கும்பம் : 2015 - குருப்பெயர்ச்சிப் பலன்கள்

கும்ப ராசிக்கு இதுவரை ஆறாமிடத்தில் இருந்து உங்களுக்கு அனைத்து விஷயங்களிலும் தடைகள் தாமதங்களைக் கொடுத்துக் கொண்டிருந்த குருபகவான் தற்போது அவருக்கு மிகவும் நற்பலன்களைத் தரக்கூடிய இடமான ஏழாமிடத்திற்கு மாறி நன்மைகளைத் தரப்போகிறார்.

குருபகவான் இந்தப் பெயர்ச்சியால் உங்கள் ராசியைப் பார்க்கப் போவதால் குருபார்க்க கோடி நன்மை எனும் பழமொழி உங்கள் விஷயத்தில் பரிபூரணமாக நன்மைகளை செய்து இந்தப்பெயர்ச்சியின் மூலம் உங்களுக்கு அனைத்து நன்மைகளும் கிடைக்க இருக்கிறது.

இன்னொரு துணுக்கமாக குரு ராசியை பார்ப்பது நன்மைதான் என்றாலும் அவர் எத்தகைய வலுவில் இருந்து ராசியை பார்க்கிறார் என்பது முக்கியம் என்பதால் தற்போது அவர் அதிநட்பு நிலையில் இருந்து ராசியை பார்க்க போவதால் கும்பராசிக்கு மிகச்சிறந்த மேன்மைகள் கிடைக்கும் என்பது உறுதி.
குருபகவான் ராசியை பார்க்கப் போவதால் உங்கள் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும். முகத்தில் எந்நேரமும் சந்தோஷம் தெரியும். இதுவரை மனதில் இருந்து வந்த குழப்பங்கள் உடனே விலகும். சென்ற காலங்களில் உங்களை வாட்டி வதைத்த சோம்பல், மந்தம், விரக்தி மற்றும் தோல்வி மனப்பான்மைகள் இனிமேல் உங்களிடம் நெருங்காது. அனைத்து விஷயங்களிலும் இருந்த வந்த தொல்லைகள் தடைகள் தாமதங்கள் விலகி அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசப் போகிறது.

இந்தக் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு புதிய மனிதரைப் போல உணருவீர்கள். உங்களின் அந்தஸ்து மதிப்பு அனைத்தும் உயரும் நேரம் இது. அடுத்தவர்களால் கௌரவமாக நடத்தப் படுவீர்கள். நீங்கள் தொட்டது துலங்கும் நேரம் இது. நீங்கள் நினைத்தது நடக்கும் காலம் இது. பிறந்த ஜாதகத்தில் நல்ல யோக தசா புக்திகள் நடந்து கொண்டு இருந்தால் உங்களில் சிலர் சாதனைகளை படைத்து புகழின் உச்சிக்கு செல்வீர்கள் என்பது உறுதி.

இதுவரை வேலை, வியாபாரம், தொழில் போன்ற ஜீவன அமைப்புகளில் இருந்து வந்த போட்டிகளும், எதிர்ப்புகளும், பொறாமைகளும், தடைகளும் விலகி அனைத்தும் உங்களுக்கு நன்மை தரும் விஷயங்களாக மாறும். பணிபுரியும் இடங்களில் இதுவரை இருந்து வந்த நிம்மதியற்ற சூழல் இனிமேல் இருக்காது.

உங்களைப் புரிந்து கொள்ளாமல் உங்களுக்கு தொல்லை கொடுத்த மேல் அதிகாரிகள் மாறுதலாகி உங்களைப் புரிந்து கொண்டவர்கள் அங்கே வருவார்கள். இதுவரை தடைப்பட்ட பதவிஉயர்வு, சம்பளஉயர்வு போன்றவைகள் இப்போது கிடைக்கும்.

இளைய பருவத்தினருக்கு நல்லவேலை கிடைத்து திருமணமும் நடக்கும். காதலிப்பவர்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் நீங்கள் நினைத்தவரை மண முடிப்பீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு. மண வாழ்வில் பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு அது தீரும். சிலருக்கு வேலை மாற்றம் நடந்து வெளியூரில் வேலை அமையும்.

போட்டி பந்தயங்கள் கை கொடுக்கும். தொழில் ஆரம்பிக்க உகந்த நேரம் இது. சுயதொழில் செய்வோருக்கு எடுக்கும் முயற்சிகள் கை கொடுக்கும். தொழிலில் இருந்த முட்டுக்கட்டைகளும் அதிருப்தியான நிலைமையும் மாறி தொழில் சூடு பிடிக்கும். வேலை செய்பவர்களும் பங்குதாரர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். தொழில் முன்னேற்றம் மற்றும் விரிவாக்கத்திற்கான அனைத்தையும் தற்போது நல்ல விதமாகச் செய்ய முடியும்.

வியாபாரிகளுக்கு இது மிகுந்த லாபங்கள் வரக்கூடிய ஒரு காலகட்டமாக அமையும். எல்லாவிதமான வியாபாரமும் இப்போது கை கொடுக்கும். கிளைகள் திறக்கலாம். புதிய டீலர்ஷிப் எடுக்கலாம். வருமானம் சிறப்பாக இருக்கும். தொழிலில் பங்குதாரர்களை சேர்த்துக் கொள்வதற்கு நல்ல நேரம் இது. அவர்கள் மூலம் முன்னேற்றங்கள் இருக்கும்.

சில தொழில்முனைவோர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் கிடைத்து அமோகமான தொழில் வெற்றியைப் பெற்று பெரும்பணக்காரர்கள் ஆவதற்கு தற்போது வாய்ப்பு இருக்கிறது. விடா முயற்சியுடன் எதையும் செய்வதன் மூலம் கடவுள்அருள் உங்கள் பக்கம் இருக்கும் என்பது நிச்சயம்.

அரசு வேலை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. மத்திய மாநில அரசுகளின் முதன்மைத் தேர்வுகளான ஐ.ஏ.எஸ், குரூப்ஒன் போன்ற பதவிகளுக்கு நல்லமுறையில் தேர்வுகளை எழுத முடியும். ஏற்கனவே தேர்வுகளை எழுதி முடிவுகளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.

வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு அது கைகூடும். சொந்தத் தொழில் செய்பவர்கள் மிகுந்த நல்ல மாற்றங்களை உணர்வார்கள். தொழில் சீர்படும். லாபம் தரும். வரும் லாபத்தை சேமிக்க முடியும். செலவுகள் குறையும். விரையங்கள் இருக்காது.

வியாபாரிகளுக்கு வியாபாரம் திருப்திகரமாக இருக்கும். நல்ல வேலைக்காரர்கள் அமைவார்கள். எந்த ஒரு விஷயமும் வெற்றி தரும். ஆரம்பிக்கும் காரியத்தை சுபமாக முடிக்க முடியும். கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மந்தமான நிலைமையும் மாறி தொழில் நல்லபடியாக நடக்கும். நண்பர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள்.

இந்த குருப்பெயர்ச்சி காலம் முழுவதும் உங்களின் பொருளாதார நிலை மிகவும் மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும். தொட்டது துலங்கும். இதுவரை வருமானம் இன்றி பணப்பற்றாக்குறையால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பணப்பிரச்னை இல்லாத அளவுக்கு நல்ல வருமானம் இருக்கும்.

தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு ஆலயப்பணி செய்யும் பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாட்களாக போக முடியாமல் தள்ளிப் போயிருந்த தீர்த்த யாத்திரை இப்போது போக முடியும். காசி கயா பத்ரிநாத் கேதார்நாத் போன்ற வடமாநில புண்ணியத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு இப்போது கிடைக்கும்.
ஞானிகளின் தரிசனம் கிடைக்கும். மகாபெரியவரின் அதிஷ்டானம் போன்ற மிகப்பெரும் புனித இடங்களை வழிபடும் பாக்கியம் உண்டாகும். தள்ளிப் போயிருந்த நேர்த்திக்கடன்களை இப்போது நிறைவேற்ற முடியும். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்வீர்கள்.

தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உதவிகள் நன்றாக இருக்கும். இளைஞர்களுக்கு நீங்கள் விரும்பிக் கேட்கும் ஒரு பொருளை உங்கள் அப்பா வாங்கித் தருவார். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. இதுவரை இருந்துவந்த பங்காளிப் பிரச்னை தீரும். பூர்வீக சொத்துக்களில் உங்கள் பாகம் சேதமில்லாமல் உங்களுக்கு கிடைக்கும். பெரியப்பா சித்தப்பாக்கள் மற்றும் தந்தையுடன் பிறந்த அத்தைகளால் லாபம் இருக்கும்.

ஏழாமிடத்திற்கு மாறும் குருபகவான் தனது பார்வையால் பதினொன்று, மூன்றாம் இடங்களையும் பார்வையிடுவார் என்பதால் மேற்கண்ட இடங்கள் வலுப்பெற்று உங்களுக்கு லாபம் இம்முறை உண்டு.

மூத்த சகோதரர், சகோதரிகளின் உறவு மேம்படும். அவர்களால் உதவிகள் இருக்கும். அண்ணன் தம்பி அக்கா தங்கை உறவுகள் பலப்படும். வயதில் மூத்தவர்களுக்கு மங்களகரமான நிகழ்ச்சிகள் வீட்டில் நடைபெறும். இதுவரை திருமணம் தாமதமான அக்கா அண்ணன் போன்றவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணமாகும். அதிகம் பெண்களுடன் பிறந்தவர்கள் தங்கள் சகோதரிகளின் வீட்டு சுபகாரியங்களுக்கு செலவு செய்ய வேண்டியிருக்கும்.

குறிப்பிட்ட சிலருக்கு இப்போது இருக்கும் வாகனத்தை விட நல்ல வாகனம் அமையும். வாகன மாற்றம் செய்வீர்கள். அருமையான புதிய வீடு கட்டுவீர்கள். பெருநகரங்களில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் சொந்தமாக டீலக்ஸ் பிளாட் அமையும்.

பொதுவாழ்வில் உள்ள அரசியல்வாதிகளுக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். ஊடகம் பத்திரிக்கை போன்ற துறையில் இருப்பவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது வசந்த காலமாகும். கலைத்துறையினர் இதுவரை இல்லாத நல்ல திருப்பங்களைக் காண்பீர்கள். வாய்ப்புகள் வந்து வாசல்கதவைத் தட்டும். அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு ‘இதர வருமானங்கள்’ சிறப்பாக சொல்லிக் கொள்ளும்படி இருக்கும்.

பெண்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி நல்ல பலன்களை அதிகம் தரும். இதுவரை உங்களை புரிந்துக் கொள்ளாத கணவர் இனிமேல் உங்களை புரிந்து கொண்டு, உங்கள் மனம் போல் நடந்து கொள்ள ஆரம்பிப்பார். பிள்ளைகள் உங்களின் கஷ்டங்களைப் புரிந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடங்களில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். உங்களின் அந்தஸ்து உயரும்.

கடன்கள் கட்டுக்குள் இருக்கும். சிலர் புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள். சிலருக்கு நிரந்தரமாக கடன்கள் அடைந்து நிம்மதி கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். இதுவரை மருத்துவத்திற்கு கட்டுப்படாமல் இருந்து வந்த நோய்கள் தீரும்.

கும்ப ராசிக்கு இது எதிர்கால முன்னேற்றத்திற்கு அடித்தளம் போடும் காலகட்டமாக அமையும் என்பதால் இப்போது ஏற்படும் நன்மைகளால் உங்கள் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்வீர்கள்.

அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு:

இந்த குருப்பெயர்ச்சிக் காலம் முழுவதுமே நல்ல பலன்கள் நடக்கும். பணவரவு திருப்தியாக இருக்கும். நீண்ட நாள் கனவு ஒன்று இப்போது நனவாகும். உங்கள் மனது போலவே எல்லா நிகழ்ச்சிகளும் நடக்கும். குறிப்பாக கலைத்துறையிலும் பெண்கள் தொடர்பான துறைகளிலும், அழகு, ஆடம்பரம் சொகுசு வாகனம் அலங்காரம் போன்ற துறைகளிலும் இருப்பவர்களுக்கு மிக விசேஷமான நல்ல பலன்கள் நடக்கும். அதிகாரம் செய்யும் துறைகளில் இருப்போருக்கும் மிகவும் நல்ல பலன்கள் உண்டு.

சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு:

மனதில் ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். சித்தர்களின் ஆசிகள் எப்போதுமே உங்களுக்கு உண்டு. இம்முறை நீங்கள் தரிசிக்க விரும்பும் புனிதத்தலங்கள் அனைத்திற்கும் செல்லும் பாக்கியம் கிடைக்கும். நீண்டகால லட்சியங்களை இப்போது நிறைவேற்றிக் கொள்ள முடியும். ஆன்மிகம் சம்பந்தப்பட்ட துறையினர் சிறப்படைவார்கள். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். இதுவரை காணாமல் போயிருந்த உங்களின் விடாமுயற்சியும் தைரியமும் மீண்டும் உங்களிடம் தலையெடுத்து அனைத்து பிரச்னைகளையும் நீங்கள் தனியொருவராகவே சமாளித்து தீர்க்கப் போகிறீர்கள்.

பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு:

எதிர்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடும் காலம் இது. வருங்காலத்தில் நீங்கள் எந்தத் துறையில் இருக்கப் போகிறீர்கள் என்பதை இந்த வருடம் நிர்ணயிக்கும் என்பதால் மிகவும் பயனுள்ள பெயர்ச்சியாகும் இது. இந்த வருடம் அறிமுகமாகும் ஒருவர் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு தொடரும் உறவாக மாறுவார். அரசாங்கம் சம்பத்தப்பட்ட அனைத்தும் இனிமேல் உங்களுக்கு கைகூடி வரும். ஏதேனும் ஒரு பொறுப்பு கிடைக்கும். மற்றவர்களை வழி நடத்துவீர்கள். இனி எல்லாம் நல்லபடியாக நடக்கப் போகிறது.

பரிகாரங்கள்:

ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் சரபேஸ்வரரை வழிபடுங்கள். சென்னையில் இருப்பவர்கள் மாடம்பாக்கம் அருள்மிகு தேனுபுரீஸ்வரரை தரிசித்து அருள்பெறலாம். தென் மாவட்டத்தவர்கள் நெல்லை கிருஷ்ணாபுரம் அபயஹஸ்த ஜெயவீர ஆஞ்சநேயர் திருக்கோயிலில் ஜன்ம நட்சத்திரம் அன்று அர்ச்சனை ஆராதனைகளைச் செய்யுங்கள். 

No comments:

Post a Comment