சிம்மம் : 2015 - குருப்பெயர்ச்சிப் பலன்கள்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இதுவரை பனிரெண்டாமிடத்தில் இருந்து வந்த குருபகவான் தற்போது ஜென்ம குருவாக மாறி ராசியிலேயே அமரும் நிலை பெருகிறார்.

பொதுவாக நமது மூலநூல்கள் ஜென்மகுரு நல்ல பலன்களை தரமாட்டார் என்று சொல்லுகின்றன. இது பொதுப்பலன்தான். இந்த பலன் சிம்ம ராசிக்குப் பொருந்தாது. ஏனெனில் குருபகவான் அவருக்கு மிகவும் பிடித்த வீடான உங்கள் சிம்ம ராசியில் அதிநட்பு நிலை பெறுவார்.

மேலும் சிம்ம ராசியின் மேல் அவருக்கு நல்ல புரிதல் உண்டு. ஏற்கனவே அர்த்தாஷ்டமச் சனி எனும் நிலையில் நான்காமிடத்தில் இருக்கும் சனிபகவான் உங்கள் ராசியைப் பார்த்து உங்களை எரிச்சல் மூட்டி பலவீனப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் உங்களின் யோகாதிபதியான குருபகவான் ராசியில் அமர்வதால் ராசி வலுப்பெற்று உங்களின் உடலும், மனமும் புத்துணர்ச்சி பெற்று உங்களால் உற்சாகமாக செயல்பட முடியும்.
சனியின் கொடிய பார்வையினால் கடந்த சிலமாதங்களாக பின்னடைவை சந்தித்துக் கொண்டிருந்த சிம்ம ராசிக்காரர்களுக்கு ராசியில் குருபகவான் அமர்வது ராசியை பலப்படுத்தும் என்பதால் இந்தக் குருப்பெயர்ச்சி முதல் நீங்கள் எடுக்கின்ற அனைத்து முயற்சிகளும் நிச்சயமாக வெற்றியைத் தந்து உங்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும் என்பது உறுதி.

அதேநேரத்தில் சனியின் பார்வை ராசிக்கு இருப்பதால் எதுவும் சுலபத்தில் வந்துவிடாது. எல்லாவற்றிற்கும் நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும்.

எதுவானாலும் சிம்ம ராசிக்காரர்களான நீங்கள் ஆளுமைத்திறன் மிக்கவர்கள் என்பதாலும் அடுத்தவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கக்கூடியவர்கள் என்பதாலும் எதிலும் முன்னணியில் இருக்க வேண்டும் என்று உழைக்கக் கூடியவர்கள் என்பதாலும் உங்களால் கடுமையாக உழைத்து வெற்றிக்கொடி நாட்ட முடியும் என்பதும் நிஜம்.

அடுத்து இதுவரை பனிரெண்டாமிடத்தில் இருந்து விரயங்களையும் செலவுகளையும் கொடுத்து வந்த குருபகவான் இந்த முறை உங்களுக்கு தொழில் மேன்மை மற்றும் பொருளாதார வசதிகளை அளிப்பார். சென்ற வருடத்தை விட இந்த வருடம் உங்களுக்கு வருமானம் மிகவும் நன்றாக இருக்கும். பணவரவும் சரளமாக இருக்கும். மேலும் குருபகவான் உங்கள் ராசிக்கு ஐந்துக்குடைய யோகாதிபதி ஆவார் என்பதால் அவர் ஜென்மத்தில் இருக்கும் நிலையில் தனவரவுக்கு தடைகள் எதுவும் இருக்காது.

மேலும் குருபகவான் இப்போது உங்களுக்கு ஐந்துக்குடையவராகி அவரது ஐந்தாம் வீட்டையே பார்க்கப் போவதும் உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும் ஒரு அமைப்பு. எனவே ஜன்மகுரு கெடுதல்களை செய்யுமோ என்று நீங்கள் பயப்படவே தேவையில்லை. ஒரு யோகக் கிரகம் கண்டிப்பாக கெடுதல்களைத் தராது.

மேலும் எந்த ஒரு அமைப்பிலோ, அல்லது நிர்வாகத்திலோ தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு ஜன்ம குரு நன்மைகளைச் செய்வது இல்லை. அதாவது பெரிய தலைவர்கள், ஒரு பெரும் நிறுவனத்தை வழி நடத்துபவர்கள் போன்றவர்களுக்குத்தான் சில அனுபவங்களை ஜன்மகுரு தரும். மற்றவர்களுக்கு தீயபலன்கள் இருக்காது.

சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு திருப்புமுனையான நல்ல சம்பவங்கள் இந்த வருடம் நடக்க இருக்கிறது. அதே நேரத்தில் பத்தாமிடத்தை சனிபார்ப்பதால் தொழிலை விரிவுபடுத்தும் எண்ணங்கள் சிக்கலுக்கு உள்ளாகும். தொழில், வியாபாரம் போன்றவைகள் முன்னேற்ற வழியில் இருந்தாலும் வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும். எதிலும் அகலக்கால் வைத்து விட வேண்டாம். புதிய தொழில் முயற்சிகள் வேண்டாம்.

வியாபாரிகளுக்கு கொள்முதல் சம்பந்தமான அலைச்சல்கள் இருக்கும். இந்தவருடம் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். யாரையும் நம்ப வேண்டாம். வியாபாரம் கண்டிப்பாக குறையாது என்றாலும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வேலைக்காரர்கள் மேல் ஒரு கண் எப்போதும் இருக்கட்டும்.

சுயதொழில் வியாபாரம் போன்றவைகளை நடத்துவோருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். ஆயினும் வாங்கும் கடன் நல்லபடியான முதலீடாகவோ அல்லது முன்னேற்றத்திற்கானதாகவோ, வருமானம் வரும் வகையிலோதான் செலவாகும்.

அரசுவகை உதவிகள் எதிர்பார்ப்போருக்கு அனைத்திலும் சுணக்கம் இருக்கும். அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு இடமாற்றம் உண்டு. அரசுப் பணியாளர்களுக்கு உங்களைப் புரிந்து கொள்ளாதவர் மேலதிகாரியாக வந்து மனச்சங்கடங்கள் தருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. காவல்துறை, வனத்துறை போன்ற சீருடை அணிந்து வேலை செய்யும் துறையினருக்கும் இந்த வருடம் பதவி உயர்வு கண்டிப்பாக கிடைக்கும். சம்பள உயர்வு இதர படிகள் போன்றவை எதிர்பார்த்தபடி ஓரளவு கிடைக்கும்.

பொதுவாக தொழிலாளர்களுக்கு வேலை செய்யுமிடத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். சிலருக்கு வேலை அமைப்புகளில் மாற்றம் வரலாம். சிலருக்கு வீடுமாற்றம் தொழில்மாற்றம் வேலை மாற்றம் போன்றவைகள் இப்போது நடக்கும். பூர்வீக சொத்து விவகாரங்களில் ஏதேனும் வழக்கு போன்ற வில்லங்கம் வரும். பங்காளிகளுடன் கருத்து வேற்றுமை வர வாய்ப்பு இருக்கிறது. உறவினர்களுடன் கவனமாக பழக வேண்டியது அவசியம். தேவையற்ற பேச்சுக்கள் வேண்டாம்.

ராசியில் ஜன்மகுரு இருப்பதால் ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றிய தீவிர சிந்தனையும், மனக்குழப்பமும் எந்த நேரமும் இருக்கும். மனதைப் போட்டு உழப்பிக் கொண்டிருப்பீர்கள். சிலருக்கு மறைமுக வழியில் தனலாபங்கள் இருக்கும். எப்படி வந்தது என்று வெளியில் சொல்ல முடியாத வகையில் பண வரவுகளும் இந்தக் குருப்பெயர்ச்சியால் இருக்கும்.

ஜன்மகுரு என்பதால் அடிக்கடி ஞாபகமறதி வரும். எனவே கைப்பொருளை எப்போதும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுவது நல்லது. வங்கியிலிருந்து பணம் எடுக்கும் போதோ அல்லது பெரிய தொகைகளை கையாளும்போதோ மிகவும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

மேலும் தற்போது வலிமையடைந்துள்ள குருபகவான் தனது மதிப்பு மிக்க பார்வையால் உங்களுடைய ஐந்து ஏழு ஒன்பதாம் இடங்களை பார்வையிட்டு அந்த இடங்களை புனிதப்படுத்துவார் என்பதால் அந்த பாவங்களின் மூலமாக உங்களுக்கு நல்ல பலன்களையும் குரு பகவான் தருவார் என்பதால் இந்த குருப்பெயர்ச்சியில் கவலைகளுக்கு இடமில்லை.

குருவின் ஏழாமிட பார்வையால் இதுவரை குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். கருத்து வேறுபாடு, குடும்ப பிரச்னைகள் அல்லது வேலை விஷயமாக பிரிந்து இருந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். கணவன் ஓரிடம், மனைவி வேறிடம் என்று வேறு வேறு இடங்களில் பணிபுரிந்தவர்களுக்கு ஒரே இடத்தில் பணிமாறுதல் கிடைத்து குடும்பம் ஒன்று சேரும்.

உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும். இதுவரை குரு பகவானால் இருந்து வந்த விரயச் செலவுகள் இனிமேல் இருக்காது. எனவே ஏதேனும் ஒரு தொகையை அது சிறியதாக இருந்தாலும் சேமிக்க முடியும். குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடக்கும் என்பதால் வருமானம் வந்தாலும் அதற்கு ஏற்ப சுபச்செலவுகளும் இருக்கும். சொத்து வாங்குவீர்கள். மனைவிக்கு நகை, பெண் குழந்தைகளின் திருமணத்திற்கென்று நகை சேமிப்பு போன்றவைகளை இப்போது செய்ய முடியும்.

பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சியில் நன்மைகள் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் உங்களின் பேச்சு எடுபடும். நீங்கள் சொல்வதையும் கேட்கலாமே என்று கணவர் நினைப்பார். மாமியாரிடம் பாராட்டு கிடைக்கும். புகுந்த வீட்டில் மதிக்கப் பெறுவீர்கள். பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். உங்கள் அந்தஸ்து கௌரவம் உயரும். வேலைக்குச் செல்லும் பெண்கள் மதிப்புடன் நடத்தப்படுவீர்கள். உங்களுக்கு கீழே வேலை செய்பவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டு இருப்பார்கள்.

காதலித்துக் கொண்டிருக்கும் இளைய பருவத்தினருக்கு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் கை கூடி வரும். சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பித்து தங்களது வாழ்க்கைத் துணையை அடையாளம் காண்பார்கள். தாமதமாகிக் கொண்டே வந்த மகன், மகள் திருமணத்தை இப்போது நல்லபடியாக நடத்துவதற்கு குரு பகவான் அருள் புரிவார். குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சிகள் நடக்கும்.

நீண்ட தூர புனித யாத்திரைகள் இப்போது செல்ல முடியும். வயதானவர்கள் காசி கயா போன்ற புனித யாத்திரைகள் செல்வீர்கள். இஸ்லாமியர்களுக்கு புனித ஹஜ் பயணம் செல்லும் வாய்ப்பை இறைவன் அருளுவார். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஞானிகளின் ஜீவ சமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி பெறும் பாக்கியம் கிடைக்கும்.

குலதெய்வத்தின் அருளைப் பெற வேண்டிய நேரம் இது என்பதால் முறையாக குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். தள்ளிப் போயிருந்த குலதெய்வ வழிபாட்டினை உடனடியாக நேர்த்திக் கடன்களுடன் நிறைவேற்ற முடியும். குருபகவானின் அருளினால் எதையும் சமாளிப்பீர்கள். பொதுவாக சிம்ம ராசிக்கு குறைகள் எதுவும் இல்லாமல் நிறைகளைத் தரும் குருப்பெயர்ச்சி இது.

மகம் நட்சத்திரக்காரர்களுக்கு:

கூடுமானவரை நேர்வழியிலேயே செல்ல முயற்சி செய்யுங்கள். குறுக்குவழி வேண்டாம். மேல்வருமானத்திற்கு ஆசைப்பட்டு விதிகளை மீறி யாருக்கும் சலுகை காட்ட வேண்டாம். மேலதிகாரிகளுக்கு தெரியாமல், அவர்களின் எழுத்துப் பூர்வமான அனுமதி இல்லாமல் எதுவும் செய்யாதீர்கள். பின்னால் தொந்தரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. திரவப்பொருட்கள், வெள்ளை நிறம் சம்பந்தப்பட்ட தொழில், ஆற்று மணல் கட்டுமானப் பொருள் தொழில் செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு.

பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு:

ரியல் எஸ்டேட், வீடு கட்டி விற்போர், திரவம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், காய்கறி மொத்த வியாபாரம், வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி, சிகப்பு மற்றும் வெள்ளை நிறம் சம்பந்தப் பட்ட தொழில் செய்பவர்களுக்கு பட்ஜெட்டை மீறி செலவுகளும் விரயங்களும் இருக்கும் என்றாலும் நல்ல வருமானம் வந்து அனைத்தையும் ஈடு கட்டும். தந்தையைப் பெற்ற பாட்டன் வழியில் பூர்வீக சொத்து ஒன்று கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அதிகாரம் செய்யும் துறைகளில் இருப்போருக்கு மிகவும் நல்ல பலன்கள் உண்டு.

உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு:

கோவில் அர்ச்சகர்கள், நமது பாரம்பரியம் பண்பாடு சம்பந்தப்பட்ட கலைகளை கற்றுத் தருபவர்கள், நீதித் துறையில் பணிபுரிபவர்கள், மேன்மை தங்கிய நீதியரசர்கள், சட்டவல்லுனர்கள், பணம் புரளும் துறைகளான வங்கி சிட்பண்ட் சம்பந்தப்பட்ட சிம்ம ராசியினர் அனைவருக்கும் இந்த குருப்பெயர்ச்சி மிகுந்த நன்மைகளைத் தரும்.
பரிகாரங்கள்:

சென்னையில் இருப்பவர்கள் பெசன்ட்நகர் ஸ்ரீலஸ்ரீ பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதி, மற்றும் திருவொற்றியூரில் உள்ள பட்டினத்தார் சுவாமிகளின் ஜீவசமாதி, சைதாப்பேட்டை ரயில்நிலையம் எதிரில் உள்ள மகான் ஸ்ரீ குருலிங்க சுவாமிகளின் ஜீவசமாதி போன்ற இடங்களுக்கு சென்று குருவருள் பெறலாம். வெளிமாவட்டத்தவர்கள் தங்களின் அருகாமையில் உள்ள சித்தர்கள் ஞானிகள் அடங்கிய திருவிடங்களுக்கு சென்று அங்கே தியானம் அல்லது பக்தர்களுக்கு பணிவிடை செய்வது போன்ற தொண்டுகள் மூலம் ஜன்ம குருவை மகிழ்வித்து நன்மை பெறலாம். 

No comments:

Post a Comment