நவக்கிரகங்களும் உங்களின் தொழில் உத்தியோக அமைப்பும்

ஒருவரின் ஜீவன அமைப்பு பற்றி ஜோதிட ரீதியாக ஆராயும் போது ஜென்மலக்னத்திற்கு 10ம் வீடும், 10 ம் அதிபதியும், 10ம் வீட்டில் அமையப் பெற்ற கிரகமும், 10ம் அதிபதி அம்சத்தில் எந்த கிரகத்தின் வீட்டில் இருக்கின்றாரோ அக்கிரகமும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேற்கூறிய கிரகங்களில் எந்தக் கிரகம் அதிக பலம் பெறுகிறதோ அக்கிரகத்திற்குரிய துறையில் ஜாதகர் பிரகாசிக்க கூடியபோகம் உண்டாகும்.


சூரியன் 

ஜென்ம லக்னத்திற்கு 10 வீட்டில் வலுபெற்ற  கிரகமாக சூரியனிருந்தால் வாழ்வில் பல சாதனை படைக்கும் அமைப்பு, அதிகம் சம்பாதிக்க கூடிய யோகம் உண்டாகும். சூரியன் 10ல் பலமாக அ¬ந்திருந்தால் அரசு, அரசாங்க துறைகளில்  கௌரவபதவி, வங்கிபணி, மருத்துவத்துறை, வருமான வரித்துறை, நீதித்துறைகளில் அதிகாரமிக்க  பதவிகளை அடையும் வாய்ப்பு  நல்ல நிர்வாகத்திறனும் உண்டாகும். 

சூரியன் வீடான சிம்மத்திலும் சுபகிரகங்கள் அமைவது நல்லது. சிம்மத்தில் சனி, ராகு,  போன்ற பாவ கிரகங்கள்அமையப் பெற்றால், செய்யும் தொழிலில் போட்டி, பொறாமை மறைமுக எதிர்ப்புகள், வேலையாட்களால் பிரச்சனை, தேவையற்ற இன்னல்களை எதிர்கொள்ளக்கூடிய அமைப்பு, சட்ட சிக்கல்கள் உண்டாகும். சூரியன் வலுப்பெற்று அதன் தாசாபுக்தி நடைபெறும் காலங்களில் தொழில் உத்தியோக ரீதியாக உயர்வுகளும் உண்டாகும். அதுவே சூரியன் பலமிழந்து அமைந்து விட்டால் அக்காலங்களில் எதிர்பாராத இன்னல்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

சந்திரன் 

சந்திரன் 10ல் வலுப்பெற்று அமைந்தால் பயணத்தொடர்புடைய துறை, ஜல சம்மந்தப்பட்ட துறை, கடல் சார்ந்ததுறை, உணவகதொழில், எண்ணெய் வகை சம்மந்தப்பட்டவை, பண்ணை தொழில், ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தப்பட்டவைகள், அன்றாடம் உபயோகிக்கக்கூடிய பொருட்கள், விலை உயர்ந்த துணி வகைகள், உப்பு சம்பந்தப்பட்ட தொழில், மலைப் பகுதிகளில் பணிபுரியும் அமைப்பு, தாய் வழியில் தொடரும் தொழில்களை செய்யும் வாய்ப்பு உண்டாகும். சந்திரனின் வீடான கடகத்திலும் சுபகிரகங்கள் அமைவது நல்லது. சந்திரன் பலம் பெற்று திசை நடைபெற்றால் தொழில், உத்தியோக ரீதியாக அடிக்கடி  பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய அமைப்பு கொடுக்கும். நல்ல வருமானத்தையும் ஈட்ட முடியும். அதுவே சந்திரன் பலமிழந்து அதன் திசை புக்திகள் நடை பெற்றால், தேவையற்ற மனக்குழப்பங்களால் தொழிலில் இடையூறு, லாபங்கள் குறையக்கூடிய சூழ்நிலை உண்டாகும். 

செவ்வாய் 

செவ்வாய் 10ல் பலம் பெற்றிருந்தால் பூமி மனை, ரியல் எஸ்டேட், தோட்டம், கட்டிட வல்லுனராகக்கூடிய அமைப்பு, ராணுவம், பாதுகாப்புத்துறை, போலீஸ், நிர்வாகத்துறை, வழக்கறிஞர் துறை போன்றவற்றில் உயர் பதவிகளை வகிக்கும் அமைப்பு உண்டாகும். மற்றும் மருத்துவத்துறை, அறுவை சிக்சை பிரிவுகள், உளவுத்துறை, சிறைத்துறை, வட்டாட்சியர், மின்சார பொறியாளர் போன்ற துறைகளில் சாதனை செய்யும்  அமைப்பு உண்டாகும். அனு உலை பணி தபால் துறை, தூதரக பணிபுரியக் கூடிய வாய்ப்பு, சர்க்க்கஸில் மிருகங்களை பழக்குபவராகவும், இரும்பு வெட்டுபவராகவும், தீப்பெட்டித் தொழில், மன்ணென்ணெய் தயாரிக்கும் பணியில் ஈடுபடுபவராகவும் இருக்கக்கூடிய வாய்ப்பு அமையும். செவ்வாய் பலம் பெற்று அமைந்து, செவ்வாய் திசை நடைபெற்றால் எந்த வொரு துறையிலும் நல்ல நிர்வாகத்திறமையுடன் செயல்பட்டு சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். அதுவே, செவ்வாய் பலமிழந்திருந்தால் பகைவர்களின்  தொல்லைகள் அதிகரித்து அதனால் தொழில் நஷ்டமடைய நேரிடும். 

புதன் 

புதன் 10ல் பலம் பெற்று அமையப் பெற்றால் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர் பணி, கணக்கர்கள் கவிஞர்கள், எழுத்தாளர், பேச்சாளர் பணி, மற்றவர்களுக்கு உபதேசிக்கும் பணி, கணிதத்துறை, ஆடிட்டர், தபால் துறை, இன்சூரன்ஸ் துறை போன்றவற்றில் பணிபுரியக்கூடிய  வாய்ப்பு, செய்தி சேகரிக்கும் பத்திரிக்கை துறை, எடிட்டர்கள், பதிப்பாளர் பணி, ஜோதிடத்துறை, பெயிண்டிங், பிரிண்டிங், புத்தக வர்த்தகம், டிசைன்  வரைகலைப் பணி போன்றவற்றில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு அமையும். தாய் வழி மாமன்களுடன் சேர்ந்து தொழில் செய்யும் வாய்ப்பும் உண்டாகும். புதன் வலுப்பெற்று அமைந்து, அதன் திசை நடைபெறும்போது தொழில், பொருளாதார ரீதியாக ஏற்றத்தை அடைய முடியும். அதுவே புதன் வலுவிழந்து அதன் திசை நடைபெற்றால் உடன் பணிபுரிபவர்கள் உடன் பழகுபவர்களாலேயே தொல்லை ஏற்படும்.

குரு 

குரு 10ல் வலுப்பெற்று அமையப் பெற்றால் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மருத்துவ ஆலோசகர்கள், வரித்துறை, கல்வித்துறை, அரசியல் அமைப்பு உருவாக்குதல், ஆலய அறப்பணிகள், ஆராய்ச்சியாளர்கள், வர்த்தகத்துறை, சட்டம் ஒழுங்கு பாதுகாத்தல், வங்கிகளில் பணத்தை கையாளும் துறை, மத சமய தொடர்புடைய துறைகள், ஜோதிடத் துறை, அறக்கட்டளை பணிகள் போன்றவற்றில் ஈடுபட்டு சம்பாதிக்கக்கூடிய அமைப்பு உண்டாகும். குரு பலம் பெற்றிருந்து அதன் தசா புக்திகள் நடைபெறும் காலங்களில் தாராள தனவரவும், செய்யக்கூடிய தொழில் உத்தியோகத்தில் உயர் பதவிகள் தேடி வரக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். அதுவே குரு பலமிழந்து திசை நடைபெற்றால் தைரியமற்ற நிலை, தேவையற்ற அவப்பெயர்களை சம்பாதிக்கக்கூடிய சூழ்நிலை, உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடி, வீண் பழிச் சொற்கள் உண்டாகும். 

சுக்கிரன் 

சுக்கிரன் 10ல் பலம் பெற்று அமைந்திருந்தால் கலை, இசை, நடிப்பு, நாட்டியம், சங்கீதத் துறை போன்றவற்றில் சம்பாதிக்கும் வாய்ப்பும், தங்க நகைகள் விற்னை, ஆடம்பர ஆடைகள் சம்பந்தப்பட்ட தொழில், மாட மாளிகைகள் கட்டும் பணி, பட்டுத் துறை, பால் துறை, வாசனை பொருட்கள் விற்பனை, குதிரை பந்தயம் போன்றவற்றில் பணம் சம்பாதித்தல், மருந்து விற்பனை போன்றவற்றில் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும். சுக்கிரன் வலுபெற்று அமைந்து திசை நடைபெற்றால் தொழில் ரீதியாக வாழ்வில் பல வகைகளில் முன்னேற்றங்கள் தேடிவரும். செல்வம், செல்வாக்கு பெருகும். அதுவே சுக்கிரன் பலமிழந்து திசை நடைபெற்றால் தொழில் ரீதியாக இழப்புகள், பெண்களால் அவமானங்கள் ஏற்பட்டு நஷ்டம் உண்டாகும்.

சனி 

சனி 10ல் பலம் பெற்று அமைந்திருந்தால் விவசாயத் துறை, மருத்துவத்துறை, இன்சூரன்ஸ், ஏஜென்ஸி, பஞ்சாயத்துத் துறை, மருந்து தொழிற்சாலைகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு, இரும்பு, ஈயம் மற்றும் எண்ணெய் வியாபாரம், நிலம், சொத்து, வர்த்தக கூட்டுறவு துறைகளில் பணி செய்யக்கூடிய வாய்ப்பு உண்டாகும். காவலாளி, தோட்ட வேலை, மாட்டு தொழுவத்தில் பணி புரியும் வேலை, செருப்பு தைத்தல் போன்ற தொழில்களை செய்ய நேரிடும். சனி பலம் பெற்றிருந்தால் தொழிலில் நிறைய சம்பாதிக்கக்கூடிய யோகத்தை கொடுக்கும். அதன் தசாபுக்தி காலங்களில் மேலும் மேலும் உயர்வு உண்டாகும். அதுவே, சனி பலமிழந்திருந்தால் தேவையற்ற பழக்க வழக்கங்களால் திருடி சம்பாதிக்கும் சூழ்நிலை, அடிமைத் தொழில், வாழ்நாள் முழுவதும் கஷ்ட ஜீவனம் நடத்தக்கூடிய நிலை உண்டாகும். 

ராகு

ராகுபகவான் 10ல் அமையப் பெற்றால் விண்வெளிகளில் பயணம் செய்யும் தொழில், வானொலி, சர்க்கஸ் போன்ற துறைகளிலும், தெய்வீகப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பும் உண்டாகும். ராகுவுக்கு சொந்த வீடு இல்லை என்ற காரணத்தால் ராகு நின்ற வீட்டதிபதி பலம் பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் ராகு தசா புக்தி காலங்களில் தொழில், உத்தியோக ரீதியாக சம்பாதிக்கும் யோகம் சிறப்பாக அமையும். அதுவே, ராகு நின்ற வீட்டதிபதி பலமிழந்து ராகு பாவ கிரகங்களின் பார்வை சேர்க்கைப் பெற்றிருந்தால் இழிவான வேலைகளைச் செய்யக்கூடிய அமைப்பு, அடிமைத் தொழில், தேவையற்ற பழக்க வழக்கங்களுக்கு ஆளாகி சம்பாதிக்கவே முடியாமல் வாழ்க்கையே பாலாகும்.

கேது 

கேது 10ல் இருந்தால் விஞ்ஞானம், வெளிநாட்டு வர்த்தகம், மெஸ்மரிசம், கட்ட பஞ்சாயத்து மூலமும், ஆன்மிக தெய்வீக காரியங்களில் ஈடுபட்டு சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பும் அமையும். ராகுவுக்கு கூறியதுபோல கேதுவுக்கும் சொந்தவீடு இல்லை என்பதால் மேற்கூடிய பலன்களே உண்டாகும். மனக்குழப்பங்கள் அதிகரிக்கும்

No comments:

Post a Comment