யாருக்கு யார் மேல காதல் வரும்?

 காதல்னா  என்னங்க?
கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் காதல் என்று அர்த்தம்.  இது சினிமா பாட்டு இல்லைங்க.  ஊருக்குள்ள அப்படித்தான் பேசிக்கிறாங்க.
பொதுவா... வாலிப வயசுன்னாலே உள்ளக்கதவுகள் திறந்தே இருக்கும்.  பல  பேரு வந்து கதவை  தட்டினாலும்,  நோ எண்ட்ரி போர்டுதான் மாட்டி இருக்கும்.  யாராவது மனசுக்கு பிடிச்சவங்க வந்து கதவை தட்டினால்,  கதவு பக்குன்னு திறந்துக்கும்.
யூத்துங்க பாஷையில் சொல்வதானால்,  ஆளைப்பார்த்து  அசந்து போறது எப்படி இருக்கணும் தெரியுமா? 
சும்மா பேய் அறைஞ்ச மாதிரி இருக்கணும்.  ஆனால் அது ஆனந்த அதிர்ச்சியாக இருக்கணும்.  உன்னை சந்தித்த பிறகுதான் சிந்திக்கவே ஆரம்பிச்சேன்னு கவிதை வரி மனதில் வந்தால் அதுக்கு பெயர் காதல்.
(அது என்னவோ அதுக்கு முன்னால  சித்த பிரமை பிடிச்சு இருந்த மாதிரியும்,  இப்பதான் சுய நினைவு வந்த மாதிரியும் ஒரு பீலா)
அப்பறம் அந்த ராஜகுமாரியை அந்த ராஜகுமாரன் கொஞ்சலாம், வர்ணிக்கலாம், கவிதை பாடலாம்.  இதுக்கு எந்த தடையும் வராது.  
இது ஏதோ ரெண்டு மனசு சம்மந்த பட்ட விஷயம்ன்னு நினைக்காதிங்க.  ஒன்பது கிரகங்களுக்கும் தொடர்பு இருக்கு.
காதலுக்கு மரியாதை தருகிற கிரகங்களும் உண்டு.  என்னது வெட்டிபுடுவேன் வெட்டி என்று மீசையை முறுக்குற கிரகங்களும் உண்டு.
சில கிரகங்கள் என்ன  செய்யும்  தெரியுமா? 
பார்த்துக்கோ, பேசிக்கோ, பழகிக்கோ,  அத்தோட விட்டுடனும்.  கல்யாணம் காட்ச்சி பண்ணி,  கூட இருந்து குடும்பம் நடத்துறேன்னு  எதையாவது செய்யக்கூடாதுன்னு தடை உத்தரவு போடும்.
என்ன செய்ய இதுவும் நம்ப கிரகம்தான்.  சரி தலைப்புக்கு வருவோம்.  யாருக்கு யார் மேல காதல் வரும். ஜோதிட நுட்பம் என்ன?  அதை பாப்போம்.
மேஷ ராசியில் பிறந்த பொண்ணு குறைந்த பட்சம் காதலை கொள்கை அளவில்  யோசிச்சு பார்க்கணும்னா,  காதலை சொல்லற நீங்க,  சிம்ம ராசியில் பிறந்தவரா இருக்கணும்.  
அல்லது விருச்சிக ராசியில் பிறந்தவரா இருக்கணும்.  அப்பதான் உங்க காதல் ஒர்க் அவுட்டாகும்.  இல்லைனா நீயெல்லாம் அக்கா தங்கச்சியோட பிறக்கலையான்னு,  கைதர்அலி  காலத்து வசனம் எல்லாம் வரும்.
ரிஷப ராசியில் பிறந்த இளவரசிக்கு தனக்கு ஏற்ற இளவரசனா யாரை தெரியும்னா,  நீங்க கடக ராசியில் பிறந்து இருக்கணும்.  
அல்லது துலாம் ராசியில் பிறந்து இருக்கணும்.  அப்படி இருந்தால் பாறை மனசா இருந்தாலும் பாசம் பிறக்கும்.
மிதுன ராசியில் பிறந்த பொண்ணுக்கு கன்னி ராசியில் பிறந்த பையன்கள் மன்மத அம்பு வீசினால், விக்கெட் விழுந்துடும்.  அதாவது வசியம் இருக்காம்.  
அது என்னங்க வசியம்?
நியுட்டன் விதி என்ன? ஈர்ப்பு சக்தி தானே. அதைதான் ஜோதிடத்தில் வசியம்னு  சொல்றாங்க.
சரி...  கடக ராசியில் பிறந்த உலக அழகிகளுக்கு நியுடன் விதி நூறு சதவிகிதம்  ஒத்து போகணும்னா... நீங்க விருச்சக ராசியா இருக்கணும்.  அல்லது தனுசு ராசியா இருக்கணும்.  இருந்தால் உங்க காட்டுல காதல் மழைதான் போங்க. 
சிம்ம ராசி பொண்ணா...கன்னியில் பிறந்தவங்க ஒகே.   துலாம் ராசியில் பிறந்தவங்க கூட வலை விரிக்கலாம்.  புள்ளிமான்கள் எப்படியும் சிக்கும். 
வேடிக்கை  வினோதம்  சிரிப்பு சந்தோசம் இதுதான் லைப்புன்னு சிட்டா பறக்கிற கன்னி ராசி பொண்ணுங்களுக்கு,  மிதுனம் அல்லது மீன ராசி பையன்கள் காதலை சொன்னால்,  நிச்சயம் ஷாக் அடிக்கும்.
துலாம் ராசி பொண்ணுங்களுக்கு மகர ராசி காரங்க காதலை சொன்னால்,  காந்தம் இரும்பை இழுத்த மாதிரி ஒரு ஈர்ப்பு வந்துடும். 
விருச்சிக ராசியில் பிறந்தவங்களுக்கு கடக ராசி மேல தனி பிரியமே வரும். பஞ்சுக்குள்ளே நெருப்பை வச்ச மாதிரி பத்திக்கிறது இவங்கதான்.
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு மீன ராசி பையன்கள் காதலை சொன்னால் எப்படியும் கெமிஸ்ட்டி ஒர்க் அவுட்டாகும்.
மகர ராசி பொண்ணுங்களுக்கு மனதில் காதல் உற்பத்தி ஆகணும்னா,  நீங்க கும்ப ராசியா இருக்கணும்.  அல்லது மேஷ ராசியா இருக்கணும்.  இருந்தால் தாடி வளர்க்க வேண்டி வராது.
கும்பத்தில் பிறந்த பொண்ணுங்களுக்கு உள்ள கதவு நல்லா திறக்கணும்னா மேஷ ராசி தான் பெட்டர்.
மீன ராசியில் பிறந்த பொண்ணுங்களுக்கு மகர ராசி மேல தனி அன்பே வருமாம். இப்படிதான் ஒரு தியரி ஜோதிடத்தில் இருக்கு.
இது எல்லாம் பொதுவான அம்சம் தான்.  காதல் பன்றதுக்கு  காலம் கனியனும்.  பேசி பழக இடம், சூழ்நிலை, சந்தித்து பழக வாய்ப்பு,  தங்கள் எண்ணங்களை சொல்ல சந்தர்ப்பம்,  இப்படி ஏகப்பட்ட சமாச்சாரம் இடையில் இருக்கு.

முடிந்தால் முயற்சி பண்ணி பாருங்களேன்.  உங்கள் உள்ளம் கவர்ந்தவர்களுடன். 

1 comment: