கிடைக்கும். புதிதாக சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள்.
 
17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 3-ம் இடத்தில் குரு மறைவதால் புதிய முயற்சிகள் தாமதமாகி முடியும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட வேண்டாம். இளைய சகோதர வகையில் மனவருத்தம் வரும். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள்.
 
குருபகவானின் வக்ர சஞ்சாரம்:
 
22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் அநாவசியமாக யாருக்காகவும்« எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். ருசிக்காக சாப்பிடாமல் பசிக்காக சாப்பிடுவது நல்லது. உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். திடீரென்று அறிமுகமாகுபவர்களால் ஆதாயமடைவீர்கள். சிறுசிறு நெருப்புக் காயங்கள் ஏற்படக்கூடும்.
 
வியாபாரத்தில் இனி பழைய தவறுகள் நிகழாத வண்ணம் பார்த்துக் கொள்வீர்கள். தொழிலில் ஆர்வம் பிறக்கும். இரட்டிப்பு லாபம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். மாறி வரும் சந்தை ரகசியங்களை தெரிந்துக் கொள்வீர்கள். மக்களின் ரசனையைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப புதிய சரக்குகள் கொள்முதல் செய்து லாபம் ஈட்டுவீர்கள். வி.ஐ.பிகளும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள்.
 
ஏமாற்றிக் கொண்டிருக்கும் வேலையாட்களை நீங்கி விட்டு கல்வித் தகுதியில் சிறந்த, அனுபவமிக்க, பொறுப்புணர்வு வாய்ந்த வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். சந்தையில் மதிக்கப்படுவீர்கள். துரித உணவகம், ஆட்டோ மொபைல், கிப்ட் ஷாப், மருந்து, ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். விலகிச் சென்ற பழைய பங்குதாரர் மீண்டும் வந்திணைவார். கடையை உங்கள் ரசனைக் கேற்ப அழகுப்படுத்தி, விரிவுப்படுத்துவீர்கள். சிலர் புது கிளைகள் தொடங்குவீர்கள்.
 
உத்யோகத்தில் உங்கள் கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். சவாலான காரியங்களையும் சாராணமாக செய்து முடிப்பீர்கள். சில சிறப்பு பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைப்பார்கள். தொந்தரவு தந்த அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். சக ஊழியர்கள் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். சம்பளம் உயரும். புது பொறுப்புகளும், சலுகைகளும் தேடி வரும். உங்கள் அலுவலகம் நவீனமாகும். அலுவலகத்தில் உங்கள் புகழ் பரவும். வழக்கில் வெற்றி பெற்று பெரிய பதவியில் அமர்வீர்கள்.
 
கன்னிப் பெண்களே! நீங்கள் நினைத்தப்படி எல்லாம் நடக்கும். குடும்பத்தில் உள்ளவர்களில் ஒருசிலர் உங்களுடைய காதலைப் புரிந்துக் கொள்வார்கள். கல்யாணம் கூடி வரும். உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். வேலைக் கிடைக்கும். உங்களுக்கிருந்து வந்த மாதவிடாய்க் கோளாறு, வயிற்று வலி, ஹார்மோன் பிரச்னைகள் தீரும்.
 
மாணவ-மாணவிகளே! சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். கடினமான பாடங்களில் கூட அதிக மதிப்பெண் பெறுவீர்கள். வகுப்பறையில் ஆசிரியர் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். கூடாப்பழக்கமுள்ளவர்களின் நட்பிலிருந்து விடுபடுவீர்கள்.
 
கலைத்துறையினரே! சின்ன சின்ன வாய்ப்புகளை கடந்து இப்போது பெரிய வாய்ப்புகளும் வரும். பிரபல கலைஞர்களால் பாராட்டப்படுவீர்கள். வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள்.
 
அரசியல்வாதிகளே! உங்களுடைய ராஜ தந்திரத்தால் எதிரிகளை வீழ்த்துவீர்கள். தொகுதி மக்களிடையே செல்வாக்கு உயரும். இளைஞர்களின் ஆதரவுப் பெருகும். அதிகாரப் பதவி தேடி வரும்.
 
இந்த குருமாற்றம் தொட்டதெல்லாம் துலங்க வைப்பதுடன், எதிலும் முதல் மரியாதையைப் பெற்றுத் தரும்.
 
பரிகாரம்:
 

சூரியனார் கோவிலுக்கு அருகிலுள்ள கஞ்சனூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீநடராஜப் பெருமானை வெள்ளிக் கிழமையில் சென்று தரிசியுங்கள். கட்டிடத் தொழிலாளிக்கு உதவுங்கள்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2016 - 17 (கன்னி)

பழைய அனுபவங்களை பதிவு செய்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 12-வது வீட்டில் அமர்ந்து கொண்டு பணப்பற்றாக்குறையையும், வீண் வதந்திகளையும், மனஇறுக்கத்தையும் ஏற்படுத்தி உங்களுடைய நிம்மதியை சீர்குலைத்த குருபகவான் இப்பொழுது 02.08.2016 முதல் 01.09.2017 வரை உங்கள் ராசிக்குள் அமர்கிறார். அடடா.. ஜென்மகுருவாச்சே! என்ன செய்ய போகிறோமோ என்று அஞ்சாதீர்கள்.
 
ஆனால் ஜென்ம குரு என்பதால் பொறுப்புகள் அதிகரிக்கத்தான் செய்யும். வீரியத்தை விட்டு விட்டு காரியத்தில் முழு கவனம் செலுத்தப்பாருங்கள். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் பார்க்க வேண்டி வரும். குடும்பத்தில் வரும் சின்ன சின்ன பிரச்னைகளைக் கூட பெரிதாக்கிக் கொண்டிருக்காதீர்கள். அனுசரித்துப் போவது நல்லது. எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாத படி செலவுகள் துரத்தும். வாழ்க்கை மீது ஒரு தேடல் இருந்துக் கொண்டேயிருக்கும்.
 
‘‘ஜென்மத்தில் ராமர் வனத்திலே சீதையை சிறை வைத்ததும்’’ என்ற பாடல்படி கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், சச்சரவுகள் வரும். பிரிவு ஏற்படக்கூடும். முடிந்த வரை சகிப்புத்தன்மையுடனும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும் நடந்துக் கொண்டால் நல்லது. மனைவி ஏதேனும் குறைக் கூறினாலும் அதை அப்படியே மறந்து விடுவது நல்லது. அவருடன் எதிர்வாதம் செய்துக் கொண்டிருக்க வேண்டாம். பழசை சொல்லிக் காட்டாதீர்கள்.
 
வங்கிக் கணக்கில் போதிய நிதி இருக்கிறதா என அதிகாரியை ஆலோசித்துவிட்டு பிறகு காசோலை தருவது நல்லது. அவசரப்பட்டு வாக்குறுதிகளை தந்துவிட்டு அதை நிறைவேற்ற முடியாமல் திணற வேண்டாம். சிலர் உங்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வார்கள். உங்களது பெயருக்கும், புகழுக்கும் கலங்கம் விளைவிக்க சிலர் முயற்சி செய்வார்கள். நெருங்கிப் பழகிய ஒரு சிலர் திடீரென்று பார்த்தும் பார்க்காமலும் செல்வார்கள். அதைக் கண்டு பதைபதைக்காதீர்கள்.
 
பண விஷயத்தில் கேரண்டர் கொடுக்க வேண்டாம். ராசியிலேயே குரு அமர்வதால் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். சாதாரணமாக நெஞ்சு வலிக்கும். ஹார்ட் அட்டாக் எதுவும் இருக்குமோ என்றெல்லாம் அஞ்ச வேண்டாம். தேவைப்பட்டால் மருத்துவ பரிசோதனைக்கு செல்லுங்கள். மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள். எளிதில் செரிமானமாகும் உணவுகளை உட்கொள்ளுங்கள். சுத்திகரிக்கப்பட்ட குடி நீரை அருந்துங்கள்.
 
பச்சை கீரை, காய், கனிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். துரித உணவு, கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகள், லாகிரி வஸ்துகளையெல்லாம் தவிர்ப்பது நல்லது. பாரம்பரிய உணவுகளை உட்கொள்ளுங்கள். காய்ச்சல், செரிமானக் கோளாறு, மஞ்சள் காமாலை, வயிற்று உபாதை, சிறுநீர் பாதையில் அழற்சி, வாய்ப் புண், திடீர் தலைச்சுற்றல், வாந்தியெல்லாம் வரக்கூடும். டி.வி.யில் புதிது புதிதாக வரும் விளம்பரங்களை கண்டு சந்தையில் அறிமுகப்படுத்தும் ஷாம்பு, சோம்பு, வாசனை திரவியங்களையெல்லாம் மாற்றிக் கொண்டிருக்க வேண்டாம். ஸ்கின் அலர்ஜி, இன்பெக்ஷன் வரக்கூடும்.
 
இரத்தக் கொதிப்பு அதிகமாகும். சாப்பாட்டில் உப்பை குறைத்துக் கொள்ளுங்கள். நேரம் தவறி சாப்பிட வேண்டாம். அல்சர் வர வாய்ப்பிருக்கிறது. விதிகளை மீறி யாருக்கும் உதவ வேண்டாம். முன்கோபத்தை குறையுங்கள். ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் அடிக்கடி மன அழுத்தங்களும் வரக்கூடும். இ-மெயில் மற்றும் மொபைல் ஃபோனில் வரும் பரிசுத் தொகை அறிவிப்புகளை பார்த்து ஏமாந்துவிடாதீர்கள்.
 
உறவினர்களில் ஒரு சிலர் கூட நீங்கள் மாறி விட்டதாக கூறுவார்கள். முன்பு போல அவர் இல்லை. இப்போதெல்லாம் கோபப்படுகிறார் என்றெல்லாம் குற்றப்பத்திரிக்கை வாசிப்பார்கள். பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டேப் போகும். ஒற்றையாக இருந்து எவ்வளவு தான் போராடுவது, எத்தனைக் காலத்திற்கு தான் இப்படி கஷ்டப்படுவது என்ற ஒரு ஆதங்கமும் அவ்வப்போது வெளிப்படும். உங்களிடம் திறமை குறைந்து விட்டதாக நினைத்துக் கொள்வீர்கள். தோற்றுவிடுவோமோ என்ற ஒரு அவநம்பிக்கையும் வந்துப் போகும்.
 
குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்களின் 5-ம் வீட்டை பார்ப்பதால் முடிவுகளெடுப்பதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். மழலை பாக்யம் கிடைக்கும். மகளின் திருமணத்தை சீரும், சிறப்புமாக நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் புது வேலைக் கிடைக்கும். பூர்வீக சொத்து கைக்கு வரும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். நவீன ரக வாகனம் வாங்கவீர்கள்.
 
குரு பகவான் ஏழாம் பார்வையால் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டை பார்ப்பதால் நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். விலை உயர்ந்த தங்க நகைகள் வாங்குவீர்கள். ஜென்ம குருவால் கணவன்-மனைவிக்குள் சின்ன சின்ன கசப்புணர்வுகள் வந்தாலும் அன்புக் குறையாது. மனைவி உங்களுக்கு பக்கபலமாக இருப்பார். திருமணம் தள்ளிப் போனவர்களுக்குக் கூடி வரும். அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். சமுதாயத்தில் மதிக்கத்தகுந்த அளவிற்கு கௌரவப் பதவிகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. வழக்கால் இருந்த நெருக்கடிகள் நீங்கும்.
 
குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் பாக்ய வீடான 9-ம் வீட்டை பார்ப்பதால் அரைக்குறையாக நின்ற வேலைகளெல்லாம் முடியும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தந்தையாரின் உடல் நிலை சீராகும். பாகப்பிரிவுனை, பிதுர்வழி சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் மரியாதைக் கூடும். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும்.
 
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்களின் விரையாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 02.8.2016 முதல் 19.9.2016 வரை குருபகவான் பயணிப்பதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும். நல்ல காற்றோட்டம், குடி நீர் வசதியுள்ள உங்கள் ரசனைக் கேற்ற வீட்டிற்கு குடிப்புகுவீர்கள். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு உடல் உஷ்ணம், தோலில் நமைச்சல், முன்கோபம் வந்துச் செல்லும்.
 
20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை உங்கள் லாபாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் நினைத்தது முடியும். திடீர் பணவரவு உண்டு. ஷேர் லாபம் தரும். மூத்த சகோதர வகையில் ஆதரவுப் பெருகும். அடுத்தடுத்த விசேஷங்கள், உறவினர்கள் வருகையால் வீடு களை கட்டும். வீடு வாங்க, கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். சிலர் இருக்கும் வீட்டில் கூடுதல் அறை கட்டுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் காய்ச்சல், தொண்டைப் புகைச்சல், தலை வலி வந்துப் போகும். முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது.
 
உங்களின் திருதியாதிபதியும்-அட்டமாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை குருபகவான் செல்வதால் அடுத்தடுத்த பயணங்களால் அலைச்சல் இருக்கும். இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு மூச்சுச் பிடிப்பு, பசியின்மை, வயிற்று வலி வந்துப் போகும். அநாவசியமாக கோபப்பட்டு யாரிடமும் கெட்ட பெயர் எடுக்காதீர்கள். சொத்து வாங்குவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியடையும்.
 
17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 2-ம் வீட்டில் குரு அமர்வதால் ஆரோக்யம் சீராகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மோதல்கள் விலகும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். உங்களைக் குற்றம், குறைக் கூறிக் கொண்டிருந்தவர்களின் மனசு மாறும். செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள்.
 
குருபகவானின் வக்ர சஞ்சாரம்:
 
22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தாமல் விட்டு விட்டோமே என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள்.
 
வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். காலையில் வியாபாரம் நன்றாக இருந்தால் மாலையில் சுமாராக இருக்கும். மாலையில் நன்றாக இருந்தால் காலையில் சுமாராக போகும். முக்கிய வேலைகள் இருக்கும் நாளில் வேலையாள் விடுப்பிலே செல்வார். அதனால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். தரமானப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாக புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். அனுபவமில்லாத தொழிலில் முதலீடு போட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். ஏற்றுமதி-இறக்குமதி, பதிப்பகம், ஸ்டேஷனரி, கண்சல்டன்சி வகைகளால் லாபமடைவீர்கள். யாருக்கும் முன் பணம் தர வேண்டாம். பங்குதாரர்களில் சிலர் தங்களது பங்கைக் கேட்டு தொந்தரவு தருவார்கள்.
 
உத்யோகத்தில் வளைந்துக் கொடுத்துப் போக கற்றுக் கொள்ளுங்கள். சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து அதற்கேற்ப உங்களுடைய கருத்துகளை மேலதிகாரிகளிடம் பதிவு செய்வது நல்லது. வெகுளித்தனமாகப் பேசி விமர்சனத்திற்குள்ளாவாதீர்கள். சிலர் தங்களை அறிவாளியாக காட்டிக் கொள்ள உங்களை மட்டம் தட்டி மேலிடத்தில் சொல்லி வைப்பார்கள். நீங்கள் செய்து முடித்த வேலைக்கு வேறு சிலர் உரிமைக் கொண்டாடுவார்கள். சக ஊழியர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்காதீர்கள். அவ்வப்போது மறைமுக எதிர்ப்புகளையும், இடமாற்றங்களையும் சந்திக்க வேண்டி வரும். சிலர் அடிப்படை உரிமை வேண்டி நீதிமன்றம் செல்ல வேண்டி வரும்.
 
கன்னிப் பெண்களே! நண்பர்கள் விவகாரத்தில் கவனமாக இருங்கள். நண்பர்களிடம் உயர்கல்வி சம்பந்தமான விஷயங்களை விவாதிப்பதுடன் நிறுத்திக் கொள்ளுங்கள். கல்யாணம் தள்ளிப் போகும். போட்டித் தேர்வுகளில் சற்றே பின்னடைவு ஏற்படும். எந்த விஷயமாக இருந்தாலும் பெற்றோருடன் இல்லையென்றாலும் சகோதரங்களுடன் பகிர்ந்துக் கொள்வது நல்லது. சிலர் உங்களை நம்ப வைத்து மோசம் செய்வார்கள். உயர்கல்வியை போராடி முடிக்க வேண்டி வரும். மாதவிடாய்க் கோளாறு, உடலில் சத்துக் குறைபாடு வந்துச் செல்லும்.
 
மாணவ-மாணவிகளே! அலட்சியமாக கடைசி நேரத்தில் படித்துக் கொள்ளலாம் என்றிருக்க வேண்டாம். வகுப்பறையில் கடைசி வரிசையில் அமர வேண்டாம். கெட்ட பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்த்துவிடுங்கள். சூத்திரங்களையெல்லாம் எழுதிப் பார்ப்பது நல்லது. வேதியியல் பாடத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். உங்களுடைய தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.
 
கலைத்துறையினரே! உங்களின் படைப்புகளை ரகசியமாக வையுங்கள். எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். சிலர் உங்கள் மீது வழக்குத் தொடுக்க வாய்ப்பிருக்கிறது.
 
அரசியல்வாதிகளே! நீங்கள் எதை செய்தாலும், எதை சொன்னாலும் அதில் குற்றம் கண்டு பிடிக்க சிலர் முயல்வார்கள். தலைமையின் நம்பிக்கையைப் பெற போராட வேண்டி வரும். சகாக்களிடம் உரிமையாகப் பேசி பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.
 
இந்த குருப்பெயர்ச்சி சுகவீனத்தை தந்தாலும் புதுப்புது அனுபவங்களைக் கற்றுத் தரும்.
 
பரிகாரம்:
 

திருவையாறுக்கு அருகிலுள்ள திருப்பழனம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீஆபத்சகாயேஸ்வரரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் நெய் விளக்கேற்றி வணங்குங்கள். மூடைதூக்கும் தொழிலாளிக்கு உதவுங்கள்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2016 - 17 (துலாம்)

உயர்வான எண்ணம் உடையவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்துக் கொண்டு எதிலும் வெற்றியையும், பதவி, கௌரவத்தையும் தந்த குருபகவான் இப்போது 02.8.2016 முதல் 1.09.2017 வரை விரையஸ்தானமான 12-ம் வீட்டிற்குள் நின்று பலன் தருவார். உங்கள் ராசிக்கு சத்ரு ஸ்தானாதிபதியாக குரு வருவதால் போராடங்களை கடந்து முன்னேறுவீர்கள்.
 
ஐம்பது ரூபாயில் முடியக் கூடிய விஷயங்களைக் கூட ஐநூறு ரூபாய் செலவு செய்து முடிக்க வேண்டி வரும். சிக்கனமாக இருக்கலாம் என்று நீங்கள் எப்போது திட்டமிட்டாலும் முடியாமல் போகும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகளும் அதிகமாகும். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். வீண் அலைக்கழிப்புகளும் அதிகமாகும்.
 
பழைய கடனை நினைத்து கலங்குவீர்கள். கட்டிக் காப்பாற்றிய கௌரவத்தை இழந்துவிடுவோமோ என்ற ஒரு கவலைகள் வந்து நீங்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த கூடுதல் நேரம் ஒதுக்கி உழைப்பீர்கள். குடும்பத்தில், கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். அந்தரங்க விஷயங்களில், உள்விவகாரங்களில் மூன்றாம் நபர் தலையீட்டை தவிர்க்கப் பாருங்கள்.
 
சிலர் எப்படியெல்லாம் போலித்தனமாக பழகி காரியத்தை சாதித்துக் கொள்கிறார்கள் என்பதை நினைத்து வருத்தப்படுவீர்கள். உள்மனது சிலவற்றை அறிவுறுத்தியும் அதை சரியாக பின்பற்றாமல் விட்டு விட்டுமே என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள். மற்றவர்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.
 
கனவுத்தொல்லையால் தூக்கமில்லாமல் போகும். கோவில் கும்பாபிஷேகத்திற்கு தலைமை தாங்குவீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். பழைய நூல்கள் படிப்பதில் ஆர்வம் பிறக்கும். வழக்கில் வழக்கறிஞரின் ஆலோசனையின்றி எந்த முடிவுகளும் எடுக்க வேண்டாம். இளைய சகோதர வகையில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். வாகனத்திற்கான லைசன்ஸ், இன்சூரன்ஸ், பாஸ்போட்டையெல்லாம் குறிப்பிட்ட காலத்திற்குள் புதுப்பிக்க தவறாதீர்கள். அபராதம் கட்ட வேண்டி வரும்.
 
சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். பழைய இழப்புகள், ஏமாற்றங்களை அசைப் போட்டு தூக்கத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். பழைய வீட்டை சிலர் இடித்து புதுப்பிப்பீர்கள். சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ அப்ரூவல் கிடைத்து சிலர் புதிதாக வீடு கட்டத் தொடங்குவீர்கள். லோன் கிடைக்கும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களையும் நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்துவீர்கள்.
 
குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்களின் 4-ம் வீட்டை பார்ப்பதால் தாயாரின் உடல் நிலை சீராகும். அவருடனான மோதல்கள் விலகும். தாய்வழி சொத்தைப் பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள். நல்ல காற்றோட்டம், குடிநீர் உள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். சிலர் வேறு ஊருக்கு குடிப்பெயர்வீர்கள்.
 
குரு பகவான் ஏழாம் பார்வையால் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டை பார்ப்பதால் மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய முயற்சி செய்வீர்கள். நீண்ட நாளாக எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாகும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். வெளிவட்டாரத்தில் சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.
 
குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் 8-ம் வீட்டை பார்ப்பதால் உங்களைச் சுற்றியிருப்பவர்களில் ஆடம்பரமாகப் பேசுபவர்கள் யார், உண்மையான அன்புடன் பழகுபவர்கள் யார், உங்கள் மீது நிஜமான அக்கரை உள்ளவர்கள் யார் என்பதனைப் புரிந்துக் கொள்வீர்கள். வேற்றுமதத்தவர்கள், மாநிலத்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
 
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்களின் பாதகாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 02.8.2016 முதல் 19.9.2016 வரை குருபகவான் பயணிப்பதால் உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மகான்கள், சித்தர்களின் நட்பு கிடைக்கும். அரசு காரியங்கள் தாமதமாகி முடியும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகமாகும். ஆன்மிகப் பெரியோரை சந்தித்து ஆசி பெறுவீர்கள்.
 
20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை உங்களின் ஜீவனாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் சவாலான காரியங்களைக் கூட சர்வ சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். வீண்பழி விலகும். உத்யோகத்தில் பதவியுயர்வு உண்டு. அடகிலிருந்த நகை, பத்திரங்களை மீட்பீர்கள். பொது நிகழ்ச்சி, கோவில் விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். பிரபலமடைவீர்கள். மகளுக்கு திருமணம் முடியும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள்.
 
உங்கள் தன-சப்தமாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை குருபகவான் செல்வதால் வருமானம் உயரும். குடும்பத்தில், கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மோதல்கள் விலகும். மனைவியின் ஆரோக்கியம் சீராகும். மனைவிக்கு வேலைக் கிடைக்கும். மனைவி வழி உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
 
17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் உங்கள் ராசியில் குரு அமர்ந்து ஜென்ம குருவாக வருவதால் காய்ச்சல், சளித் தொந்தரவு, மஞ்சள் காமாலை, வயிற்று உப்புசம் வந்துச் செல்லும். குடும்பத்தில், கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். உங்களைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்புவார்கள். பிரச்னைகளை அடுக்கி வைத்துக் கொள்ளாதீர்கள். எதைத்தொட்டாலும் பிரச்னையென்றெல்லாம் எதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பது நல்லது.   
 
குருபகவானின் வக்ர சஞ்சாரம்:
 
22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் திட்டமிட்ட காரியங்கள் ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வேலைச்சுமையால் உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். பூர்வீக சொத்தை விரிவுப்படுத்துவது, அழகுப்படுத்துவது போன்ற பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும்.
 
வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் ஈட்டுவீர்கள். பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்பீர்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. புதிய சலுகைத் திட்டங்களை அறிமுகப்படுத்துவீர்கள். பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். வங்கிக் கடன் பெற்று சிலர் புது முதலீடு செய்வீர்கள். கமிஷன், ஏஜென்சி, மருந்து, உர வகைகளால் லாபமடைவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களுடன் சச்சரவு வரக்கூடும்.
 
உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். நீங்கள் எவ்வளவு உழைத்தாலும் நற்பெயர் கிடைக்காது. சின்ன சின்ன குறைகளை நேரடி அதிகாரி சுட்டிக் காட்டிக் கொண்டேயிருப்பார். அலுவலக ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மேலதிகாரி தவறான வழிகளை கையாண்டாலும், நீங்கள் நேர்பாதையில் செல்வது நல்லது. சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.
 
கன்னிப்பெண்களே! சிலரின் ஆசை வார்த்தை நம்பி ஏமாற வேண்டாம். காதல் வளையில் சிக்கிக் கொள்ளாதீர்கள். பெற்றோரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கப்பாருங்கள். தடைபட்ட கல்வியை போராடி முடிப்பீர்கள். திருமணம் கொஞ்சம் தாமதமாகி முடியும்.
 
மாணவ-மாணவிகளே! படிப்பில் அக்கறை காட்டுவது நல்லது. டி.வி. பார்த்துக் கொண்டே படிப்பது, பாட்டு கேட்டுக் கொண்டே எழுதுவது, படுத்துக் கொண்டே படிப்பதெல்லாம் இனி வேண்டாம். பொறுப்பாக படியுங்கள். உங்களின் திறமையை வெளிக்கொண்டுவர முயற்சி செய்யுங்கள். பள்ளி மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். விளையாட்டில் வெற்றியுண்டு.
 
கலைத்துறையினரே! கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளப்பாருங்கள். வீண் வதந்திகளும், கிசுகிசுக்களும் இருக்கத்தான் செய்யும். மனந்தளராமல் இருங்கள்.
 
அரசியல்வாதிகளே! உங்களின் செயல்பாடுகளை மேலிடம் உற்று நோக்கும். சகாக்களில் ஒருசாரர் உங்களுக்கு ஆதரவாகவும், ஒருசாரர் உங்களுக்கு எதிராகவும் செயல்படுவார்கள். எதிர்கட்சியினரை எதிர்ப்பதில் தீவிரம் காட்ட வேண்டாம்.
 
இந்த குரு மாற்றம் செலவுகளையும், அலைச்சலையும் தந்தாலும் ஆதாயத்தையும் தரும்.
 
பரிகாரம்:
 

சீர்காழி தரங்கம்படி சாலை இடையேயுள்ள திருநாங்கூர்-அண்ணன் கோவிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீகண்ணன் நாராயணப் பெருமாளையும் ஸ்ரீபூவார் திருமகளையும் ஏதேனும் ஒரு சனிக் கிழமையில் சென்று வணங்குங்கள். காது கோளாதவர்களுக்கு உதவுங்கள்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2016 - 17 (விருச்சிகம்)

தன்னை நாடி வந்தவர்களை ஆதரிப்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு அடுக்கடுக்கான வேலைகளால் அவதிப்படுத்தியதுடன், சொன்ன சொல்லையும் காப்பாற்ற முடியாமல் திணறடித்து, எந்தத் தொழில் தொடங்கினாலும் அதில் ஒரு நட்டத்தையும், கடனையும் ஏற்படுத்தி வந்த குருபகவான் இப்போது 02.8.2016 முதல் 1.09.2017 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால் துவண்டுக் கிடந்த நீங்கள் இனி துளிர்த்தெழுவீர்கள்.
 
எதையும் சாதிக்கும் நம்பிக்கை வரும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்களெல்லாம் பணத்தை திருப்பித் தருவார்கள். பிரபலங்கள், பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். கடினமான காரியங்களைக் கூட இனி சர்வ சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள்.
 
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். தாம்பத்யம் இனிக்கும். அறிவுப்பூர்வமாகவும், அனுபவப்பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவருவீர்கள். புதுப் பதவி, பெறுப்புகளுக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். மூத்த சகோதர வகையில் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். ஷேர் மூலம் பணம் வரும். கோபம் குறையும். விலை உயர்ந்த ரத்தினங்கள், தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
 
உறவினர், நண்பர்கள் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துக் கொள்வார்கள். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். சபைகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். உங்களைத் தாழ்திப் பேசியவர்களெல்லாம் மனம் திருந்து வருவார்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் புகழ் பரவும். மற்றவர்களை சார்ந்திருக்காமல் தன்னிச்சையாக செயல்படத் தொடங்குவீர்கள். சிலர் புது வீடு கட்டிக் கிரகப்பிரவேசம் செய்வீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் வருங்காலத்திற்காக சேமிக்கத் தொடங்குவீர்கள்.
 
குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்களின் 3-ம் வீட்டை பார்ப்பதால் துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதர வகையில் உதவிகள் உண்டு. சிலர் இரு சக்கர வாகனத்தை மாற்றி நான்கு சக்கர வாகனம் வாங்குவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் தொடர்புக் கிடைக்கும். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள்.
 
குரு பகவான் ஏழாம் பார்வையால் உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டை பார்ப்பதால் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். மகளுக்கு வேலைக் கிடைக்கும். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல குடும்பத்திலிருந்து வாழ்க்கைத் துணை அமைவார். பழைய வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பூர்வீக சொத்தை உங்கள் ரசனைக் கேற்ப விரிவுப்படுத்தி, அழகுப்படுத்துவீர்கள். குலதெய்வக் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள்.
 
குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் 7-ம் வீட்டை பார்ப்பதால் மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். டி.வி., ஃப்ரிட்ஜ் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள்.
 
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்கள் ஜுவனாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 02.8.2016 முதல் 19.9.2016 வரை குருபகவான் பயணிப்பதால் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். அரசாங்க விஷயங்கள் சுலபமாக முடியும். வி.ஐ.பிகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். சிலர் சொந்தமாக தொழில் தொடங்குவீர்கள்.
 
20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை உங்கள் பாக்யாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும். பணவரவு அதிகரிக்கும். தந்தையாரின் ஆரோக்யம் சீராகும்.  நிரந்தர வருமானத்திற்கு வழி தேடுவீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும்.
 
உங்கள் ராசியாதிபதியும்-சஷ்டமாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை குருபகவான் செல்வதால் எதிர்ப்புகள் குறையும். எதிர்த்தவர்கள் அடங்குவார்புதிதாக சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
 
17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 12-ம் வீட்டில் குரு மறைவதால் எதிர்பாராத பயணங்கள் உண்டு. உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். அவ்வப்போது தூக்கம் குறையும். சொந்த ஊரில் வாங்கியிருந்த இடத்தை கட்டுவதற்கான முயற்சியில் இறங்குவீர்கள். விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். உறவினர், நண்பர்கள் வீட்டு திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசத்தையெல்லாம் நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்துவீர்கள்.
 
குருபகவானின் வக்ர சஞ்சாரம்:
 
22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் மனக்குழப்பங்களும், தடுமாற்றங்களும் கொஞ்சம் இருந்துக் கொண்டேயிருக்கும். எதிர்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டேப் போகும். நெருக்கடிகளை சமாளிக்கும் சாமர்த்தியமும் பிறக்கும். ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். சொந்த வாகனத்தில் இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. ஆனால் பணவரவு குறையாது.
 
வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். சந்தை நுணுக்கங்களை கற்றுக் கொண்டு பெரிய முதலீடுகள் செய்வீர்கள். வெளிநாட்டு நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். வேலையாட்களை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். துரித உணவகம், இரும்பு, ரியல் எஸ்டேட், கடல் வாழ் உயிரினங்கள், கிப்ட் ஷாப் வகைகளால் லாபம் பெருகும். வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். உங்கள் கருத்துகளுக்கு, புதிய முயற்சிகளுக்கு மறுப்புத் தெரிவிக்காத நல்லவர் பங்குதாரராக வர வாய்ப்பிருக்கிறது. இயக்கம், சங்கம் நடத்தும் விழாக்கள், போராட்டங்களுக்கு முன்னிலை வகிப்பீர்கள். கடையை பிரபலமான இடத்திற்கு மாற்றுவீர்கள்.
 
உத்யோகத்தில் அடிக்கடி இடமாற்றங்களையும், அவமானங்களையும், சூழ்ச்சிகளையும் சந்தித்தீர்களே! இனி உங்கள் கை ஓங்கும். அதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். அலுவலக சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலக ரகசியங்களை மூத்த அதிகாரி உங்களிடம் பகிர்ந்துக் கொள்வார். சம்பள உயர்வு, பதவி உயர்வு உண்டு. சக ஊழியர்கள் உங்கள் வேலையை பகிர்ந்துக் கொள்வார்கள். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். வேறு சில வாய்ப்புகளும் தேடி வரும். வழக்கிலிருந்து விடுபடுவீர்கள். தலைமைப் பொறுப்பு தேடி வரும்.
 
கன்னிப் பெண்களே! நிஜம் எது நிழல் எது என்பதை உணர்வீர்கள். காதலும் இனிக்கும், கல்வியும் இனிக்கும். கல்யாணமும் கூடி வரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். புது உத்யோகம் அமையும். ஆடை, ஆபரணம் சேரும். பெற்றோர் உங்களின் விருப்பங்களை நிறைவேற்றுவார்கள்.
 
மாணவ-மாணவிகளே! படிப்பில் இருந்த மந்த நிலை மாறும். போட்டி, பொறாமைகளுடன் பழகிய சக மாணவர்கள் திருந்துவார்கள். உங்களுடைய தனித்திறமைகளை அதிகரித்துக் கொள்வீர்கள். விரும்பிய கோர்ஸில் சேருவீர்கள்.
 
கலைத்துறையினரே! விருதுக்கு உங்கள் பெயர் தேர்ந்தெடுக்கப்படும். உங்களின் கற்பனை விரியும். சக கலைஞர்களை மதிப்பீர்கள். அரசால் கௌரவிக்கப்படுவீர்கள்.
 
அரசியல்வாதிகளே! போட்டி அரசியல் நடத்திக்கொண்டு, இருந்த சேமிப்பையும் கரைத்தீர்களே! இனி தாய்கழகத்தில் இணைவீர்கள். தேர்தல் களத்தில் ஜெயிப்பீர்கள். உங்களின் பொறுப்புணர்வை மேலிடம் பாராட்டும்.
 
இந்த குரு மாற்றம் புதிய பாதையில் பயணித்து வெற்றிக் கனியை சுவைக்க வைக்கம்.
 
பரிகாரம்:
 

பழனி மலையில் அருள்பாலிக்கும் முருகப் பெருமானையும், சித்தர் பெருமான் போகரையும் சஷ்டி திதி நடைபெறும் நாளில் சென்று தரிசியுங்கள். அகதிகளுக்கு உதவுங்கள்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2016 - 17 (தனுசு)

மூளையை மூலதனமாக்கி முன்னேறுபவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு புதிய அனுபவங்களை கற்றுத் தந்து உங்களின் இலக்கை நோக்கி முன்னேற வைத்த குருபகவான் 02.8.2016 முதல் 1.09.2017 வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் நுழைந்து பலன் தரப்போகிறார். பத்தாம் இடமென்றால் பதவியை பறிபோகுமே! கையில் காசுபணம் தங்காதே! என்றெல்லாம் பயந்துவிடாதீர்கள். ஓரளவு நன்மையே உண்டாகும்.
 
எதிர்பார்த்த வேலைகள் முடியாவிட்டாலும் எதிர்பாராத சில காரியங்கள் முடிவடையும். சவால்களை சந்திக்க வேண்டி வரும். என்றாலும் அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். வேலைச்சுமை அதிகமாகும். ஓய்வெடுக்க முடியாத நிலை உருவாகும். ஒரே நேரத்தில் பல வேலைகளையும் பார்க்க வேண்டி வரும். உங்கள் உழைப்பையும், திறமையையும் வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவார்கள். தலைக்குனிவான சம்பவங்கள் நிகழக் கூடும். வருங்காலம் குறித்த கவலைகள் வந்துப் போகும்.
 
பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். தர்ம சங்கடமான சூழ்நிலைகளை அவ்வப்போது சமாளிக்க வேண்டி சூழ்நிலை உருவாகும். உறவினர், நண்பர்கள் மத்தியில் உங்களைப் பற்றிய வதந்திகள் அதிகமாகும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். எல்லா இடங்களிலும் நான் தான் விட்டுக் கொடுத்துப் போக வேண்டுமா என்றெல்லாம் சில நேரங்களில் உணர்ச்சிவசப்படுவீர்கள்.
 
சிலர் உங்களை பார்த்தால் புகழ்ந்து பேசுவதும், நீங்கள் இல்லாத போது உங்களை விமர்சிக்கவும் செய்வார்கள். உங்களுடைய பெயரை சிலர் தவறாகப் பயன்படுத்த முயல்வார்கள். எதிர்மறை எண்ணங்கள் தலைத்தூக்கும். வங்கிக் காசோலையில் முன்னரே கையப்பமிட்டு வைக்க வேண்டாம். மறதியால் விலை உயர்ந்தப் பொருட்களை இழக்க நேரிடும். கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வரும். சிலர் மனைவி, பிள்ளைகளை விட்டுப் பிரிந்து அயல்நாடு, வேற்றுமாநிலம் சென்று வேலைப் பா£க்க வேண்டிய சூழல் ஏற்படும்.
 
குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்களின் 2-ம் வீட்டை பார்ப்பதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். வி.ஐ.பிகளை சரியாகப் பயன்படுத்தி முன்னேறுவீர்கள். புது வேலை அமையும். திடீரென்று அறிமுகமாகும் நண்பர்களால் ஆதாயமடைவீர்கள்.
 
குரு பகவான் ஏழாம் பார்வையால் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டை பார்ப்பதால் தாயாருக்கு இருந்த நோய் குணமாகும். அவருடனான மோதல்களும் விலகும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். விலைவாசி ஏறிக்கிட்டே போகுது; வாடகையும் தாறுமாற கூடிக்கிட்டே போகுது. புறநகர் பகுதியிலாவது அறை கிரவுண்ட், ஒரு கிரவுண்ட் வாங்கினா பத்து வருஷம் கழித்து வீடு கட்டிக்கிட்டு செட்டிலாகி விடலாம் என்று யோசிப்பீர்கள். தாய்வழி சொத்தைப் பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். வழக்கு சாதகமாகும். வீடு மாறுவீர்கள். இடமாற்றம் உண்டு.
 
குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் 6-ம் வீட்டை பார்ப்பதால் பேச்சை குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். வீண் விவாதங்களிலிருந்து ஒதுங்குவீர்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. வெள்ளிச் சாமான்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். கௌரவப் பதவி தேடி வரும்.
 
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்கள் பாக்யாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 02.8.2016 முதல் 19.9.2016 வரை குருபகவான் பயணிப்பதால் திடீர் அதிர்ஷ்ட, யோகம் உண்டாகும். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். பணவரவு அதிகரிக்கும். உத்யோகத்தில் உயர்வு உண்டு. தந்தை பக்கபலமாக இருப்பார். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். வழக்கு சாதகமாகும். திருமணம், சீமந்தம், காதுகுத்து என்று வீடு களை கட்டும். அரசால் ஆதாயமுண்டு. தந்தைவழி உறவினர்களின் ஆதரவுப் பெருகும்.
 
20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை உங்கள் அட்டமாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வீண் அலைகழிப்புகளும் அதிகமாகும். சொந்த வாகனத்தில் இரவு நேரப் பயணத்தை தவிர்ப்பது நல்லது. சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். அவ்வப்போது அடிவயிற்றில் வலி, இரத்த சோகை, கண் வலி வந்துப் போகும்.
 
உங்கள் பூர்வ புண்யாதிபதியும்-விரையாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை குருபகவான் செல்வதால் மனோபலம் கூடும். புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக முடிப்பீர்கள். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். எதிர்பாராத பயணங்கள் உண்டு. அவ்வப்போது தூக்கம் குறையும். கடந்த கால அனுபவங்களை பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.
 
17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 11-ம் வீட்டில் குரு அமர்வதால் எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். எங்குச் சென்றாலும் முதல் மரியாதைக் கிடைக்கும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.
 
குருபகவானின் வக்ர சஞ்சாரம்:
 
22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாமல் திணறுவீர்கள். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அவர்களை அன்பால் அரவணைத்துப் போங்கள். மகனின் நட்பு வட்டத்தை கண்காணியுங்கள். கூடாப்பழக்கங்கள் தொற்ற வாய்ப்பிருக்கிறது.
 
வியாபாரம் சுமாராக இருக்கும். கொடுக்கல்-வாங்கல் விஷயத்தில் கறாராக இருங்கள். போட்டியாளர்களை முறியடிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும். வெளிநாட்டு நிறுவனம், புகழ் பெற்ற நிறுவனம் என்று விளம்பரங்களை நம்பி தீர விசாரிக்காமல் முதலீடு செய்ய வேண்டாம். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற போராட வேண்டி வரும். பெரிய முதலீடுகளை தவிர்த்துவிட்டு, இருப்பதை வைத்து லாபம் சம்பாதிக்கப்பாருங்கள். வேலையாட்களால் விரயம் ஏற்படும். திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி கடன் தர வேண்டாம். புது ஒப்பந்தங்கள் தாமதமாகும். பங்குதாரருடன் பனிப்போர் வெடிக்கும். எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், கெமிக்கல், எண்டர்பிரைசஸ், சிமெண்ட் வகைகளால் ஆதாயம் பெறுவீர்கள்.
 
உத்யோக ஸ்தானமான 10-ம் வீட்டில் குரு அமர்வதால் உத்யோகத்தில் இடமாற்றம், மறைமுக எதிர்ப்புகள், முகவரி இல்லாத குற்றச்சாட்டு கடிதங்களின் அடிப்படையில் சின்ன சின்ன விசாரணைகளையெல்லாம் சந்திக்க வேண்டிய சூழல் வரும். வேலையில் நீடிப்போமோ, நீடிக்க மாட்டோமோ என்ற ஒரு பயம் இருக்கும். அதிகாரிகள் ஆதரவாகப் பேசினாலும் கூடுதலாக உங்களுக்கு வேலைகளை தருவார்கள். சலித்துக் கொள்ளாமல் அந்த வேலைகளை முடித்துக் கொடுப்பது நல்லது.
 
உயரதிகாரிகள் பாரபட்சமாக நடந்துக் கொள்வார்கள். சக ஊழியர்களுடன் அளவாகப் பழகுங்கள். அவர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். சிலர் உங்களுடைய சாதனைகளை குறுக்குவழியில் சென்று பறிக்க முயல்வார்கள். புது வேலை மாறுவதில் அவசர முடிவுகள் வேண்டாம். அலுவலகம் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளுங்கள். காணாமல் போக வாய்ப்பிருக்கிறது.
 
கன்னிப்பெண்களே! காதலை தள்ளி வையுங்கள். மனசை அலைபாயவிடாமல் ஒருநிலை படுத்துங்கள். எதிர்காலம் பற்றி யோசியுங்கள். பெற்றோரின் ஆலோசனைகள் இப்போது கசப்பாக இருந்தாலும் பின்னர் அது சரியானது தான் என்பதை நீங்கள் உணர்வீர்கள். தடைபட்ட கல்வியை போராடி முடிப்பீர்கள்.
 
மாணவ-மாணவிகளே! சாதித்துக் காட்ட வேண்டுமென்ற வேகம் இருந்தால் மட்டும் போதாது அதற்கான உழைப்பும் வேண்டும். அதிகாலையில் எழுந்து படிக்கத் தவறாதீர்கள். அன்றன்றைய பாடங்களை அன்றே படியுங்கள். டி.வி. பார்க்கும் நேரத்தை குறைப்பது நல்லது. இயற்பியல், கணக்குப் பாடங்களில் அதிக கவனம் செலுத்தப்பாருங்கள். விருப்பப்பட்ட கோர்ஸில் சேர சிலரின் சிபாரிசை நாடவேண்டி வரும்.
 
கலைத்துறையினரே! யதார்த்தமான படைப்புகளை கொடுங்கள். குறைந்த பட்ஜெட் படைப்புகள் வெற்றி பெறும். மூத்த கலைஞர்களின் நட்பால் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர்கள்.
 
அரசியல்வாதிகளே! மறைமுகப் போட்டிகள் இருக்கும். உட்கட்சிப் பூசல் வெடிக்கும். தலைமைக்கு எதிராக பேசுபவர்களிடம் நட்பு வைத்துக் கொள்ளாதீர்கள். சகாக்களால் குழப்பங்கள் வரும்.
 
இந்த குருமாற்றம் வேலைச்சுமையைத் தந்தாலும் சின்ன சின்ன ஆசைகளையும் நிறைவேற்றும்.
 
பரிகாரம்:
 

கும்பகோணம்-நீடாமங்கலம் இடையிலுள்ள திருஅவளிவநல்லூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீசாட்சி நாதர் உடனுறை ஸ்ரீசௌந்தர நாயகி அம்மனையும் திங்கட் கிழமையில் சென்று வணங்குங்கள். மணமுறிவுப் பெற்றவர்களுக்கு உதவுங்கள்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2016 - 17 (மகரம்)

பணம், காசு வந்தும் மாறாதவர்களே! கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு மறைவு ஸ்தானமான 8-ம் வீட்டில் அமர்ந்து வீண் அலைச்சல்களையும், தாழ்வுமனப்பான்மையையும் கொடுத்து வந்த குருபகவான் இப்போது 02.8.2016 முதல் 1.09.2017 வரை உங்களின் பாக்ய ஸ்தானமான 9-ம் வீட்டில் அமர்வதால் இனி எதிலும் முதலிடம் பிடிப்பீர்கள். 'ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் வீட்டில் குரு' என்ற பழமொழிக்கேற்ப உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவார்.
 
பிரச்சனைகளை நேருக்குநேராக எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். தீர்வு தேடி வெளியில் அலையாமல் உங்களுக்குள்ளேயே உங்கள் உள்மனசுக்குள்ளேயே விடையிருப்பதை இனி உணருவீர்கள். உங்கள் மீது உங்களுக்கே இருந்து வந்த அவநம்பிக்கைகள் நீங்கும். தன்னம்பிக்கை உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள்.
 
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வசதி வாய்ப்புகள் இருந்து என்ன பிரயோஜனம், இதையெல்லாம் அனுபவிக்க ஒரு பிள்ளையில்லையே என்று ஏங்கித் தவித்த தம்பதியருக்கு இப்போது குழந்தை பாக்யம் கிட்டும். உங்கள் கல்வித் தகுதிக்கேற்ற நல்ல வேலையில்லையே என்று புலம்பித் தவித்தவர்களுக்கு நல்ல உத்யோகம் அமையும். ஊரே மதிக்கும்படி பொது காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். புறநகர் பகுதியில் அரை கிரவுண்டாவது இடம் வாங்க வேண்டுமென்று முயற்சி செய்வீர்கள்.
 
இளைய சகோதர வகையில் பண உதவி, பொருளுதவி கிட்டும். கடந்த கால படிப்பினைகளை கருத்தில் கொண்டு யதார்த்தமான முடிவுகள் எடுப்பீர்கள். உங்களுடைய அனுபவ அறிவுக் கூடும். வீட்டில் வர்ணம் பூசுவது, கூடுதல் அறைக் கட்டுவது, தளம் அமைப்பது போன்ற முயற்சிகள் பலிதமாகும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும்.
 
சரியான தூக்கமில்லாமல் ஏதோ ஒன்று அழுத்தியதுப் போல் தவித்தீர்களே! இனி ஆழ்ந்த உறக்கம் வரும். பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள். எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். உறவினர், நண்பர்கள் உங்களை மதிக்கத் தொடங்குவார்கள். சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள்.
 
குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்களின் ராசியைப் பார்ப்பதால் அழகு, ஆரோக்யம் கூடும். மாற்றுமதத்தை சேர்ந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களுடைய ஆலோசனைகள் எல்லோரும் ஏற்கும்படி இருக்கும். ஷேர் லாபம் தரும். புது பதவி, பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வெளிவட்டாரத்தில் பெருமையாகப் பேசப்படுவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.
 
குரு பகவான் ஏழாம் பார்வையால் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டை பார்ப்பதால் தைரியம் பிறக்கும். சாணக்கியத்தனமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழல் உருவாகும். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதித் தொகை தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். வழக்கு சாதகமாக திரும்பும்.
 
குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் 5-ம் வீட்டை பார்ப்பதால் மாறுபட்ட யோசனைகள் மனதில் உதயமாகும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். பூர்வீக சொத்தால் வருமானம் வரும். பழைய கடன் பிரச்னை தீரும். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள். விலை உயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். சமையலறையை நவீனமாக்குவீர்கள்.
 
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்களின் அட்டமாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 02.8.2016 முதல் 19.9.2016 வரை குருபகவான் பயணிப்பதால் அரசுக்கு முரணாண விவகாரங்களில் ஈடுபட வேண்டாம். திடீர் பயணங்களும், செலவுகளும் அதிகரிக்கும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகமாகும். நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதம் ஏற்படும்.
 
20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை உங்கள் சப்தமாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் மதிப்பு, மரியாதைக் கூடும். உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். மொழியறிவுத் திறனை வளர்த்துக் கொள்வீர்கள். மனைவி உங்களுடைய முயற்சிகளுக்கு பக்கபலமாக இருப்பார். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வீடு, வாகன வசதிப் பெருகும். உங்கள் ரசனைக் கேற்ற வீட்டிற்கு சிலர் குடிப்புகுவீர்கள்.
 
உங்கள் சுக-லாபாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை குருபகவான் செல்வதால் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்குள்ளேயே ஒருசில உறுதி மொழிகளை நீங்கள் எடுத்துக் கொள்வீர்கள். மூத்த சகோதரர் உதவுவார். சிலர் புதிதாக தொழில் தொடங்குவீர்கள். தாயாருக்கு இருந்த மருத்துவச் செலவுகள் நீங்கும். அவருடனான மோதல்களும் விலகும். பழைய காலி மனையை எதிர்பார்த்த விலைக்கு விற்று விட்டு நகரத்தில் புது வீடு வாங்குவீர்கள்.
 
17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 10-ம் வீட்டில் குரு அமர்வதால் வேலைச்சுமை அதிகமாகும். உத்யோகத்தில் இடமாற்றம் வரும். யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். சின்ன சின்ன அவமானம் ஏற்படக்கூடும். வி.ஐ.பிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். முக்கிய கோப்புகளை கவனமாக கையாளுங்கள். வீண் பழிச் சொல் வரக்கூடும்.
 
குருபகவானின் வக்ர சஞ்சாரம்:
 
22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் உங்கள் மனம் எதையே தேடிக் கொண்டிருக்கும். வீண் சந்தேகத்தையும், ஈகோவையும் தவிர்க்கப்பாருங்கள். அடிக்கடி ஒரு தேக்க நிலை, மந்த நிலை உண்டாகும். நாம் செல்லுகின்ற பாதை சரிதானா, நாம் சரியாக இருக்கிறோமா, இல்லையா அல்லது நம்மைப் பற்றிய ஏதேனும் விமர்சனம் வருமா என்றெல்லாம் அவ்வப்போது கவலைப்படுவீர்கள். குடும்பத்துடன் வெளியூர் சென்று மாறுபட்ட சூழ்நிலையில் தங்கி வந்தால் மனஇறுக்கங்கள் குறையும். பசியின்மை, வயிற்று உபாதைகள் வந்துப் போகும்.
 
வியாபாரத்தில் இருந்த தேக்க நிலை மாறும். புது முதலீடுகள் செய்து வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். சந்தையில் உங்கள் நிறுவனத்தின் மதிப்புக் கூடும். அனுபவமிக்க வேலையாட்கள் அமைவார்கள்.
 
வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டிலிருப்பவர்களின் உதவியால் சிலர் சில்லரை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்திற்கு மாறுவீர்கள். கடையை விரிவுப்படுத்தி, அழகுப்படுத்துவீர்கள். உணவு, ஃபைனான்ஸ், லெதர், ஆடை வடிவமைப்பு, பிளாஸ்டிக் வகைகளால் ஆதாயமடைவீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வந்திணைவார். வர்த்தக சங்கத்தில் பதவி கிடைக்கும்.
 
உத்யோகத்தில் ஆர்வம் இல்லாமல் இருந்தீர்களே! இனி விரும்பி பணி புரிவீர்கள். உங்களின் நிர்வாகத் திறமைக் கூடும். பாரபட்சமாக நடந்துக் கொண்ட அதிகாரி இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பார். கூடுதல் சலுகைகளும் கிடைக்கும். இடமாற்றம் சாதகமாக அமையும். சக ஊழியர்களும் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். மூத்த அதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். ரகசியப் பொறுப்புகளையும் ஒப்படைப்பார்கள். உத்யோகம் சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாக முடியும்.
 
கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். பிடிவாதப் போக்கை மாற்றிக் கொள்வீர்கள். போட்டித் தேர்வு, நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவீர்கள். வேலைக் கிடைக்கும். சிலர் அயல்நாடு செல்வீர்கள். கல்யாணம் கூடி வரும். கூடுதல் மொழி கற்றுக் கொள்ள முயற்சி செய்வீர்கள். வேற்றுமதத்ததை சேர்ந்தவர்கள் தோழிகளாக அறிமுகமாவார்கள்.
 
மாணவ-மாணவிகளே! உற்சாகமாக காணப்படுவீர்கள். கல்வியிலும், கலைப் போட்டிகளிலும் வெற்றி பெறுவீர்கள். வகுப்பாசிரியர், சக மாணவர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். பெற்றோரின் கனவை நனவாக்குவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும்.
 
கலைத்துறையினரே! வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். திரையிடாமல் தடைப்பட்டிருந்த உங்களுடைய படைப்பு இப்போது வெளி வரும். ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.
 
அரசியல்வாதிகளே! ராஜதந்திரத்தால் முன்னேறுவீர்கள். எதிர்கட்சிக்காரர்களின் ஆதரவால் சில முக்கிய வேலைகளை முடிப்பீர்கள். தொகுதியில் நல்ல மதிப்பு கிடைக்கும். மேலிடம் உங்களிடம் சில ரகசியப் பொறுப்புகளை ஒப்படைக்கும்.
 
இந்த குரு மாற்றம் அதிரடி மாற்றத்தையும், திடீர் யோகத்தையும் அள்ளித் தரும்.
 
பரிகாரம்:
 

கும்பகோணம் அய்யாவாடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீபிரத்யங்கரா தேவியை அமாவாசை நாளில் சென்று வணங்குங்கள். தொழு நோயாளிகளுக்கு உதவுங்கள்.