செல்வாக்கு தரும் சுக்கிரன்

எந்த கிரகம் கொடுத்தாலும் சுக்கிரன்தான் கொடுக்கிறார் என்று வழக்கு மொழி உண்டு. ‘அவனுக்கென்னப்பா.. சுக்கிரதிசை’ என்பார்கள். அந்த அளவுக்கு சுக, போகங்களை வாரி வழங்கக்கூடிய கிரகம் சுக்கிரன். பணம், புகழ், ஆள் பலம், சுகபோகங்கள், கலை, ஆடல், பாடல், சங்கீதம், சின்னத்திரை, பெரியதிரை என மேடையேறும் வாய்ப்பு, செல்வாக்கு, ஆடம்பர பங்களா, சொகுசு கார் என்று எண்ணிலடங்கா ஏற்றங்களை வாரி வழங்கக்கூடியவர் சுக்கிர பகவான். சுக்கிரனை காதல் கிரகம் என்றழைப்பார்கள். திருமண பந்தத்தில் சுக்கிரனின் பங்கு மிக முக்கியமானது. சாதாரணமாக இருந்தவர்கள்கூட திருமணத்துக்கு பிறகு சுக்கிரனின் அமைப்பால் மிகப் பெரிய செல்வச் சீமான்களாக மாறியிருக்கிறார்கள். அந்த அளவுக்கு யோகத்தை தரக்கூடிய கிரகம். கிரகங்களிலேயே அதிகபட்சமாக 20 ஆண்டுகளை தன் ஆளும் திசையாக பெற்றிருக்கும் கிரகமும் சுக்கிரனே.

சுக்கிரனின் அம்சங்கள் (ஆதிக்கம்)
கிழமை: வெள்ளி
தேதிகள்: 6, 15, 24
நட்சத்திரம்: பரணி, பூரம், பூராடம்
ராசி: ரிஷபம், துலாம்
நிறம்: தூய வெண்மை
ரத்தினம்: வைரம்
தானியம்: மொச்சை
ஆடை: பளபளக்கும் வெண்மை
சுக்கிரனுக்கு உண்டான கிழமை, தேதிகள், நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் பல யோகங்களை தரும். ஜாதக கட்டத்தில் யோகமான இடத்தில் அவர் இருப்பதும் சிறப்பாகும். பிறந்த லக்னமும் சுக்கிரன் தரும் யோகமும்
எந்த லக்னம்/ராசியில் பிறந்தவர்களுக்கு எந்த வகையான யோகங்கள், பலன்களை சுக்கிரன் தருவார்?
மேஷ லக்னம்/ராசி & சொல்லாற்றல், கதை, கவிதை எழுத்துத்துறைகளால் யோகம்.
ரிஷப லக்னம்/ராசி & ஆடல், பாடல், சங்கீதம் போன்றவற்றால் புகழ்.
மிதுன லக்னம்/ராசி & திடீர் அதிர்ஷ்டங்கள். பிள்ளைகளால் யோகம், அரசியல், அதிகார பதவி யோகம்.
கடக லக்னம்/ராசி & வீடு, நிலபுலன்கள், வண்டி, வாகனம், கல்விச் செல்வத்தால் யோகம்.
கன்னி லக்னம்/ராசி & எல்லா வகையான செல்வங்களாலும் யோகம். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம்.
துலா லக்னம்/ராசி & இசை, பேச்சு, சின்னத்திரை, பெரிய திரை போன்றவை மூலம் ராஜயோக பலன்கள்.
மகர லக்னம்/ராசி & பிள்ளைகளால் யோகம், தொழில் தொடங்கும் யோகம், பட்டம், பதவிகள் என சுகபோக வாழ்க்கை.
கும்ப லக்னம்/ராசி & கல்விச் செல்வத்தால், வண்டி நிலபுலன்களால் யோகம்.
எந்த லக்னம், ராசியில் பிறந்தாலும், சுக்கிரன் நீச்சம் பெறாமலும் 6, 8, 12 ஆகிய இடங்களில் மறையாமலும் 6, 8, 12 ஆகிய அதிபதிகளுடன் சேராமல் இருப்பது அவசியம்.

வழிபாடு, பரிகாரம்
கும்பகோணம் அருகே உள்ள கஞ்சனூர் சுக்கிரன் பரிகார ஸ்தலமாகும். ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதர் சுக்கிரனாகவே அருள்புரிகிறார். நவ திருப்பதிகளில் தென் திருப்பேரை சுக்கிர ஸ்தலாகும்.
ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே
தனுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர பிரசோதயாத்’
அல்லது ‘ஓம் ராஜாதபாய வித்மஹே
ப்ருகு சுதாய தீமஹி

தந்நோ சுக்ர பிரசோதயாத்’ என்ற சுக்கிர காயத்ரி மந்திரத்தை 108 முறை சொல்லலாம். ‘ஓம் சும் ரீஉம் சுக்ர தேவாய நம’ என்று 108 முறை சொல்லலாம். வெள்ளிக்கிழமை விரதம் இருக்கலாம். அம்பாள், ஆண்டாள் ஸ்தலங்களில் பக்தர்கள், ஏழைகளுக்கு மொச்சை சுண்டல் வழங்கலாம்.

No comments:

Post a Comment