தனுசு : 2015 - குருப்பெயர்ச்சிப் பலன்கள்

தனுசு ராசிக்கு இதுவரை எட்டாமிடத்தில் உச்சமாக இருந்து கெடுபலன்களைத் தராத அமைப்பில் இருந்த ராசிநாதன் குருபகவான் தற்போது ஒன்பதாம் இடத்திற்கு மாறி தனது ராசியைப் பார்க்கப் போகிறார். இது ஒரு மிகவும் சிறப்பான நிலை. இந்த குருப்பெயர்ச்சியினால் தனுசு ராசிக்காரர்களுக்கு மிகுந்த நன்மைகளும், மேன்மைகளும் இருக்கும்.

தனுசு ராசிக்கு தற்போது ஏழரைச்சனி நடந்து கொண்டிருந்தாலும் சனியின் தாக்கத்தை முழுவீச்சில் அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் விருச்சிக ராசிக்காரர்கள்தான். தனுசுவிற்கு சனியின், கெடுபலன்கள் உணரப்படுவதற்கு இன்னும் சிறிது காலம் பிடிக்கும்.

இந்தப் பெயர்ச்சி மூலம் குருபகவான் தனக்கு மிகவும் பிடித்த அதிநட்பு வீடான சிம்மத்தில் அமர்ந்து அந்த இடம் இயற்கை சுபக்கிரகமான குருபகவானுக்கு பெருங்கோண வீடாகி தனது ராசியை தானே குருபகவான் பார்ப்பதால் மிகவும் நல்லபலன்கள் தனுசு ராசிக்கு உண்டு.

அதே நேரத்தில் ஏழரைச் சனியாக உங்களின் பனிரெண்டாம் வீட்டில் இருக்கும் சனிபகவானின் பத்தாம் பார்வை குருவின் மேல் பதிவதாலும் ஜனவரி மாதத்திற்கு மேல் குருபகவானுடன் ராகு இணைந்து குருவின் வலிமையை பறித்துக் கொள்ளுவதாலும் இந்த குருப்பெயர்ச்சியால் எழுபது சதவீத நன்மைகள் மட்டுமே உங்களுக்கு நடக்கும். அதே நேரத்தில் குருவால் கொடுக்கப்படும் இந்த எழுபது சதவீதமே உங்களுக்கு மிகவும் மேன்மையான பொருளாதர வலிமைகளை அளிக்கும் என்பது உறுதி.

மேலும் நட்புவீட்டில் பெருங்கோணத்தில் வலிமையுடன் இருக்கும் குருபகவானுக்கு முழுப்பார்வையும் உண்டு என்பதாலும் “குரு பார்க்க கோடி நன்மை” என்ற பழமொழி தனுசுக்கு முழுவதும் பலன் தரும் என்பதாலும் குருவின் பார்வைபடும் உங்களின் ராசி மூன்று மற்றும் ஐந்தாமிடங்கள் வலுப்பெற்று உங்களுக்கு அதித நன்மைகளை தரும்.

இந்த குருப்பெயர்ச்சி காலம் நடுத்தர வயதினருக்கு மிகவும் மேன்மையான ஒரு காலமாக இருக்கும். இளைய பருவத்தினருக்கு இந்த காலகட்டத்தில் படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் உள்ளிட்டவைகளில் நல்ல பலன்கள் நடைபெறும்.

எந்த ஒரு விஷயத்திலும் இதுவரை உங்களுக்கு இருந்து வந்த மனக் கவலைகள் குழப்பங்கள், உடல் நலக் குறைவு, கடன் தொல்லை மற்றும் எதிர்மறை எண்ணங்கள், தொழில் தேக்கம், அதிர்ஷ்டக் குறைவு, தடைகள், தாமதங்கள் போன்ற அனைத்தும் இனித் தீரும் உடலிலும் மனதிலும் புதுத் தெம்பு பிறக்கும். எங்கும் எதிலும் உற்சாகமாக இருப்பீர்கள். நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும். எந்த ஒரு செயலையும் உடனுக்கு உடன் நிறைவேற்ற முடியும். வாக்குப் பலிதம் ஏற்படும்.

இதுவரை நடக்காமல் இருந்த நல்ல விஷயங்கள், தாமதமாகிப் போனவைகள் அனைத்தும் நல்லபடியாக நடந்து உங்களுக்கு மகிழ்ச்சியையும், வருமானத்தையும், புகழையும் தரும். உங்களுடைய சிந்தனை, செயல்திறன் கூடும், முகத்தில் பொலிவு வரும்.

தன்னம்பிக்கை மனதில் குடி கொள்ளும். தலை நிமிர்ந்து நடப்பீர்கள். உங்களுடைய கௌரவம், அந்தஸ்து கூடும் படியான சம்பவங்கள் நடக்கும். கையில் எந்த நேரமும் பணப்புழக்கம் அதிகரித்து குடும்பத்தில் உங்களுடைய சொல்லை அனைவரும் கேட்கும் நிலை உருவாகும். இதுவரை பண விஷயத்தில் புரட்ட முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் சிறிதளவு முயற்சி, பெரிதளவு அதிர்ஷ்டம், அதனால் நல்ல மேம்பாடான நிலை ஆகியவற்றை கண்கூடாக காண்பீர்கள்.

அலுவலகத்தில் இதுவரை புரமோஷன் கிடைக்காதவர்கள் பதவிஉயர்வு கிடைக்கப் பெறுவார்கள். நிலுவையில் இருந்த சம்பள உயர்வு உடனடியாகக் கிடைக்கும். இதுவரை உங்களை முறைத்துக் கொண்டிருந்த மேலதிகாரி மாறுதலாகி உங்களுக்கு சாதகமான, உங்களைப் புரிந்து கொள்ளும் நபர் உங்களுக்கு அதிகாரியாக வருவார்.

இதுவரை திருமணமாகாத இளைய பருவத்தினருக்கு திருமண காலம் கூடி வந்து விட்டது. தடைகள் நீங்கி வரன்கள் கூடிவந்து உடனடியாக திருமணம் நடக்கும். காதலித்துக் கொண்டிருந்தவர்களுக்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும். ஒரு சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பித்து தங்களின் வாழ்க்கைத் துணைவரை அடையாளம் காண்பீர்கள்.

குடும்பப் பிரச்னை காரணமாக பிரிந்திருந்த கணவன் மனைவியர் ஒன்று சேருவீர்கள். விவாகரத்து வரை போன தம்பதிகள் வழக்கைத் திரும்பப் பெற்று சமரசமாகி திரும்ப இணைவீர்கள். முதல் வாழ்க்கை கோணலாகிப் போனவர்களுக்கு இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாக அமையும்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு உடனடியாக குழந்தை பிறக்கும். மகன் மகள் விஷயத்தில் இதுவரை இருந்து வந்த மனக் கவலைகள் இனிமேல் இருக்காது. பிள்ளைகள் விஷயத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். வயதானவர்கள் தாத்தா பாட்டியாக பதவி உயர்வு பெறுவீர்கள். இளையவர்கள் பெற்றோர்களிடமிருந்து ஆதரவையும் ஆசீர்வாதங்களையும் பெற முடியும்.

சொந்த வீடு கட்டுவதற்கு இதுவரை இருந்து வந்த தடைகள் விலகும். வீடு கட்ட ஆரம்பித்து பாதியில் நிறுத்தி இருந்தவர்கள் நல்ல விதமாக வேலையை முடித்து கிரகப் பிரவேசம் செய்வீர்கள். சிலருக்கு கட்டிய வீடோ, காலிமனையோ வாங்குவதற்கு இப்போது நல்ல சந்தர்ப்பம் வரும்.

கடன் தொல்லையால் அவதிப்பட்டவர்களுக்கு கடனை தீர்க்கக் கூடிய அமைப்புக்கள் உருவாகும். ஒரு சிலர் புதிய கடன்கள் பெற்று பழைய கடன்களை அடைப்பீர்கள். இனிமேல் கடன்கள் கஷ்டங்களைத் தராது. உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் திரும்பக் கிடைக்கப் பெறுவீர்கள்.

புதிதாக நல்ல வாகனம் வாங்குவீர்கள். இருக்கும் வாகனத்தை விட விலை உயர்ந்த வாகனம் வாங்க முடியும். குடும்பத்தில் சொத்து சேர்க்கை மற்றும் பொன்நகை சேர்க்கை இருக்கும். குடும்பத்திற்கு தேவையான அனைத்து விதமான பொருட்களையும் இப்போது வாங்க முடியும்.

குருவின் மூன்றாமிடப் பார்வையால் தனுசு ராசிக்காரர்கள் சிலர் புகழடைவீர்கள். அவரவர் துறைகளில் அவரவர் வயதிற்கேற்ப சாதனைகள் செய்வீர்கள். மூன்றாம் இடம் கீர்த்திஸ்தானம் என்பதால் நவீனயுகத்தில் டி.வி. போன்ற காட்சி ஊடகங்களிலும், பத்திரிகை போன்ற எழுத்து ஊடகங்களிலும் தனுசு ராசிக்காரர்களால் சாதிக்க முடியும்.

கணவன் மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் இருக்கும். மனைவிக்கு நகை வாங்கி கழுத்தில் போட்டு அழகு பார்க்க முடியும். குழந்தைகளின் எதிர் காலத்துக்கு முதலீடு செய்ய முடியும். பிள்ளைகள் விரும்பிய பள்ளி, கல்லூரிகளில் அவர்களை சேர்க்க முடியும்.

பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட துறையினருக்கு பொறுப்பான பதவி கிடைக்கும். மக்கள் மத்தியில் அந்தஸ்தும் கௌரவமும் கிடைப்பதோடு வருமானத்திற்கும் வழி பிறக்கும்.

குருபகவானின் ஐந்தாமிடப் பார்வையால் பூர்வபுண்ணிய ஸ்தானம் வலுப்பெறுகிறது. உங்களுடைய அதிர்ஷ்டத்தையும், சிந்தனைப் போக்கையும் குறிக்கும் ஐந்தாமிடத்தை குருபகவான் பார்ப்பதால் அதிர்ஷ்டம் கைகொடுக்கும் காலமாக இது இருக்கும். பிறந்தகால ஜாதக தசாபுக்தி அமைப்பு யோகமாக இருப்பவர்களுக்கு பருத்தி புடவையாய்க் காய்த்தது எனும் வகையில் இரட்டிப்பு நன்மைகள் இருக்கும்.

குலதெய்வ வழிபாடு மிகச் சிறப்பாக செய்ய முடியும். நீண்ட நாட்களாக தள்ளி போய் இருந்த குலதெய்வ தரிசனம் இப்போது பெற முடியும். இதுவரை குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்களுக்கு இறையருளால் இவர்தான் தெய்வம் என்று தெரியும் சந்தர்ப்பம் வரும்.

ஞானிகள் மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஆன்மீக நாட்டம் அதிகமாகும். அறப்பணிகளில் ஆர்வம் அதிகரித்து ஈடுபாடு காட்டுவீர்கள். கும்பாபிஷேகம் போன்ற ஆலயத் திருப்பணிகளில் பங்கேற்கும் பாக்கியம் கிடைக்கும். இதுவரை தரிசிக்காத புனிதத்தலங்களுக்கு சென்று திரும்புவீர்கள்.

தந்தை வழியில் நல்ல செய்திகள் இருக்கும். பூர்வீக சொத்து கிடைக்கும். ஒரு சிலர் வெளிநாடு செல்வீர்கள். சகோதர வழியில் உதவிகளும் நன்மைகளும் இருக்கும். சகோதர சகோதரிகள் உங்களைப் பாராட்டுவார்கள். உங்களிடம் காரியம் சாதித்து கொள்வார்கள். அவர்களுக்கு உதவ முடியும்.

பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி மிகப்பெரிய மேன்மைகளை அளிக்கும் எனபது உறுதி. வேலை செய்யும் இடங்களில் இதுவரை இருந்துவந்த மனக்கசப்புகள் அனைத்தும் நல்லபடியாகத் தீர்ந்து உங்களுடைய அதிகாரங்களும் மேலாண்மையும் நிலைநாட்டப்படும். இதுவரையில் வீட்டிலும், அலுவலகத்திலும் இருந்து வந்த அனைத்து பிரச்னைகளும் நல்ல படியாக உங்களுக்கு சாதகமாக முடிவுக்கு வந்து நிம்மதி அடைவீர்கள்.

விவசாயிகள், கலைஞர்கள், பொதுவாழ்வில் இருப்பவர்கள், ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர், தொழிலாளர்கள், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள் போன்ற தனுசு  ராசிக்காரர்கள் இந்த நல்லநேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு எதிர்காலத்தை வளப்படுத்திக் கொள்ள முடியும்.

மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு:

இதுவரை மந்தமாக இருந்த வந்த கூட்டுத் தொழில் இனி சிறப்பாக நடைபெறும். பங்குதாரர்கள் உதவியாக இருப்பார்கள். சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இனிமேல் நிலையான ஒரு தொழில் அமைப்பு உருவாகி மாதாமாதம் நிரந்தர வருமானம் வரும். தொழில் அதிபர்களுக்கு அரசு உதவி கிடைக்கும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருந்து உற்பத்தியை மேலும் பெருக்கித் தருவார்கள்.

பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு:

உடல் உழைப்பை பிரதானமாகக் கொண்டவர்கள், கறுப்புநிறப் பொருட்கள் சம்பந்தப்பட்டவர்கள், ஆலைத் தொழிலாளர்கள், கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் போன்றவர்களுக்கு இந்த வருடம் மிகவும் நல்ல வருமானங்களும், மனது சந்தோஷப்படும் நிகழ்ச்சிகளும் நடைபெறும். அதேபோல ஆசிரியர்பணி, மார்கெட்டிங், விற்பனைப் பிரிவில் உள்ளவர்கள், ரியல் எஸ்டேட் தொழிலர்கள், ஆலோசனை சொல்பவர்கள், ஊராட்சி நகராட்சி மாநகராட்சி சம்பந்தப்பட்டவர்கள், இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள், வெரிபிகேசன் துறையில் இருப்பவர்கள், தபால் மற்றும் கூரியர்துறையில் இருப்பவர்கள் நல்ல பலன்களை பெறுவீர்கள்.

உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு:

ரியல் எஸ்டேட், வீடு கட்டிக் கொடுக்கும் புரமோட்டர்கள், சிகப்பு நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், செம்மண் பூமி, ஆறு, மலைப்பாங்கான இடங்களில் தொழில் வைத்திருப்பவர்கள் மேன்மைகளை அடைவீர்கள். காவல்துறை ராணுவம் போன்ற சீருடை அணிந்து செயல்படும் துறையினருக்கு இதுவரை இருந்த அனைத்துப் பிரச்னைகளும் விலகி நிம்மதி இருக்கும். வீடு, வாகன, தாயார் விஷயத்தில் செலவுகள் இருக்கும். தாயாரின் நன்மைகளுக்காக வரும் வருமானத்தில் செலவுகள் செய்வீர்கள். தாயாருக்காக ஏதேனும் வாங்கிக் கொடுப்பீர்கள்.

பரிகாரங்கள்:

நாமக்கல் மாவட்டம் காளப்பநாயக்கன்பட்டிக்கும் சேந்தமங்கலத்திற்கும் நடுவில் உள்ள நைனாமலையில் எழுந்தருளி இருக்கும் பெருமாளையும் மலையடிவாரத்தில் அவரை சேவித்தபடி அருள்தரும் ஆஞ்சநேயரையும் ஒருமுறை சென்று வணங்கி வாருங்கள். தென் மாவட்டத்தவர்கள் செந்திலாண்டவனை தரிசிப்பதன் மூலம் எல்லா வளமும் நிறைவும் பெறுவீர்கள். 

No comments:

Post a Comment