விருச்சிகம் : 2015 - குருப்பெயர்ச்சிப் பலன்கள்

விருச்சிக ராசிக்கு இதுவரை ஒன்பதாமிடத்தில் இருந்து வந்த குருபகவான் பத்தாம் இடத்திற்கு மாறுகிறார். நமது மூலநூல்களில் ஒன்பதாமிடம் மிகச்சிறப்பான ஒரு இடமாகவும், பத்தாம் இடம் கேந்திர வீடு என்பதால் குருபகவானுக்கு சுமாரான இடமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

அதே நேரத்தில் சென்ற ஒரு வருடத்தில் ஒன்பதாமிடத்தில் இருந்த குருவால் விருச்சிக ராசிக்காரர்கள் ஓஹோவென்று இருந்திருக்க வேண்டும். ஆனால் என்னிடம் ஜாதகம் பார்க்க வந்தவர்களில் எழுபது சதவீதம் பேர் விருச்சிக ராசிக்காரர்கள்தான். விருச்சிகத்திற்கு கடுமையான ஏழரைச்சனி அமைப்பு நடந்து கொண்டிருப்பதால் கோட்சார நிலைகளில் சனியை தவிர வேறு எந்த நல்ல, கெட்ட கிரக நிலை அமைப்புகளும் வேலை செய்யாது.

முறையாகப் பார்த்தால் சென்ற மாதங்களில் ஒன்பதில் குரு, பதினொன்றில் ராகு என விருச்சிக ராசிக்காரர்கள் எவ்வித பிரச்சினையும் இன்றி சந்தோஷமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் பனிரெண்டு ராசிகளில் விருச்சிகம் மட்டுமே தற்போது வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. அதிலும் ஒரே வீட்டில் இருவருக்கு ஏழரை அஷ்டமச்சனி என்றால் வேதனைகளுக்கு சொல்லவே வேண்டாம்.

அவரவரின் பிறந்த ஜாதகத்திற்கும் வயதுகளுக்கும் ஏற்ப உங்களுக்கு ஏழரைச் சனியின் பலன்கள் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன. முப்பது வயதுகளில் இருக்கும் இளைய பருவத்தினருக்கு வேலை, தொழில், வியாபாரம் போன்ற அனைத்து அமைப்புகளிலும் துயரங்கள், துன்பங்கள், வாழ்க்கை இன்னும் செட்டிலாகாத நிலை, குடும்பம், குழந்தை என செட்டில் ஆனவர்களுக்கு வருமானம் இல்லாத நிலை என விருச்சிக ராசியின் வேதனைகள் அதிகம்.

எனவே ஒன்பதாமிடத்தில் உச்சமாக இருந்தும் சனியின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கி நன்மைகளை செய்யாத குருபகவான் தற்போது பத்தாம் வீட்டில் சனியின் பார்வைக்குள்ளேயே வருவதால் உங்களுக்கு கெடுதல்களைச் செய்யப் போவதில்லை.

விருச்சிகராசியைப் பொறுத்தவரை கோட்சார நிலைமைகள் ஏழரைச் சனியின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் குருப்பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி எதுவும் இப்போது மிகப்பெரிய தாக்கத்தை உங்களுக்கு உண்டு பண்ணாது.

அதேநேரத்தில் சனியைத் தவிர வேறு கிரகங்கள் நன்மை-தீமைகளைச் செய்யாது என்று சொல்ல வருகிறீர்களா? என்று கேட்டீர்களானால் அதுவும் இல்லை என்றுதான் சொல்வேன்.

பிறகு ஒன்பது கிரகங்கள் என்று நவக்கிரக அமைப்பு என்ற ஒன்று இருப்பதே தவறு என்றல்லவா ஆகிவிடும்? சில சூட்சும நிலைகளில் கிரகங்கள் ஒன்றுக்கொன்று மற்றவைக்கு கட்டுப்பட்டவையாகிவிடும். அதுபோன்ற ஒரு நிலை இப்போது விருச்சிக ராசிக்கு இருப்பதால்தான் கோட்சாரத்தில் விருச்சிக ராசிக்கு பலன் சொல்லுவதற்கு மிகுந்த சூட்சும அறிவு தேவைப்படும்.

இம்முறை பத்தாம் வீட்டிற்கு மாறும் குருபகவான் சனியால் பார்க்கப்படுவதாலும் ஜனவரி மாதம் முதல் ராகுவுடன் இணைவதாலும் தன்னுடைய சுயத்தன்மையை இழப்பதால் விருச்சிக ராசிக்கு கலப்புப் பலன்களைதான் செய்வார்.

ஆனாலும் ஏழரைச்சனி முழுவதுமாக முடியாமல் இருப்பதால் எதிலும் அவரப்படாமல் பொறுமை காத்து புது முயற்சிகள் எதையும் இப்போது செய்யாமலும் மிகப்பெரிய முடிவுகள் எதுவும் எடுக்காமலும் புதிதாக எதையும் தொடங்காமலும் காத்திருப்பது நல்லது.

அதேநேரத்தில் இனிமேல் மிகப்பெரிய கெடுபலன்கள் எதையும் உறுதியாக சனி தரமாட்டார் என்றாலும் ஏழரைச்சனி என்பது அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு நீங்கள் சுகமாக வாழத் தேவையான அனுபவங்களைத் தரும் அமைப்பு என்பதால் சனியால் இன்னும் சில மாதங்களுக்கு சில எதிர்மறை அனுபவங்கள் உங்களுக்கு இருக்கும்.

இளைய பருவத்தினருக்கு இதுவரை வேலை விஷயங்களில் இருந்து வந்த இடையூறுகள் இப்போது நீங்கும். இதுவரை மனதை போட்டு அழுத்திக் கொண்டிருந்த சில விஷயங்கள் தெளிவாக ஆரம்பிக்கும். எந்த பாதையில் செல்வது என தீர்மானிக்க முடியாமல் இருந்தவர்கள் இப்போது தெளிவாகி பாதையை தேர்ந்தெடுப்பீர்கள்.

உயிர் நண்பன் என்று சொல்லிக் கொண்டவர்களையும், உறவினர்களையும் சனி ஏற்கனவே புரியவும், பிரியவும் வைத்துவிட்டபடியால் இனிமேல் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனமாகவே வைப்பீர்கள் என்பதால் இனிமேல் விருச்சிகத்திற்கு வேதனைகள் என்பதே இல்லை.

நடுத்தர வயதில் உள்ளவர்களுக்கு இனிமேல் வேலை, தொழில், வியாபாரம் போன்ற விஷயங்களில் சிக்கல்கள் எதுவும் இருக்காது. இதுவரை இருந்து வந்த கஷ்டங்களும், நஷ்டங்களும் இனிமேல் தொடராது. குருபகவான் இப்போது உங்களைச் சற்று இளைப்பாற வைத்து மூச்சுவாங்க வைப்பார் என்பதால் இனிமேல் நிம்மதியாக இருக்கலாம்.

அதேநேரத்தில் இந்தக் காலகட்டத்தில் எதிலும் சற்றுக் கவனமாக இருப்பது நல்லது. புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம். முதலீடு செய்து தொழில் செய்ய வேண்டாம். தொழில் விரிவாக்கங்களும் கூடாது. அடுத்தவர்களையோ, வேலைக்காரர்களையோ, பங்குதாரர்களையோ முழுக்க நம்ப வேண்டாம். அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை.

அடுத்த வருட பிற்பகுதியில் இருந்து விருச்சிகராசிக்கு நல்ல வருமானங்களும், ரொம்ப நாட்கள் மனதில் நினைத்திருந்த லட்சியங்கள் நிறைவேறுதலும், வீடு வாங்குதல் போன்ற சுபநிகழ்ச்சிகளும் நடைபெறும். வீடுமாற்றம் அல்லது தொழில் இடமாற்றம் போன்றவைகள் நடக்கும் என்பதால் பொறுமை தேவை.

எல்லா விஷயங்களிலும் மிகுந்த எச்சரிக்கை உணர்வும் நிதானமும் அடக்கமும் கொண்டு செயலாற்றினால் நிச்சயம் சனியின் தாக்கத்திலிருந்து விடுபடலாம். குறிப்பாக மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் சிறிது காலம் அதைக் கை விடலாம். இயலாவிடில் அந்த நேரத்தில் மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்.

யாரையும் நம்ப வேண்டாம். குறிப்பாக வேலைக்காரர்கள் மேல் ஒரு கண் எப்போதும் இருக்கட்டும். பொருட்கள் திருட்டு போவதற்கோ நீங்கள் கை மறதியாக எங்காவது வைத்த பிறகு தொலைந்து போவதற்கோ வாய்ப்பிருக்கிறது. கைப்பொருளை எப்போதும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுவது நல்லது. வங்கியிலிருந்து பணம் எடுக்கும் போதோ அல்லது பெரிய தொகைகளை கையாளும்போதோ மிகவும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

வேலையில் இருப்பவர்கள் தங்களின் மேலதிகாரிகளிடம் அனுசரித்துப் போவது நல்லது. வேலையில் மாற்றம் ஏற்படும் காலம்தான் இது என்றாலும் தேவையில்லாமல் வேலையை விட வேண்டாம். பிறகு அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

கடன் பிரச்னைகளிலும் வழக்கு விவகாரங்களிலும் சிக்கித் தவித்து தூக்கத்தை இழந்திருந்தவர்களுக்கு அவைகள் நல்லபடியாக ஒரு முடிவுக்கு வந்து நிம்மதியைத் தரும். வீடு கட்டுவது இடையிலேயே தடைப்பட்டவர்கள், வீட்டுக் கடன் கிடைக்காமல் இருந்தவர்கள் இனிமேல் அந்த குறை நீங்கப் பெறுவார்கள்.

செலவுகளை சுருக்க வேண்டியது அவசியம். வீண் செலவுகள் செய்யாதீர்கள். எவருக்கும் உதவி செய்வதாக வாக்கு கொடுத்தால் அதை நிறைவேற்றுவது கடினமாக இருக்கும். போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம்.
அவைகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பது கடினம். தேவை இல்லாமல் யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம். கூடுமானவரை எல்லோரையும் அனுசரித்து போவது நல்லது. என்னதான் பிரச்னைகள் இருந்தாலும் பணவரவிற்கு கண்டிப்பாக குறைவு இருக்காது. எனவே எதையும் நீங்கள் சமாளித்து விடுவீர்கள்.

பத்தாமிட குருபகவான் தனது பார்வையால் இரண்டு நான்கு ஆறு ஆகிய இடங்களைப் பார்த்து பலப்படுத்துவார் என்பதால் மேற்கண்ட பாவங்களின் தன்மைகள் பலப்படும். குடும்பத்தில் சந்தோஷமும் மங்கள நிகழ்ச்சிகளும் இருக்கும். தனகாரகனான குரு தனஸ்தானத்தை பார்ப்பதால் அந்த பாவம் வலுப் பெறுகிறது. இதனால் தனலாபம் உண்டாகும். பணத்திற்கு பஞ்சம் இருக்காது என்பதால் பணச்சிக்கல் வராது. கொடுக்கும் வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள்.

குருவின் நான்காமிடப் பார்வையால் நீண்ட நாட்களாக வீடு கட்ட வேண்டும் அல்லது வீடு வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தவர்களுக்கு வீட்டுக்கனவு நனவாகும். ஆனாலும் பெரும்பாலானவர்கள் லோன் போட்டுத்தான் வீடு கட்டவோ வாங்கவோ செய்வீர்கள். இந்தக் குருப்பெயர்ச்சி உங்களை கடன்காரராக்கி அதன் மூலம் ஒரு நல்ல சொத்து சேர்க்க வைக்கும்.

அம்மா வழி உறவினர்களுடன் நல்ல சுமுகமான உறவு இருக்கும். அவர்களால் ஆதாயம் வரும். பூர்வீக தாயார்வழி சொத்துகள் தற்போது கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. இருக்கும் பழைய வாகனத்தை மாற்றி புதியதாக வாங்குவீர்கள். வாகனம் இல்லாதவர்களுக்கு வாகனயோகம் இப்போது உண்டு. மாணவர்களுக்கு படிப்பு நன்கு வரும். உயர்கல்வி கற்பதற்கு இருந்து வந்த தடைகள் நீங்கி மேல்படிப்பு படிக்க முடியும்.

மகன், மகளுக்கு திருமணம் நடக்கும். வளைகாப்பு, பூப்புனித நீராட்டு விழா போன்ற பெண்கள் சம்பந்தப்பட்ட மங்கள நிகழ்ச்சிகளால் நீங்கள் சகோதரிகளுக்கோ, மகள்களுக்கோ, பேத்திகளுக்கோ கடன் வாங்கி சுபச்செலவு செய்ய வேண்டி இருக்கும். மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி உங்களுக்கு கெடுதல்கள் எதையும் செய்யாது என்பதால் விருச்சிகத்திற்கு நிம்மதி தரும் பெயர்சிதான் என்பது உறுதி.

விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு:

சகோதர சகோதரிகளின் விஷயங்களில் நல்ல சம்பவங்களும் ஒருவருக்கொருவர் ஆதரவான நிகழ்வுகளும் இருக்கும். மனைவிக்கு நகை வாங்கித் தருவீர்கள். வீட்டில் ஆபரணச் சேர்க்கையும் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குதலும் நடக்கும். இனிமேல் அதிர்ஷ்டம் உங்களுக்கு கை கொடுக்கும். நீண்ட நாட்களாக போக முடியாமல் இருந்த குலதெய்வக் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று நேர்த்திக்கடன் செலுத்த முடியும்.

அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு:

புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். புதிய அறிமுகங்கள் கிடைக்கும். ஒரு சிலர் தங்கள் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை சந்திப்பார்கள். உங்களைப் புரிந்து கொள்ளாமல் உங்களிடமிருந்து விலகி இருந்தவர்கள் உங்களைப் புரிந்து கொண்டு தற்போது பக்கத்தில் வருவார்கள். இனிமேல் வாழ்க்கை முன்னேற்றப் பாதையில் செல்லத் துவங்கும். இதுவரை முயற்சி செய்தும் நடைபெறாத பல விஷயங்கள் இனிமேல் தெய்வத்தின் அருளால் முயற்சி இல்லாமலேயே வெற்றி பெறும். பண வரவுகள் சரளமாகி குடும்பத்தில் பணப் பிரச்னைகள் எதுவும் இல்லாமல் நிம்மதி இருக்கும்.

கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு:

இதுவரை உங்களுக்கு இருந்து வந்த தேவையற்ற பய உணர்வுகளும் கலக்கமான மனநிலையும் சிறிய விஷயங்களைக் கூட பெரிதாக்கி பார்த்து பயந்து கொண்டிருந்த சூழ்நிலையும் இனிமேல் விலகி மனத்தில் ஒரு புத்துணர்ச்சி பிறந்து புதுமனிதராக மாறப் போகிறீர்கள். இதுவரை விடை தெரியாமல் தத்தளித்து கொண்டிருந்த விஷயங்களுக்கான பதில்களும் தீர்வுகளும் உங்கள் மனத்தில் நல்லவிதமாகத் தோன்றி உங்களின் அனைத்துப் பிரச்னைகளும் உங்களுக்கு சாதகமாக முடிய போகிறது.

பரிகாரங்கள்:

ஏழரைச்சனி நடைபெறுவதால் சனிக்கிழமைதோறும் அருகிலுள்ள பழமையான சிவன் கோவிலில் அருள்புரியும் காலபைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதும், வியாழக்கிழமையன்று தக்ஷிணாமூர்த்தி வழிபாடு செய்வதும் நல்லது. சென்னையில் இருப்பவர்கள் நங்கநல்லூர் மற்றும் ஆழ்வார்ப்பேட்டை ஆஞ்சநேயர் ஆலயங்களுக்கு சென்று அவரின் அருள் பெறுவதும் துன்பங்களைக் குறைக்கும். 

No comments:

Post a Comment