மேஷம்: 2015 - குருப்பெயர்ச்சிப் பலன்கள்

மேஷ ராசிக்கு இதுவரை நான்காமிடத்தில் இருந்த குருபகவான் இந்தப் பெயர்ச்சியின் மூலம் மிகவும் நன்மை தரக்கூடிய இடமான ஐந்தாமிடத்திற்கு மாறி அற்புதமான நல்ல பலன்களை உங்களுக்கு தரப் போகிறார்.

தற்போது கோட்சாரக் கிரக அமைப்பில் அஷ்டமச் சனியின் ஆதிக்கத்தில் இருந்து கொண்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த ஐந்தாமிட குருப்பெயர்ச்சியின் மூலமாக ராசிக்குக் குருபார்வை கிடைப்பதால் ராசி வலுவடைந்து சனியின் கெடுபலன்கள் இன்னும் ஒரு வருடத்திற்கு உங்களை பாதிக்காது என்பது இந்த குருப்பெயர்ச்சியின் மூலம் உங்களுக்கு கிடைக்கும் நல்ல செய்தி.

கடந்த இரண்டு, மூன்று வருடங்களாகவே மேஷ ராசிக்கு சாதகமான கோட்சார நிலைமைகள் அமையவில்லை. அஷ்டமச் சனிக்கு முன்னால் ஏழாமிடத்தில் உச்சமாகி இருந்த சனிபகவான் பெரும்பாலான மேஷ ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் பிரிவினைகளையும், பிரச்னைகளையும் கொடுத்திருந்தார்.

குருபகவானும் கடந்த இரண்டு வருடங்களாக மூன்று மற்றும் நான்காமிடத்தில் அமர்ந்து உங்களுக்கு நல்ல பலன்களை செய்ய முடியாத அமைப்பில் இருந்தார். இந்த நிலைமைகள் நீங்கி குருபகவான் மேன்மையான பலன்களைத் தரும் ஐந்தாமிடத்திற்கு மாறப்போவதால் இனிமேல் உங்களுக்கு நல்ல பலன்கள் நடக்கத் துவங்கும்.

குருபகவான்தான் உங்கள் ராசிக்கு பாக்யாதிபதி எனும் யோகர் என்பதால் குரு பகவான் வலுபெற்று நல்ல நிலைகளில் கோட்சாரரீதியாக வரும் போதெல்லாம் மிகவும் நன்மைகளை அடைவீர்கள் என்பதால் இன்னும் ஒரு வருடத்திற்கு உங்களுக்கு எல்லா வகையிலும் சந்தோஷமான நிகழ்வுகள் இருக்கும்.

எந்த ஒரு விஷயத்திலும் இதுவரை உங்களுக்கு இருந்து வந்த மனக் கவலைகள் குழப்பங்கள், உடல்நலக் குறைவு, கடன் தொல்லை மற்றும் எதிர்மறை எண்ணங்கள், தொழில் தேக்கம், அதிர்ஷ்டக் குறைவு, தடைகள், தாமதங்கள் போன்ற அனைத்தும் இனித் தீர்ந்து மேஷ ராசிக்கு மிகவும் மேன்மையான ஒரு காலம் ஆரம்பிக்கிறது.

உடலிலும் மனதிலும் புதுத்தெம்பு பிறக்கும். எங்கும் எதிலும் உற்சாகமாக இருப்பீர்கள். நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும். எந்த ஒரு செயலையும் உடனுக்குடன் நிறைவேற்ற முடியும். வாக்குப் பலிதம் ஏற்படும்.
இதுவரை நடக்காமல் இருந்த நல்ல விஷயங்கள், தாமதமாகிப் போனவைகள் உடனடியாக நடந்து உங்களுக்கு மகிழ்ச்சியையும், வருமானத்தையும், புகழையும் தரும். குருபகவான் உங்களுடைய ராசியைப் பார்க்க போவதால் உங்களுடைய சிந்தனை, செயல்திறன் கூடும், முகத்தில் பொலிவு வரும்.

இது வரை இல்லாத தன்னம்பிக்கை உங்களைத் தேடி வந்து மனதில் குடி கொள்ளும். தலை நிமிர்ந்து நடப்பீர்கள். உங்களுடைய கௌரவம், அந்தஸ்து கூடும்படியான சம்பவங்கள் நடக்கும். கையில் எந்த நேரமும் பணப்புழக்கம் அதிகரித்து குடும்பத்தில் உங்களுடைய சொல்லை அனைவரும் கேட்கும் நிலை உருவாகும். தள்ளிப் போயிருந்த அதிர்ஷ்ட தேவதை அருகில் வந்து உங்களை அணைத்து கொள்வாள்.

குறிப்பாக முப்பது வயதுகளில் இருக்கும் மேஷ ராசி இளைஞர்களுக்கு அஷ்டமச் சனியின் ஆதிக்கத்தினால் இதுவரை சரியான வேலை, தொழில் அமைப்புகள் எதுவும் நடைபெறவில்லை. ஏற்கனவே நல்ல தொழில், வேலையில் இருப்பவர்களுக்குக் கூட கடந்த சில மாதங்களாக சனிபகவான் தடைகளை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்.

தொழில் சம்மந்தமான பிரச்னைகள் அனைத்தும் இந்தக் குருப்பெயர்ச்சியின் மூலம் உங்களுக்கு சாதகமாக திரும்பி பொருளாதார நிலைமைகள் உங்களுக்கு நிம்மதியாக இருக்கக்கூடிய அளவிற்கு நிலைமைகள் முன்னேற்றமாக இருக்கும்.

சென்ற காலங்களில் வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த அதிருப்திகளும் சஞ்சலங்களும் விரக்தியும் இனிமேல் இருக்காது. பதவி உயர்வு உடனே கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த சம்பள உயர்வும் பாக்கித் தொகையும் உடனே பெறுவீர்கள். பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றங்கள் உண்டு.

ஐந்தாமிடதிற்கு மாறும் குருபகவான் தன்னுடைய நன்மை செய்யும் பார்வைகளால் ஒன்பது, பதினொன்று ராசி ஆகியவற்றைப் பார்ப்பார் என்பதால் அவரது ஒன்பதாமிடத்து பார்வை மூலம் இதுவரை கிடைக்காத தள்ளிப் போயிருந்த பாக்கியங்கள் அனைத்தையும் தற்பொழுது உங்களுக்கு கிடைக்கச் செய்வார்.

குறிப்பாக இதுவரை திருமணமாகாத இளைய பருவத்தினத்தினருக்கு தற்பொழுது குருபலம் வந்து விட்டதால் நல்லபடியாக திருமணம் நடக்கும். மேஷ ராசிக்காரர்கள் வீட்டில் இந்த குருப்பெயர்ச்சியால் நிச்சயமாக ஏதேனும் ஒரு சுபகாரியம் உண்டு.

அதுபோலவே குருபகவான் புத்திரகாரகன் என்பதால் அவரது பாக்கிய ஸ்தானப் பார்வையால் இதுவரை குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியத்தை அருளுவார். அதிலும் ஒரு விஷேச நிலையாக பெண் குழந்தைகள் மட்டும் இருந்து ஆண் குழந்தைக்கு ஏங்கும் தம்பதிகளுக்கு இம்முறை ஆண் வாரிசு கிடைக்கும்.

அதுபோலவே முதல் திருமணத்தில் தடுக்கி விழுந்து வாழ்க்கை கோணலாகிபோய் துன்பத்தில் இருப்பவர்களுக்கு குருபகவான் இரண்டாவது வாழ்க்கையை தற்பொழுது நல்ல விதமாக அமைத்து தருவார். இந்த வாழ்க்கை நிலையாகவும் நீடித்தும் மனதிற்கு பிடித்த வகையிலும் இருக்கும்.

வயதான மேஷ ராசிக்காரர்கள் தற்பொழுது தாத்தா, பாட்டியாக பதவி உயர்வு பெறுவீர்கள். இளையவர்கள் உங்கள் ஆலோசனைகளையும் பேச்சையும் கேட்டு நடந்து கொள்வார்கள். ஆரோக்கியக் குறைவுகள் கட்டுக்குள் இருக்கும். ஏற்கனவே இருக்கும் உடல்நலக் கோளாறுகள் குணமடையத் துவங்கும். புதிதாக எந்த வித மருத்துவச் செலவும் இந்த வருடம் இருக்காது.

அடுத்து குருபகவானின் பதினொன்றாமிடப் பார்வையால் செய்கின்ற தொழிலில் முழுமையான லாபம் கிடைக்கும். இதுவரை வியாபாரம் நன்றாக நடந்தாலும் கையில் காசைக் காணோமே பண நெருக்கடி இருந்து கொண்டே இருகிறதே என்ற நிலைமை மாறி தாராளமான பணப்புழக்கம் உங்களிடம் இருக்கும்.

பணத்தை எப்பொழுதும் பார்த்துக் கொண்டு இருந்தாலே பாதிப் பிரச்னைகள் தீர்ந்து விடும் என்று சொல்லுவது இந்த முறை உங்களுக்கு பொருத்தமாக இருக்கும். செய்கின்ற தொழில் வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் அனைத்தும் அதன் உச்சபட்ச லாபநிலையில் நடக்கும் என்பதால் தொழில் அமைப்புகளில் முன்னேற்றத்தைப் பற்றிய கவலை உங்களுக்கு இன்னும் ஒரு வருடத்திற்கு இருக்கப் போவது இல்லை.

குறுப்பிட்ட சிலருக்கு மூத்த சகோதரம் எண்ணப்படும் அண்ணன், அக்காள்களால் நன்மைகள் இருக்கும். இதுவரை திருமணம் ஆகாமல் தள்ளிதள்ளி போயிருக்கும் மூத்தவர்களின் திருமணம் நல்லபடியாக நடக்கும். அண்ணன் அக்காக்களுக்கு திருமணம் ஆவதன் மூலம் உங்கள் திருமணத்திற்கு இருந்து வந்த தடை விலகும்.

அதே நேரத்தில் நீங்கள் இப்போது அஷ்டமச் சனியின் ஆதிக்கத்தில் இருப்பதால் இன்னும் இரண்டு வருடங்களுக்கு எந்த வித புது முயற்சிகளும் தொழில் ரீதியாக செய்யாமல் இருப்பது நல்லது. அதிகப் பணத்தை முதலீடு செய்து தொழில் ஆரம்பிப்பதோ இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்வதோ புதிய கிளைகள் ஆரம்பிப்பதோ வேறு எந்த வகையிலும் புதியவைகளை செய்வதோ வேண்டாம்.

தொழிலை விரிவுபடுத்துவதற்கு இது சரியான நேரம் அல்ல. இருக்கும் தொழிலை அக்கறையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் புதிய கிளைகள் ஆரம்பிக்கவோ, தொழிலை விரிவாக்கம் செய்யவோ, மேற்கொண்டு அதிகமான முதலீடு செய்யவோ வேண்டாம்.

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இதுவரை வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். பதவி உயர்வு உண்டு. இடமாற்றம், கேட்டபடியே கேட்கும் இடத்தில் கிடைக்கும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் தனிக்குடித்தனம் போக வேண்டிய சூழ்நிலை வரலாம். மாமியார் மாமனாருடன் கருத்து வேறுபாடுகளும் தந்தையுடன் உடன் பிறந்த அத்தைகளுடன் சிறிய பிரச்னைகளும் வரலாம்.

ஆறாமிடத்தில் ராகு இருப்பதால் இதுவரை கடன் தொல்லையில் அவதிப் பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும். கடனை அடைப்பதற்கான வழிகள் தெரியும். கடன் தீர்ந்தே ஆகவேண்டும் என்பதால் வருமானமும் கூடும். இதுவரை உங்களை விரோதியாக நினைத்தவர்கள் மனம் மாறி நட்பு பாராட்டுவார்கள்.

மேஷ ராசிக்காரர்கள் அனைத்து சோதனைகளையும் வெற்றியாக, சாதனைகளாக மாற்றக் கூடியவர் என்பதால் அஷ்டமச் சனி பெரிதாக ஒன்றும் உங்களைப் பாதிக்காது. சனியை நினைத்து கவலைப் பட்டுக் கொண்டிருக்க வேண்டாம். கையில் இருக்கும் சேமிப்பை சனி கரைய வைக்கும் அவ்வளவுதான். அதேநேரத்தில் வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களில்தான் செலவுகள் இருக்கும். எதிர்கால நல்வாழ்விற்கு தேவையான அடிப்படைக் கட்டமைப்புக்கள் இதன் மூலம் உங்களுக்கு நடக்கும்.

அசுவினி நட்சத்திரக்காரர்களுக்கு:

உங்களின் நட்சத்திரநாதன் கேதுபகவான் குருவின் வீட்டில் இருப்பதால் இந்தக் குருப்பெயர்ச்சி உங்களுக்கு மிகவும் நல்ல பணவரவைத் தரும். குறிப்பாக எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் இருப்பாவர்கள் மிகுந்த முன்னேற்றம் அடைவீர்கள். எனவே அதற்கேற்ப திட்டங்கள் தீட்டி வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளுங்கள். ரேஸ் லாட்டரி பங்குச் சந்தை சூதாட்டம் போன்றவைகள் இப்போது கை கொடுக்காது. சிறிது லாபம் வருவது போல் ஆசை காட்டி பிறகு மொத்தமாக இருப்பதையும் இழக்க வைக்கும் என்பதால் மேற்கண்ட இனங்களில் கவனமுடன் இருக்கவும்.

பரணி நட்சத்திரக்காரர்களுக்கு:

இந்த குருப்பெயர்ச்சியின் ஆரம்பத்திலேயே உங்களுக்கு நல்ல பலன்கள் நடக்கும். பூரம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்லும்போது தொட்டது துலங்கும். முயற்சிகள் பலனளிக்கும். பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்வோருக்கு இந்த நேரம் மிகவும் நல்ல பலன்களைத் தரும். எனவே சோம்பலை உதறித்தள்ளி சுறுசுறுப்பாக காரியம் ஆற்ற வேண்டியது அவசியம். பணத்திற்கு பஞ்சம் இருக்காது. கொடுக்கும் வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். வாக்கு பலிக்கும்.

கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு:

நீண்ட நாட்களாக வீடு கட்ட வேண்டும் அல்லது வீடு வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தவர்களுக்கு வீட்டுக்கனவு நனவாகும். பெரும்பாலானவர்கள் லோன் போட்டுத்தான் வீடு கட்டவோ வாங்கவோ செய்வீர்கள். குருப்பெயர்ச்சியின் ஆரம்பத்தில் சிறிது சுணக்கமான பலன்கள் இருந்தாலும் நடுப்பகுதியில் இருந்து நல்ல பலன்கள் நடக்கத் துவங்கி படிப்படியாக உங்களின் தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புக்கள் மிகவும் முன்னேற்றமாக இருக்கும். நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இழுபறியாக இழுத்துக் கொண்டிருந்த விஷயம் சட்டென்று முடிவுக்கு வந்து பெரும்தொகை கைக்கு கிடைக்கும்.

பரிகாரங்கள்:

அஷ்டமச் சனி நடந்து கொண்டிருப்பதால் கால பைரவருக்கு சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள். குருபகவானின் திருவருளை முழுமையாகப் பெற உங்களின் ஜன்ம நட்சத்திர தினம் அல்லது ஒரு வியாழக் கிழமையன்று குரு ஹோரையில் ஒரு யானைக்கு அதன் விருப்பமான உணவு என்ன என்று பாகனிடம் கேட்டு உணவிட்டு அதன் ஆசிகளைப் பெறுங்கள். 

No comments:

Post a Comment