நவாம்ச பலன்கள் – ரிஷபம்


நவாம்சத்தில் ரிஷபம் லக்னமாக அமையப் பெறுவது மிக நல்லதொரு அமைப்பாகும். அறிவும் அதிர்ஷ்டமும் ஒன்றாக வாய்க்கும்.யூகித்து அறியும் வல்லமை கிடைக்கும். ஆய்வு செய்திடும் வாய்ப்பு கிடைக்கும். மணிக்கணக்கில் பேசும் திறமை உள்ளவர்கள்.

சிறிய பதவி, சிறுதொழில் என்று ஆரம்பம் நிதானமாக இருக்கும். அதுபோலவே படிப்படியான உயர்வுகளும் ஏற்படும்.. திடீர் முன்னேற்றம், பிரபல்யம் என்றில்லாமல் சீரான முன்னேற்றம் நிச்சயம் உண்டு. இளமையில் பல திட்டங்களை போட்டு பார்ப்பார்கள். ஆடை அதை, இதை செய்ய வேண்டும் என்று மணக்கணக்குகளை வைத்திருப்பார்கள். தம் நடு வயதுகளில் சாதித்து காட்டி சுகானுபவங்களில் திளைத்து பின் முதுமையில் ஆன்மீகவாதியாகவும் வாழ வாய்ப்பு உண்டு.

பலரும் விரும்பும் நபராக வலம் வர முடியும். அந்தஸ்து உயர்வு கூட சில எதிரிகளை ஏற்படுத்தி விடும். இதனையும் அனுபவிக்க வேண்டி வரும். நண்பர்களை தேர்வு செய்வதில் மிக்க கவனம் வேண்டும். மதுப்பழக்கமே இல்லாத போதும் நண்பர்களுக்காக மதுபான அரங்குகளில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.

ரிஷப லக்ன நவாம்சத்தில் பெண் குழந்தை பிறந்தால் அக்குழந்தையின் தந்தை குடிப்பழக்கம் போன்ற வேண்டாத பழக்கங்களுக்கு ஆளாகின்றார்.

பல பெண்களை மயக்கும் ஆண்களும், பல ஆடவர்களை அலைக்கழிக்கும் பெண்களும் ரிஷப நவாம்சத்தில் பிறந்தவர்களே,

இனிக்கும் இல்லறம் இவர்களுக்கு உண்டு. செல்வாக்கு மிக்க குடும்பமாய் திகழும். தன் குடும்பமே முக்கியம் என்பது போல் இவர்கள் செயல்கள் இருக்கும். வருமானத்தை குடும்பத்திற்கு தந்து விட்டு தான் அடுத்த வேலைப் பார்பார்கள். குடும்பத்தில் அனைவருமே கல்வியில் மேன்மை பெற்றிடுவர். கலை குடும்பம் என்று சொல்லும் வகையில் பெயர் எடுப்பார்கள்.

இவர்களுடைய யோகங்களில் மிகசிறப்பானது என்று கவனித்தால் தன்னுடன் படித்தவர்கள், உடன் பிறந்தோர் இவர்களை விட பிரம்மாதமாக முன்னுக்கு வருவார்கள்.

பல விதங்களில் வாய்புகள் தேடி வரும். திறமையை விட அதிர்ஷ்டமே இவர்களுக்கு பலவாறு உதவி நிற்கும். உழைப்பை விட இவர்கள் பெயருக்கே பெரும் வருமானம் கிடைக்கும்.

தங்களுக்கு என்று ஒரு முகவரி, சந்திக்க ஒரு அலுவலகம் என அடைத்துக் கொண்டு காலம் நேரம் தவறாமல்வந்தாலே போதும். வாய்ப்புகள் தானே வந்து நிற்கும். இது உறுதி. அதுபோலவே உதவி தேவைப்படுகின்றது என்று தெரிந்தால் யாராக இருந்தாலும் தம்மால் இயன்ற உதவியை செய்ய வேண்டும். தக்க காலத்தில் கைம்மாறு கிடைக்கும்.

வருமானத்திற்கு கலைத்துறை கை கொடுக்கும் என்பது போல் உணவு, எண்ணைய், பழைய இரும்பு, விவசாயம் போன்ற துறைகளும் உடன் வரும். ஆராய்ச்சி மேன்மை தரும். சட்ட துறையும், திட்ட துறையும் இவர்களது கருத்துக்களை ஏற்று கொள்ளும் காலமும் வரும்.

இவர்களை எளிதில் புறக்கணிக்க முடியாது. ஆனால் சிலரால் ஒதுக்கப் பட நேரும். அதாவது ரிஷப லக்ன பெண்களை பிற பெண்கள் புறம் தள்ளுவார்கள். ஆனால் இவர்கள் மனதில் வைத்திருந்து தக்க சமயத்தில் காலை வாரிவிட்டு பழி தீர்த்துக் கொள்வார்கள். பட்ட வலியை எளிதில் மறந்து விட மாட்டார்கள்.

ஓரளவு பிரபலமான குடும்பத்தில் ஜனனம் அமையும். வளரும் காலத்தில் பெற்றோரை பிரிந்து தனித்து வளர்க்கப்படலாம். இளம் பிராயத்திலேயே இவர்களின் அனுபவமிக்க பேச்சை கேட்டு பலரும் பிரமிப்படைவார்கள்.

விவரம் தெரியவரும் வயதுகளிலேயே வித்தியாசமாக இருப்பார்கள். எடுப்பான உடை அணிந்து கம்பீரமாக தோன்றுவார்கள். ஒளி மிகுந்த கண்கள் எவரையும் கவர்ந்து இழுக்கும்.

உள்ளன்போடு பழகுவார்கள். கூச்சப்படாமல் சகஜமாக இருப்பார்கள். பொதுவான சகிப்புத்தன்மை தென்படும். எப்போதாவது தான் கோபம் வரும். பழகிவிட்டால் பரிந்து பேச தயங்கமாட்டார்கள். ஜாமீன் போடா இவர்களை நம்பலாம். அளவு கடந்த ஞாபக சக்தி உள்ளவர்கள் என்பதால் உடன் பழகுபவர்களை ஞாபகபடுத்திக் கொண்டு பேசுவார்கள். இதுவும் கூட இவர்களை பிரமுகர்களாக்கும்.

கல்வியில் கவனம் இராது. அக்கரையுல்லாமலே பல படிப்புகளை படித்து முடித்து விடுவார்கள். அனுபவ அறிவே கல்வி அறிவைவிட மிகுந்திருக்கும். தக்க சமயத்தில் அனுபவமே ஆசிரியராகும். தான் படித்ததை தான் பெற்ற அனுபவத்தோடு இணைத்து பேசவும், எழுதவும் செய்வார்கள்.

உடன் பிறந்தோர் இவர்களின் உள்ளத்தை உணர்ந்திரார். உடன் பிறந்தோர் இவர்களின் உதவியை எதிர்பார்கும் நிலை வரலாம்.நிச்சயம் முன் சென்று உதவுவார்கள்.

இவர்கள் இளம் பிராயத்திலேயே சம்பாத்தியத்தில் ஈடுபடவார்கள். பெரிய முதலீடு தேவை படாது. எளிமையான ஒரு தொழிலை ஆடம்பரமில்லாமல் ஆரம்பித்து படிப்படியாக முன்னேற்றம் காண்பர். விவசாயம் சார்ந்த விஞ்ஞான பூர்வமான தொழில்களில் மனம் லயிக்கும்.அந்த தொழில்களும் கை கொடுக்கும். பழுது நீக்கும் தொழில்களும் பெரும் பலன் தரும். பல பிரமுகர்களின் ஆதரவு சுலபமாக கிடைக்கும். இவர்களின் அலுவலகத்தில் முக்கிய நபர்களை அடிக்கடி பார்க்கலாம். இதுவே இவர்களின் பலம்.

ரிஷப நவாம்சத்தில் சூரியன்

தயாள குணம் உடையவர்கள். தனது வருமானத்தை உடன் பிறந்தவர்களுக்கு கொடுத்து மகிழ்வார்கள். பணச் சிக்கல்களை வெகு திறமையாக கையாள்வார்கள். கௌரவமே பிரதானம் என நினைப்பார்கள். எவ்வளவு வருமானம் வந்தாலும் தாழ்ந்த செயல்களில் ஈடுபட மாட்டார்கள். எடுத்த காரியத்தை முடிக்க குறுக்கு வழியில் எதையும் செய்ய மாட்டார்கள்.

விளைவுகளை பற்றி சிந்தித்து அமைதியாகவே தென்படுவார்கள். ஆனால் மிகவும் முன் எச்சரிக்கைகாரர்கள். ஏதேனும் பெரிய செயல்களில் ஈடுபடும் போது மட்டும் சூரியன் போல் சூடாக இருப்பார்கள், ஒரே சமயத்தில் இரு வெவ்வேறு துறைகளில் ஈடுபடுவார்கள்.

ரிஷப நவாம்சத்தில் சந்திரன்

தேய்பிறையில் இருந்து வளர்பிறைபோல் வரிசையாகவே தன்னுடைய வளர்சிக்காக எதையும் செயல்படுத்துவார்கள். தன்னை யாரும் குறை கூற கூடாது என்று மிகவும் கவனத்துடன் இருப்பார்கள்.

சமுகத்திற்கு கட்டுபடுபவர்கள் இவர்கள். சமுக கட்டுபாடுகளை மீறி எதையும் செய்வதற்கு அச்சப்படுவார்கள். பூர்வீக தொழிலும், பூமி சார்ந்த தொழிலும் இவர்களுக்கு மிகச்சிறப்பாக கைகொடுக்கும். செய்யும் தொழிலே தெய்வம் என்று எந்த தொழிலை செய்தாலும் மிகச்சிறப்பாக செயல்படுத்துவார்கள். நான்கு திசைகளிலும் நண்பர்கள் நிறைந்து இருப்பார்கள். நண்பர்களுக்கு செய்யும் உதவிகளால் இவர்களும் பயன் அடைவார்கள்.

இவர்கள் கலை துறையில் ஈடுபட்டால் வெகு பிரபல்யம் ஏற்படும். மதுபானம், திரவ சம்பந்தமான உணவுகளும் லாபம் தரும். குளிர்ச்சி தரும் கருவிகளில் பணம் குவிக்கலாம். ரிஷப சந்திரன் ஜாதகரின் பெயரை புகழடைய செய்திடுவார்.

ரிஷப நவாம்சத்தில் செவ்வாய்

பேச்சில் உறுதி இருக்கும். வாக்கு வலிமை பெறும். அது ஊருக்கும் உறவுக்கும் ஒத்து வராது. நல்ல கருத்துகளை சொல்லுவார்கள். ஏற்க இயலாது என்று உடன் இருப்போர் உதாசீனம் செய்வர். ஆதரவு அற்றவர்களுக்கு உதவி செய்வார்கள்.

உழைப்பவர்கள் தம் பங்கை பெற சரியான வழி வகையை கையாள்வர்கள். ஒதுக்கப்பட்ட பெண்களை தாழ்த்தப்பட்ட நிலையில் இருந்து மீட்க முயலுவார்கள். ஆனால் ஒரு சமயம் பாலியல் குற்ற சாட்டுக்கு ஆளாகி நிற்க நேரும். துரோகிகளால் அவதிப்படுவர். பலரும் போற்ற வாழ்ந்தாலும். இன்னொரு புறம் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக வேண்டி வரும்.

நினைத்த அளவில் சம்பாதிக்க இந்த செவ்வாய் பகவான் உதவுவார். யார் எப்படி போனால் என்ன என்ற எண்ணமும் சுயநலமும் இருந்தால் மட்டுமே வளமான எதிர்காலம் அமையும். சமுதாயத்தை சீர்படுத்த போகிறேன், புது விசயங்களை தமது தொழிலில் வெளியிடுகின்றேன் என்று பல முயற்சிகளில் ஈடுபடுவது வீணே.

ரிஷப நவாம்சத்தில் புதன்

சாதி மத பேதமில்லாமல் ஏழை-பணக்காரன் என யாவரும் விரும்பும் ஒரு துறை கலைத்துறை. அந்த கலைத்துறையின் வித்தகர் இவர்கள். யாவரும் விரும்பும் நாடகம், நடிப்பு, இசை, ஜோதிடம் எளிய வைத்தியம் போன்ற துறைகளில் ஈடுபட்டு பெரும் புகழ் அடைவார்கள். முதலீடு போடாமலேயே பெரும் பணம் வந்து சேரும். அப்படி சேரும் பணத்தை சேமிக்க தெரிந்தவர்கள். ஆயினும் தன் மனம் போன வழியில் செலவழிக்கவும் தயங்க மாட்டார்கள். கணக்கு வழக்குகளில் திறமை இருக்கும். அது போல ஆட்களை கணித்து பயன்படுத்தும் பக்குவமும் நிரம்ப பெற்றவராவர்.

சாதி சமய உணர்வுக்கு ஆட்படுவார்கள். ஆழ்ந்த ஆன்மீக கருத்துகள் பெற்றிருப்பார்கள். எந்த மதத்தையும் பேதம் பார்க்காமல் வழிபடுவார்கள். காலம் மாறினாலும் இவர்களுடைய அபிப்ராயம் சரி என்றே பேசப்படும். அன்றே சொன்னார்கள், அது போலவேஆனது என்று புகழப்படுவார்கள். ஆரம்ப காலத்தில் வருமானம் பற்றாக்குறையே. வயது ஆக ஆக புகழும் கூடவே வருமானமும் வந்து சேரும். நீண்ட காலம் பயன் தரும் தொழில் அமைந்து விடும். இவர்கள் பண்பாளர்கள், ஆலோசனைக்கு உகந்தவர்கள்.

ரிஷப நவாம்சத்தில் குரு

பெரிய மனிதர் என போற்றப்படும் வாழ்க்கை அமையும். பெருந்தன்மையும், கர்வமும் சேர்ந்த குணம் கொண்டவர்கள். விமர்சிக்க தயங்க மாட்டார்கள். மக்கள் பார்வையில் பதிந்து இருப்பார்கள். தத்துவவாதி, சீர்திருத்தவாதி எனப்\ பெயர் ஏற்படும். எதுவானால் என்ன, தனது குடும்பமே முக்கியம் என்ற தன்னலம்மிக்கவர்கள் என்பதும் நிதர்சனம்.

கோவில், குளங்கள், பூஜை தர்மகாரியங்களில் இவர்களை காணலாம். பெரிய பயணங்கள் பலனும் பணமும் அளிக்கும். இவர்கள் பேச்சுவன்மை பரிசுக்கும், பாராட்டுக்கும் வகை பெற்று தரும்.

நன்கொடைகள் நாலாபுறமும் இருந்தும் வந்து விழும். பிறர் சொத்துகளை எப்படியாவது அனுபவிக்கும் வாய்ப்பும் உண்டாகும். பொன்னும் பொருளும் சேரும். பலர் போற்ற வாழ இந்த குரு வகை செய்வது உறுதி.

ரிஷப நவாம்சத்தில் சுக்கிரன்

பொதுவாக அன்பே வடிவானவர்கள். அனைவருக்கும் பிடித்தமானவர்கள். கல்வி கேள்விகளில் சிறந்தவர்கள். வம்பு தும்புக்கு அஞ்சுபவர்கள். பொறுப்புகளை நம்பி ஒப்படைக்கலாம். விருப்பத்துடன் ஏற்ற்றுக்கொள்வார்கள். செய்தும் முடிப்பார்கள். நாட்டியம், ஓவியம், காவியம் இவைகளில் அபார ஞானம் இருக்கும். சிறு பிரயாதிலேயே இவர்கள் இசை சூழும் இடங்களில் அடைந்து கிடப்பார்கள்.

திருமணம் சகலதையும் மாற்றிவிடும் எனலாம். இல்லறத்தில் இனிமை காணாத ஒரு நிலைமையை இந்த ரிஷப சுக்கிரன் ஏற்படுத்துவார். கணவன் மனைவி உறவில் ஊசல், எதிர்பாராத பிரிவுகள், பணப்பிரச்சனைகள் என துரதிர்ஷ்டம் துரத்தும். மணவாழ்க்கை போராட்டமாகாவோ அல்லது கன்னியர்அமைவது கால தாமதமாகும். காலம் கடந்த பின்னரே உறவுகள் சேர்ந்து மகிழ முடியும்.

ரிஷப நவாம்சத்தில் சனி

குபேரனுக்கும், இவர்களுக்கும் ஓயாத சண்டை என்பதுபோல் செல்வம் பிடிபடாமல் ஓடிக்கொண்டே இருக்கும். பணத்தின் அருமை தெரியாமல் செலவழித்து விடுவார்கள். வரும் என்ற நினைப்போடு வருவாயை மனதிலே வைத்து இருப்பர். ஆயினும் காசு கரைந்ததும் தான் தெரியும் வரப்போவது வருவாய் அல்ல; பெரும் கடன் என்று.

இளமையிலேயே தந்தை வழி உறவினர்க்கு ஆகாது. எப்போதும் எந்த உறவும் தக்க சமயத்தில் கை கொடுக்காது. நல்ல மனிதர்தான். இருந்தாலும் இவர்களது தோற்றமும் அடக்கமும் இவர்களுக்கு எதிரான விளைவுகளையே தருகின்றது. மற்றோர் இவர்களை மட்டமாகவே எடைபோடுவார்கள். விலக்கி வைத்துவிட்டு வருமானத்தை தன் கைக்குள் போட்டுக் கொண்டு சென்று விடுவார்கள். இவர்கள் நிலையோ அல்லாட்டமே. பணிவும், அடக்கமுமே இவர்களின் துரதிர்ஷ்டத்திற்க்கு வாயில் எனலாம்.

நல்லதுக்கு காலம் இல்லை என்று இவர்களை குறித்து சொல்லலாம். எளிமையும் பணிவும் எப்போதும் நல்லது செய்யாது. துணிவும் தைரியமும் தேவைப்பட்ட இடத்தில் பயன்படுத்தி உஷாராக இருக்க வேண்டும். பலருக்கும் பாடமாக இருப்பதை விட தன்னை நம்பிய சந்ததிக்கு உபயோகமாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும், தம் வாழ்வின் பிற்காலம் அதாவது எதிர்காலத்தை எண்ணி செயல்படுக.

ரிஷப நவாம்சத்தில் ராகு

அறிவே பிரதானம். பிறர் வியந்து நிற்கும் தனித்திறமை இருக்கும். திட்டமிடாமல் இருப்பார்கள். எனினும் மின்னல்போல செயல்பட்டு மிரள வைப்பார்கள். வசிக்கும் இடத்தையோ, செய்யும் தொழிலையோ, மாற்றிக் கொண்டிருப்பார்கள். வெளி பிரதேசங்களில் சஞ்சாரம் செய்து வருவதில் அலாதி பிரியம்.

ஒரு சமயத்தில் திடீரென எதாவது ஒரு பகுதியில் பிரபல்யம் பெற்று பிரமுகராகி விடுவார்கள். கலைத்துறையில் திடீரென்று புதுமுகமாக வந்து பெரும் புகழ்பெறுவதும் ஒரே சமயத்தில் மார்க்கெட்டை இழந்து காணாமல் போவதும் இவர்களே.

கல்வி ஞானம் குறைவே. ஆயினும் புதிய புதிய யோசனைகளையும், விசயங்களையும் வெளியிட்டு அசத்துவார்கள். திட்டங்களை அடிகடி மாற்றுவதே இவர்கள் சரிவுக்கு காரணம். இதில் கவனம் இருந்தால் அதிர்ஷ்ட தேவதை அரவணைப்பாள்.

ரிஷப நவாம்சத்தில் கேது

பிரமுகர்கள் ஆவார்கள். சுகமான வாழ்க்கை எதாவது ஒரு வழியில் வந்து சேரும். எவரையும் வசீகரிக்கும் ஒரு திறன் இருக்கும். கோமாளி போல் இருந்தாலும் தள்ளி விட முடியாது. வறுமை தொடாதிருக்கும்படி வாழ்வை அமைத்துக் கொள்வார்கள்.வழிவகையை ஆராயக்கூடாது. நடத்தையில் நேர்மை குறைவே என பேச்சு வந்தாலும் காதில் போட்டுக் கொள்ள மாட்டார்கள். சுகமே பிரதானம். கலைகளில் வெற்றி காத்திருகின்றது.

No comments:

Post a Comment