துலாம் : 2015 - குருப்பெயர்ச்சிப் பலன்கள்

துலாம் ராசிக்கு இதுவரை பத்தாமிடத்தில் இருந்து உங்களுடைய தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவனஅமைப்புகளில் தடங்கல்கள் ஏற்படுத்தி தொல்லை தந்துக் கொண்டிருந்த குருபகவான் இம்முறை பதினொன்றாம் இடத்திற்கு மாறி லாப குருவாக உங்களுக்கு நன்மைகளை தர போகிறார்.

பொதுவாக சுக்கிரனின் ரிஷப, துலாம் ராசிகளுக்கு குருபகவான் வலிமை அடைந்தால் நன்மைகளைச் செய்யமாட்டார் என்பது ஜோதிடவிதி. அதன்படி சென்ற முறை ரிஷப ராசிக்கு மூன்றிலும், துலாம் ராசிக்கு பத்திலும் உச்சம் பெற்ற குருபகவான் இவ்விரு ராசிகளுக்கும் நன்மைகள் எதுவும் செய்யவில்லை.

அதிலும் பெரும்பாலான துலாம் ராசிக்காரர்களை வேலை, தொழில் விஷயங்களில் பத்தில் இருந்த உச்சகுரு பிழிந்தெடுத்து விட்டார். சென்ற வருடத்தில் வேலை இழந்தவர்கள், வேலையிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டவர்கள், காரணம் சொல்லப்படாமலேயே வேலையை விட்டு வெளியேற்றபட்டவர்கள் என துலாம் ராசிக்காரர்களின் துயரங்கள் அதிகம்.

அதேபோல சொந்தத் தொழில் செய்யும் துலாம் ராசிக்காரர்களுக்கும் வியாபாரிகளுக்கும் கடந்த காலங்களில் சுணக்கமான நிலையே இருந்து வந்தது. இந்த நிலைகளுக்கு காரணம் உச்சகுருதான் என்பதால் இப்போது நடைபெற இருக்கும் குருப்பெயர்ச்சி உங்களுக்கு இருக்கும் மனக்குறை அனைத்தையும் தீர்க்கும் என்பதால் துலாம் ராசிக்கு இது துன்பங்களை நீக்கும் குருப்பெயர்ச்சியாக இருக்கும்.

பதினொன்றாமிடத்தில் அதிநட்பு நிலைப்பெற்று லாபகுருவாக இருக்கும் குருபகவான் செய்கின்ற தொழிலில் அதிக முயற்சி இல்லாமலேயே நிறைந்த லாபங்களை தருவார். கண்மூடிக் கண் திறப்பதற்குள் பாக்கெட்டில் எப்படி பணம் வந்தது என்று சொல்ல முடியாத அமைப்பில் பண வரவு தற்போது உங்களுக்கு இருக்கும்.

அலுவலங்களில் நல்ல பெயர் கிடைக்கும். இழந்த போன பெருமையை மீட்டெடுப்பீர்கள். நீண்ட நாட்களாக மனதில் உருப்போட்டு வந்திருந்த எண்ணங்கள் திட்டங்கள் கனவுகள் ஆகியவை நீங்கள் நினைத்தபடியே நடக்கப்போகும் காலம் இது. எனவே இனிமேல் உங்களின் உடல்நிலையும் மனநிலையும் மிகவும் தெளிவாகவும் உற்சாகத்துடன் இருக்கும்.

இதுவரை நல்லவேலை கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு பொருத்தமான சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். தொழிலில் முதலீடு செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தவர்களுக்கு முதலீடு செய்வதற்கு பணம் கிடைத்து நினைத்தபடி தொழிலை விரிவாக்கம் செய்ய முடியும்.

அலுவலகத்தில் இதுவரை புரமோஷன் கிடைக்காதவர்கள் இரட்டிப்பு பதவிஉயர்வு கிடைக்கப் பெறுவார்கள். நிலுவையில் இருந்த சம்பள  உயர்வு உடனடியாகக் கிடைக்கும். இதுவரை உங்களை முறைத்துக் கொண்டிருந்த மேலதிகாரி மாறுதலாகி உங்களுக்கு சாதகமான, உங்களைப் புரிந்து கொள்ளும் நபர் உங்களுக்கு அதிகாரியாக வருவார்.

சுயதொழில் புரிபவர்களுக்கு இதுவரை இருந்து வந்த தேக்க நிலைகள் மாறி தொழில் சூடு பிடிக்கும். வருமானம் நன்கு வரும். வியாபாரிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள். உங்களின் எதிரிகள் ஓட்டம் பிடிப்பார்கள். வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி போன்றவைகளிலும், திரவம் சம்பந்தப்பட்ட தொழில் வகைகளிலும் இருப்பவர்களுக்கு நல்ல வருமானம் இருக்கும். சினிமா தொலைகாட்சி போன்ற துறைகளில் இருப்போர் இந்த சாதகமான நேரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மத்திய மாநில அரசுகளின் போட்டித் தேர்வுகள் மற்றும் வங்கி சம்பந்த பட்ட தேர்வுகள் எழுதுவோருக்கு இம்முறை வெற்றி கிடைக்கும். ஏற்கனவே எழுதி முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு குரு பகவான் நல்ல செய்திகள் கிடைக்க வைப்பார்.

கூட்டுக் குடும்பத்தில் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பீர்கள். வயதில் பெரியவர்கள் மூத்தவர்கள் மூலம் லாபம் உண்டு. குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். இதுவரை திருமணம் ஆகாமல் இருந்த இளைய பருவத்தினர்களுக்கு மளமள வென்று வரன்கள் நிச்சயிக்கப்பட்டு திருமண மண்டபம் புக்கிங் போன்ற விஷயங்கள் ‘சட்’ என்று நடந்து திருமணம் கூடி வரும்.

குழந்தை இல்லாத தம்பதியினருக்கு உடனடியாக குழந்தை பிறக்கும். குடும்பத்தில் சொத்துச் சேர்க்கை இருக்கும். நகை வாங்க முடியும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த பிரச்னைகள் விலகி உங்கள் பங்கு கைக்கு கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். நிலமோ, வீட்டுமனையோ வாங்க முடியும்.

பொதுமக்களோடு தொடர்புள்ள பணிகள் செய்யும் துறைகள், அரசியல்வாதிகள் போன்றோருக்கு கௌரவமான பதவிகள் மற்றும் அதிகாரம் செய்யக் கூடிய பதவி தேடி வரும். அரசு மற்றும் தனியார்துறை ஊழியருக்கு சம்பளம் தவிர்த்த ‘மேல்வருமானம்’ இருக்கும். பங்குதாரர்கள் இடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு விலகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். 

புதிதாக ஆடம்பர வாகனம் வாங்குவீர்கள். அரசாங்க வழியில் நன்மைகள் நடக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். உங்களுடைய மாற்றங்களை அடுத்தவர்கள் உணரும்படி நடந்து கொள்வீர்கள்.

நண்பர்கள், நலம் விரும்பிகள் மூலம் பொருளாதார உதவிகள் ஆதரவான போக்கு மற்றும் அனுசரணையான பேச்சு இருக்கும். இதுவரை கோர்ட்கேஸ் போன்ற வழக்குகளில் சிக்கி அவதிப்பட்டவர்களுக்கு நல்ல திருப்புமுனையான நிகழ்ச்சிகள் நடந்து உங்கள் பக்கம் அனைத்தும் சாதகமாகும்.

புதிய ஏஜென்சி எடுக்கலாம். நல்ல கம்பெனியின் டீலர்ஷிப் கிடைக்கும். தொழிலை விரிவாக்கம் செய்யவோ புதிய கிளைகள் ஆரம்பிக்கவோ இது நல்லநேரம். விவசாயிகள், கலைஞர்கள், பொதுவாழ்வில் இருப்பவர்கள், ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர், தொழிலாளர்கள், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள் போன்ற எந்த துறையினர்களாக இருந்தாலும் இந்த நல்லநேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு நினைத்ததை சாதிக்கலாம்.

கணவன் மனைவி உறவில் இதுவரை இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் நீங்கும். மூன்றாவது மனிதரால் குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் அடையாளம் காணப்பட்டு நீங்களே பிறர் உதவியின்றி குழப்பங்களைத் தீர்த்துக் கொள்வீர்கள். லாபஸ்தானத்தில் இருக்கும் குருபகவான் தனது விசேஷ பார்வைகளால் உங்கள் ராசிக்கு மூன்று ஐந்து ஏழாமிடங்களைப் பார்ப்பார் என்பதால் அந்த இடங்கள் மிகவும் வலுப்பெற்று உங்களுக்கு நல்ல பலன்களை செய்யும்.

குருபகவானின் மூன்றாமிடப்பார்வையால் இதுவரை காணாமல் போயிருந்த உங்களின் மனதைரியம் இப்போது மீண்டும் வரும். எதையும் சமாளிப்பீர்கள். ஒரு சிலர் ஏதேனும் ஒரு செயலால் புகழ் அடைவீர்கள். சகோதர உறவு மேம்படும். இளைய சகோதரத்தால் நன்மை உண்டு. தம்பி தங்கையர்களுக்கு நல்லது செய்ய முடியும். மூத்த சகோதர சகோதரிகள் உதவுவார்கள். நோய்வாய்ப்பட்டிருந்தவர்கள் உடல் நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

பெண்களுக்கு தங்கம் மற்றும் வைரத்திலான கழுத்துநகை வாங்கும் யோகம் வந்துவிட்டது. மூன்றாம் இடம் கழுத்துப் பகுதியை குறிக்கும் என்பதால் இளம்பெண்களுக்கு தாலிபாக்கியமும் திருமணமானவர்களுக்கு நகைகள் சேருதலும் இந்த குருப்பெயர்ச்சியால் நடக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மிகவும் அருமையான வாய்ப்புகள் வரக்கூடிய காலகட்டம் இது. அலுவலகத்தில் பிறரால் மதிக்கப்பட்டு பாராட்டுப் பெறுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருக்கும் இளம் பெண்களுக்கு நீங்கள் விரும்பியவாறே அதிக சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.

இளம் பருவத்தினர் தங்களுடைய எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இந்த வருடம் சந்திக்க வாய்ப்பு இருப்பதால் உங்களுக்கு காதல் வரக்கூடும். மாணவர்கள் படிப்பைத் தவிர மற்ற அனைத்து உல்லாசங்களிலும் ஈடுபடுவீர்கள். ஆனால் தேர்வு நேரத்தில் ஏதோ ‘மாய மந்திரம்’ செய்து பாசாகி விடுவீர்கள்.

குருபகவான் தனது பார்வையால் ஐந்தாமிடத்தைப் பார்த்து புனிதப் படுத்துவதால் வயதானவர்களில் இதுவரை தீர்த்த யாத்திரை செல்லாதவர்கள் இந்தக் குருப் பெயர்ச்சியால் நினைத்த புனிதத்தலத்திற்கு சென்று வருவீர்கள். காசி கயா பத்ரிநாத் கேதார்நாத் கயிலை போன்ற வடமாநில புனித யாத்திரை செல்லும் பாக்கியம் சிலருக்கு கிடைக்கும்.

பூர்வ புண்ணிய ஸ்தானம் குருவின் பார்வையால் வலுப் பெறுவதால் மகன் மகள்களால் பெருமைப்படக் கூடிய செய்திகள் இருக்கும். வெளிநாட்டில் வேலை செய்யும் பிள்ளைகளை தற்போது பார்க்க முடியும். நீண்ட நாட்களாக தள்ளிப் போயிருந்த குலதெய்வ வழிபாடு சிறப்பாகச் செய்ய முடியும்.

நேர்த்திகடன்கள் செலுத்துவீர்கள். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். ஷீரடி மகான் ராகவேந்திரர் மகாபெரியவர் பகவான்ரமணர் சத்யசாய் போன்ற ஆன்மிகத் திருவுருக்கள் அவதரித்து அருளாட்சி செய்த திருத்தலங்களை தரிசிப்பீர்கள்.

இதுவரை சேமிக்க முடியாதவர்கள் இந்த முறை குழந்தைகளின் பெயரில் அவர்களின் எதிர்காலத்திற்காக ஏதேனும் ஒரு வழியில் முதலீட்டு சேமிப்புகள் செய்ய முடியும். மொத்தத்தில் துலாம் ராசிக்கு குருபகவானின் லாபஸ்தானப் பெயர்ச்சி மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் நல்ல யோகங்களையும் தரும் என்பது உறுதி.

சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு:

எழுத்து சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்கள், அக்கவுண்டண்டுகள், கணிப்பொறித்துறையினர், செல்போன் போன்ற நூதன எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் விற்போர் குறிப்பாக காண்ட்ராக்டர்கள், நிர்வாகப்பணி சம்பந்தப்பட்டவர்கள், ஒரு துறைக்கோ அல்லது நிறுவனத்திற்கோ தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், தந்தையின் தொழிலைச் செய்பவர்கள், நெருப்பு சம்பந்தப்பட்டவர்கள் போன்றோருக்கு இந்தக் குருப்பெயர்ச்சி அற்புதமான பலன்களைத் தரும்.

சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு:

உங்களுக்கு மிகப்பெரிய லாபங்கள், பணவரவுகள் கிடைக்கும். வீடு வாகன விஷயங்களில் புதிய மாற்றங்கள் இருக்கும். சொந்த வீடு புதிய வாகனம் அமையும். மனைவியால் நன்மைகள் இருக்கும். இதுவரை அடுத்தவரை எதிர்பார்த்திருந்த நிலைமை மாறி நீங்கள் மற்றவர்களுக்கு உதவுவீர்கள். தாயாரின் நன்மைகளுக்காக வரும் வருமானத்தில் செலவுகள் செய்வீர்கள். தாயாருக்காக ஏதேனும் வாங்கிக் கொடுப்பீர்கள். வரும் வருமானத்தை எதிர்காலத்திற்காக சேமிக்க முயற்சி செய்யுங்கள்.

விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு:

மாமியார் வீட்டில் இருந்து வாழ்க்கைத்துணையின் பங்காக ஏதேனும் ஒரு சொத்தோ, அல்லது நல்லதொகையோ சரியான சந்தர்ப்பத்தில் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. ரியல் எஸ்டேட், வீடு கட்டிக் கொடுக்கும் புரமோட்டர்கள், சிகப்புநிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், செம்மண் பூமி, ஆறு, மலைப்பாங்கான இடங்களில் தொழில் வைத்திருப்பவர்கள் மேன்மைகளை அடைவீர்கள். சீருடை அணிந்து செயல்படும் துறையினருக்கு இதுவரை இருந்த அனைத்துப் பிரச்னைகளும் விலகி நிம்மதி இருக்கும்.

பரிகாரங்கள்:

மூத்தவர்களுக்கும் குரு ஸ்தானத்தில் இருப்பவர்களுக்கும் சிறு உதவியாக இருந்தாலும் தேடிப்போய் உதவி செய்து அவர்களின் மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் ஆசிகளையும் பெறுங்கள். வயதானவர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப் பட்டால் உதவுவது, ஏழை மாணவருக்கு கல்வி உதவி, வசதிக்குறைவான குடும்பப் பெண்ணிற்கு திருமணத்திற்கு உதவுவது போன்றவைகளால் குருபகவானால் கிடைக்கும் நன்மைகளை இன்னும் பெருக்கிக் கொள்ள முடியும். 

No comments:

Post a Comment