ஒன்பதாம் பாவம்



ஒன்பதாம் பாவம் பொருட்பேறு பற்றி எடுத்து விளக்குவது. ஆதலால் பாக்கியஸ்தானம்என்று குறிப்பிடுவர்.

மேஷம் ஒன்பதாம் இடமானால் நாற்கால் பிராணிகளின் விருத்தி; அவற்றை காப்பாற்றுவான்; தானம் செய்வான்.

ரிஷபம் ஒன்பதாம் இடமாக அமைந்தால் ஆடை அணிமணிகள் சேரும்; அதிகமாக பேசக்கூடியவன்; சாஸ்திரங்களில் சொல்லியவாறு தான தர்மங்களை செய்யக் கூடியவன்.

மிதுனம் ஒன்பதாம் இடமாக உள்ள ஜாதகன் துயரப் படுபவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை உடையவன். வீட்டிற்கு வந்த பெரியோர்களை உபசரித்து அனுப்புவதில் விருப்பமுடையவன்.

கடகம் ஒன்பதாம் இடமாக அமைந்த ஜாதகன் வனங்களில் சென்று கடுமையான தவம் செய்யும் பெரு பெறுகின்றான்; புண்ணிய தீர்த்தங்களில் நீராடும் வாய்ப்பு கிடைக்கிறது. விரதம் உபவாசம் தான தர்மம் இவனது இலட்சியங்கள்.

சிம்மம் ஒன்பதாம் இடமாக ஆனால் ஜாதகன் தயை தாட்சண்யம் அற்றவன் ஆகின்றான்.இதனால் இவனது செல்வம் நாளடைவில் தேய்ந்து போகின்றது. பிள்ளை செல்வம் பறி போகின்றது.

கன்னி ஒன்பதாம் இடமாக அமையப் பிறந்த ஜாதகன், உண்மையான பக்தி செலுத்த மாட்டான். தான் மேன்மை அடைய வேண்டுமென்பதில் அதிகம் நாட்ட முடையவன்.

துலாம் ஒன்பதாம் இடமாக உள்ள ஜாதகன் பிரசித்தி பெற்றவன்; பெரியோர்களை மகிழ்விப்பதிலும், பொதுமக்கள் நட்பை பெறுவதிலும் ஆர்வமிக்கவன்.

விருசிகம் ஒன்பதாம் இடம் ஆனால் பிறரை துன்பப்படுத்துவான்.; யாரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க மாட்டான்.

தனுசு ஒன்பதாம் இடமாக அமையும் பொழுது அந்தணர்களுக்கு உபகாரியாகின்றான். எப்பொழுதுமே மகிழ்ச்சியாக இருப்பவன். புகழ் இவனை தேடி வருகின்றது.

மகர ராசி ஒன்பதாம் பாவமாக அமையப் பெற்றவன் பின்வயதில் தன் குலத்தவருக்கு உபகாரியாகின்றான். பெண்களிடம் வெறுப்பை அடைகின்றான்.

கும்பம் ஒன்பதாம் இடமானால் காடு வளர்த்தல் பூந்தோட்டம் அமைதல், குளம் வேட்டல், தெய்வங்களின் ஆராதனை ஆகிய காரியங்களில் ஈடுபடுகின்றான்.

மீனம் ஒன்பதாம் இடமாக அமைந்த ஜாதகன் கோயிற்பனிகள், நந்தவனம் அமைதல், யாகங்கள் செய்தல், புண்ய தீர்த்த யாத்திரைகள் இவற்றை மேற்கொள்கின்றான்.

ஒன்பதுக்கு உடையவன் ஒவ்வொரு ராசியிலும் இருப்பதால் ஏற்படும் பலன்கள்.

லக்னத்தில் குரு ஒன்பதுக்கு உடையவனாகி இருந்தால் விநாயக வழிபாடு உள்ளவன். அரசாங்க வேலை செய்பவன். ஞாபக சக்தி நிறைந்தவன்; தூய்மையை நேசிப்பவன்; அதிகமாக உணவு உண்ணமாட்டான்; ஆனாலும் லோபி.

ஒன்பதுக்கு உடையவன் இரண்டாம் இடத்திலிருந்தால் ஜாதகன் மண உறுதி வாய்ந்தவன்; நல்லொழுக்கமுள்ள புத்திரனை உடையவன்; கால்நடைகளால் ஆபத்து நேரலாம்; செலவுள்ளவன்; பெண் பித்தன்.

ஒன்பதுக்கு உடையவன் மூன்றாம் இடத்திலிருந்தால் அழகன். மக்களின் மத்தியில் செல்வாக்கு உடையவன். தன்னை சேர்ந்தவர்களையும் உறவினர்களையும் பேணிக் காப்பவன். புகழுக்குரிய செயல்களை செய்பவன். சுகஜீவி.

ஒன்பதுக்கு உடையவன் நான்காம் இடத்திலிருந்தால் வித்வான்களை நேசிப்பவன்; நண்பர்களை மிகுதியாக கொண்டவன். தந்தையை வழிபடுபவன். தீர்த்த யாத்திரையில் பற்று உள்ளவன். மிகுந்த செல்வம் உடையவன்.

ஒன்பதுக்கு உடையவன் ஐந்தாம் இடத்திலிருந்தால் தெய்வங்களிடமும், பிராமனர்களிடமும் பக்தியுடையவன்; நல்ல வனப்பு, புத்தி கூர்மை உடையவன். இன்சொல் பேசுபவன்.

ஒன்பதுக்கு உடையவன் ஆறாம் இடத்திலிருந்தால் ஜாதகனுக்கு பகைவர்கள் அதிகமாகின்றனர். உடல் உறுப்பு ஏதேனும் பாதிப்பு உள்ளாகும். விகாரமான பார்வை உடையவன்; துஷ்டன்; பலரும் இவனை தூற்றுவர்.

ஒன்பதுக்கு உடையவன் ஏழாம் இடத்திலிருந்தால் பெண் சுகம் உள்ளவன். மனைவி செல்வ வளம் மிக்கவள்; கணவன் சொல் தவறாதவள்; அழகி.

ஒன்பதுக்கு உடையவன் எட்டாம் இடத்திலிருந்தால் ஜாதகன் தோற்றம் விகாரமாக இருக்கும்; பிறரை ஏமாற்றுபவன்; கெட்ட நட்புடையவன்; அலி.

ஒன்பதுக்கு உடையவன் ஒன்பதாம் இடத்திலேயே இருந்தால் பொது மக்களிடம் கெட்ட பெயர் எடுப்பவன். குருகளிடமும் , உறவினர்களிடமும்  பற்றுள்ளவன்; சுத்தமாக இருப்பான்.

ஒன்பதுக்கு உடையவன் பத்தாம் இடத்திலிருந்தால் அரசாங்க பணி செய்பவன், புண்ணிய காரியங்களில் ஈடுபடுபவன். தாயிடம் பக்தியுள்ளவன்புகழ் படைத்தவன்.

ஒன்பதுக்கு உடையவன் பதினொன்றாம் இடத்திலிருந்தால் அடிமையாவான்; தானம் செய்வதில் பற்றுள்ளவன்.வியாபாரியாகவும் அமையலாம்.

ஒன்பதுக்கு உடையவன் பணிரெண்டாம் இடத்திலிருந்தால் ஜாதகன் மானம் உள்ளவன். அயல் நாடுகள் சென்று வருபவன். புத்திசாலி. அழகுமிக்க மேனி படைத்தவன். ஆனால் பாபக் கிரகச் சேர்கை இருந்தால் ஜாதகன் வஞ்சகன் ஆகவும் ஆகின்றான்.

ஒன்பதாம் இடத்தை சூரியன் முதலிய கிரகங்கள் பார்பதால் ஏற்படும் பலன்கள்.

ஒன்பதாம் இடம் சூரியனால் பார்க்கப்பட்டால் பெண்கள் மூலமாக எந்தவித மகிழ்ச்சியும் இருக்காது. ஆனால் அவர்களை ஜாதகன் அனுசரித்து நடந்து கொள்வான்.

ஒன்பதாம் இடம் சந்திரனால் பார்க்கப்பட்டால் அயல்நாடு சென்று அங்கேயே தங்கி அரசு அலுவல்கள் ஏதேனும் ஏற்று வாழ்க்கை நடத்த நேரிடும். இருபினும் செல்வத்தை அதிகமாக திரட்ட முடியாது. செலவாகும் கிடைக்காது.

ஒன்பதாம் இடம் செவ்வாயினால் பார்க்கப்பட்டால் பாக்கியவான். மைத்துனருடன் சேர்ந்து கொண்டு தர்மமில்லாத காரியங்களில்  ஈடுபடக் கூடியவன். கொடுமையான குணம் படைத்தவன். ஆனாலும் சுகவாசி.

ஒன்பதாம் இடம் புதனால் பார்க்கப்பட்டால் வற்றாத செல்வமும் மக்கட்பேறும் அவர்களால் சுகமும் அடைவான். அயல் நாடுகளுக்குச் செல்லும் யோகம் இவனுக்கு உண்டு. அரச மரியாதையைப் பெறுவான்.

ஒன்பதாம் இடம் குருவினால் பார்க்கப்பட்டால் தர்ம காரியங்களில் ஈடுபடக் கூடியவன்; சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றவன்.அரசு மூலம் செல்வதை அடைபவன். இருந்தாலும் நல்ல குணம் இவனுக்கு கிடையாது.

ஒன்பதாம் இடம் சுக்கிரனால் பார்க்கப்பட்டால் பலவகையிலும் சௌபாக்கியத்தை பெறுகின்றான். அயல் நாட்டில் தொழில் செய்பவனாகவும் அந்த நாட்டு மன்னனின் அபிமானத்தை பெற்றவனாகவும்  அமைகின்றான்.

ஒன்பதாம் இடம் சனியினால் பார்க்கப்பட்டால் ஊரிலான்; உறவு இல்லான்; பிற நாடு சென்று வாழ்கையை நடத்துபவன். தைரியசாலி.

No comments:

Post a Comment