ரிஷபம் : 2015 - குருப்பெயர்ச்சிப் பலன்கள்

ரிஷப ராசிக்காரர்கள் இதுவரை தனது ராசிநாதன் சுக்கிரனுக்கு எதிர்த்தன்மை உடையவரான குருபகவானின் உச்சவலுவாலும் அவரது மூன்றாமிடத்து அமர்வாலும் நன்மைகள் எதுவும் கிடைக்காமல் எதிலும் பெரிய முன்னேற்றங்கள் இல்லாமல் கடந்த வருடத்தைக் கழித்தீர்கள்.

ரிஷப நாதன் சுக்கிரனின் எதிரியான குருபகவான் வலுப்பெறும் நிலையில் உங்களுக்கு எப்போதும் நன்மைகளைச் செய்யமாட்டார். அவர் தற்போது உச்சவலு நீங்கி நான்காமிடமான சிம்மராசிக்கு பெயர்ச்சியாகிறார். 

நான்காமிடமும் நன்மைகளைத் தரும் இடமாக நமது மூலநூல்களில் சொல்லப்படவில்லை என்றாலும் இதுவரை உச்சவலுவில் இருந்து உங்களுக்கு தொல்லைகளைக் கொடுத்த குருபகவான் வலுக்குறைந்து மாறுவது கஷ்டங்கள் தராத ஒரு அமைப்பு.

மேலும் இந்தப்பெயர்ச்சியின் மூலம் சிம்மத்திற்கு மாறும் குருபகவான் ஜனவரி மாதம் 29-ந்தேதி முதல் ராகுபகவானுடன் இணைந்து தன் வலிமையை இழப்பார் என்பதால் அந்த நிலையும் ரிஷப ராசிக்கு நன்மைதரும் என்பதோடு மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி தொல்லைகளைத் தராத குருப்பெயர்ச்சியாக அமையும் என்பது உறுதி.

அதேநேரத்தில் இப்போது சிம்மத்திற்கு மாறும் குருபகவான் வலுவுடன் இருப்பார் என்பதாலும் உங்களின் ஏழாமிடத்தில் இருக்கும் யோகாதிபதி சனிபகவானின் பார்வையில் இருப்பார் என்பதாலும் உங்களுடைய வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவனஅமைப்புகளைக் குறிக்கும் பத்தாமிடத்தைப் பார்வையிடுவார் என்பதாலும் இதுவரை மேற்கண்ட அமைப்புகளில் உங்களுக்கு இருந்து வந்த தடைகளும், தாமதங்களும் லாபம் தராத போக்கும் இணைக்கமற்ற நிலையும் உடனடியாக மாறி பொருளாதார மேன்மை பெற தொடங்குவீர்கள்.

அடுத்து தனது பார்வையால் எட்டாமிடத்தையும், பனிரெண்டாமிடத்தையும் குருபகவான் பார்த்து வலுப்படுத்துவதாலும் எட்டாமிடமான தனுசு ராசி அவரது சொந்தவீடு என்பதாலும் ஒரு சுபகிரகம் அஷ்டமாதிபதியாகி தன்பாவத்தை வலுப்படுத்தினால் வெளிநாட்டுத் தொடர்புகளையும் அதனால் நன்மைகளையும் செய்யும் என்ற விதிப்படி தற்போதைய குருப்பெயர்ச்சிக்குப் பிறகு ரிஷப ராசிக்காரர்களுக்கு தூர இடங்களிலிருந்து நன்மைகள் கிடைக்கும்.
இதுவரை வெளிநாட்டுக் குடியுரிமை கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கும் விசா பிரச்னையால் வெளிநாடு செல்ல முடியாமல் சிக்கலில் இருந்தவர்களுக்கும் வெளிநாட்டு வேலை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கும் ஜூலை மாதம் 14-ந்தேதி முதல் அவர்கள் நினைத்தபடியே செயல்கள் நடந்து நன்மைகள் உண்டாகும்.

இதுவரை வீட்டில் திருமணமாகாமல் இருக்கும் இளையவர்களுக்கு இந்த பெயர்ச்சினால் சுபகாரியங்கள் நடந்தேறி அது விஷயமாக நீங்கள் பெரிய தொகையை செலவு செய்து அதன் மூலம் அடுத்தவர் கவனத்தை ஈர்க்க முடியும். இந்த பெயர்ச்சினால் ரிஷப ராசிக்காரர்களின் வீட்டில் சுப காரியங்கள் உண்டு.

அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு துறைரீதியான இடமாறுதல்களோ அல்லது பதவி உயர்வுடன் கூடிய ஊர்மாற்றமோ இருக்கலாம். தற்போது இருக்கும் வசதியான ஊரை விட்டு வேறு எங்கோ மாற்றம் இருக்கும் என்பதால் பதவி உயர்வு என்றாலும் அதை அரைகுறையான மனதுடன் தான் நீங்கள் ஏற்றுக் கொள்ளும்படி இருக்கும்.

வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்களுடைய விருப்பத்திற்கும் படித்த படிப்பிற்கும் பொருத்தமான வேலைகள் அமைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. நீண்ட நாட்களாக உங்களுக்கு மன வருத்தத்தை கொடுத்துக் கொண்டு இருந்த உயரதிகாரி மாறுதலாகி, அந்த இடத்திற்கு உங்களுக்கு அனுசரணையானவர் வருவார்.

இதுவரை சிக்கலில் இருந்த தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் இனிமேல் பத்தாமிடத்தைக் குரு பார்க்க போவதால் தடைகள் விலகி நல்லபடியாக நடக்க ஆரம்பிக்கும். சுய தொழில் செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். மஞ்சள் நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு இம்முறை மேன்மையான பலன்கள் இருக்கும்.

சொந்தத் தொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் இந்தக் குருப்பெயர்ச்சி கெடுபலன்கள் எதுவும் தராது. கடன்கள் கட்டுக்குள் இருக்கும். சிலர் புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள். சிலருக்கு அலைச்சல்களும் மந்த நிலையும் ஒருபுறம் இருந்தாலும் இன்னொரு புறம் தொழில் முன்னேற்றமும் வருமானமும் கண்டிப்பாக இருக்கும்.

சுபக்கிரகமான குருபகவான் எட்டாமிடத்தைப் பார்த்து வலுப்படுத்துவதால் சில தேவையற்ற விஷயங்களில் மாட்டிக் கொண்டு உங்களுடைய நல்ல பெயரைக் கெடுத்துக் கொள்வீர்கள். தேவையற்றவர்களுக்கு ஜாமீன் போடுவது மற்றும் எவருக்காகவும் கியாரண்டி தருவது இப்போது கூடாது. அதனால் சிக்கல்கள் வரலாம். பல நாள் சேர்த்து வைத்த நற்பெயர் ஒரு சில நிமிட செயல்களால் கெடக்கூடும் என்பதால் கவனமாக இருங்கள்.

ஏழாமிடத்தில் இருந்து ராசியைப் பார்க்கும் சனிபகவான் உங்களை பிடிவாதக்காரர் ஆக்குவார் என்பதால் எந்தவிதமான கோபத்திற்கும் ஆளாகாமல் பணிவாக இருப்பது நல்லது. அடக்கம் அமரருள் உய்க்கும் என்ற தெய்வவாக்கை நினைவுபடுத்திக் கொள்ளுவது நல்லது. பணி புரியும் இடங்களில் வீண் அரட்டைகள் வேண்டாம். அது தேவையற்ற மன ஸ்தாபங்களுக்கோ, வீண் விரோதத்திற்கோ வழிவகுக்கும் என்பதால் கவனமாக இருங்கள்.

வீண் விவகாரங்களில் தலையிடுவதும் அடுத்தவர்களுக்காக பரிந்து பேசி வம்பை விலைக்கு வாங்குவதும் இந்த காலகட்டங்களில் நடைபெற்று விரோதங்கள் வரும் என்பதால் எங்கும் எதிலும் எச்சரிக்கை தேவை. சிலருக்கு பயணம் சம்பந்தமான வேலைகள் அமைந்து அலைச்சல்களும் பிரயாணங்களும் அதிகமாக இருக்கும். பயணங்களால் லாபமும் இருக்கும்.. உறவினர்களிடம் சுமூகமான உறவு ஏற்படுவது கடினம்.

சிலருக்கு இருக்கும் வாடகை வீட்டை மாற்றி புதிதாக ஒத்திக்கு எடுத்தல் அல்லது புது வீடு வாங்குதல் போன்றவைகள் நடக்கும். நீண்ட கால வீட்டுக்கடன் பெற்று வீடு வாங்க முடியும். எதை வாங்கினாலும் வில்லங்கம் இருக்கிறதா என்று தீர விசாரியுங்கள். வயதான தாயாரை நன்கு கவனியுங்கள். அவரின் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள். தாயாரை விட்டு விலகி தூர இடங்களில் வசிப்பவர்கள் மாதம் ஒரு முறையாவது அவரைப் போய் பார்த்து அவரின் ஆசீர்வாதங்களை பெற்று வருவது நல்லது.

பெற்றோர் வழியில் சுமாரான ஆதரவு நிலை இருக்கும். பங்காளிகள் மற்றும் உறவினருடன் சுமூக நிலையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். சகோதர சகோதரிகள் வழியில் உங்களுக்கு செலவு இருக்கலாம். அவர்களிடம் இருந்து உதவியை எதிர்பார்க்க வேண்டாம்.

ரேஸ் லாட்டரி பங்குச்சந்தை சூதாட்டம் போன்றவைகள் இப்போது கை கொடுக்காது. சிறிது லாபம் வருவது போல் ஆசைகாட்டி பிறகு மொத்தமாக இருப்பதையும் இழக்க வைக்கும் என்பதால் மேற்கண்ட இனங்களில் கவனமுடன் இருக்கவும். அதே நேரத்தில் எட்டாமிடம் புதையல் லாட்டரி போன்ற திடீர் பண லாபத்தைக் குறிக்கும் இடம் என்பதாலும் அந்த பாவத்திற்கு குருவின் பார்வை கிடைப்பதாலும் பெரிய பண வரவு ஒன்று உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சியால் கிடைக்கும்.

கணவன் மனைவி உறவில் இதுவரை இருந்து வந்த பிரச்னைகள் உடனடியாக தீரும். கணவன் ஓரிடம் மனைவி வேறிடம் என்று பிரிந்து இருந்தவர்கள், வேலை விஷயமாக வெளியூரில் பிரிந்து வேலை பார்த்தவர்கள் உடனடியாக ஒன்று சேருவீர்கள்.

பிள்ளைகள் விஷயத்தில் செலவுகள் இருக்கும். படிப்புச்செலவு மற்றும் அவர்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கான அடித்தளச் செலவுகளுக்காக கையில் இருக்கும் சேமிப்பை நீங்கள் செலவிட வேண்டியதிருக்கும்.

குருபகவான் நான்காமிடத்தில் இருக்கும் பொழுது குடும்பச் சொத்துக்களை விற்கக்கூடாது. பூர்வீகச் சொத்துகளையோ வீடுநிலம் போன்றவைகளையோ விற்பதற்கான தேவை உள்ளவர்கள் விற்பனையை இன்னும் ஒரு வருடத்திற்கு தள்ளி வைப்பது நல்லது.

குருவின் பார்வை பனிரெண்டாம் இடத்திற்கு விழுவதால் வீடோ நிலமோ விற்ற பணம் விற்ற நோக்கத்திற்காக செலவாகாமல் வேறு வகையில் விரயம் ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த காலகட்டத்தில் வீண் விரயங்கள் நிறைய இருக்கும் என்பதால் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்குமுன் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து செலவு செய்யுங்கள். கோர்ட், கேஸ், நிலம் சம்பந்தமான வழக்குகள். போலீஸ் விவகாரங்கள் கிரிமினல் வழக்குகள் உள்ளவர்கள் வழக்கை முடிப்பதற்கு அவசரப்பட வேண்டாம்.

கோவில் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். ஞானிகளின் திருத்தலங்களுக்கு பயணம் செல்வீர்கள். மகாபெரியவரின் அதிஷ்டானத்திற்கு சென்று அவரின் அருளைப் பெறும் பெரிய பாக்கியம் கிடைக்கும். ஷீரடி மந்திராலயம், பகவான் சத்யசாயியின் திரு இடம் போன்ற புனிதத் தலங்களுக்கு போக முடியும்.

குறுக்குவழி பணம் வரும் சூழ்நிலையில் விழிப்பும் எச்சரிக்கையும் தேவை. எங்கும் எதிலும் கவனமாக இருங்கள். எவரிடமும் மனம் விட்டுப் பேச வேண்டாம். யார் எங்கே எப்படி உங்களுக்கு எதிராக திரும்புவார்கள் என்று தெரியாது. முறைகேடாக தவறான வழியில் ஆசை காட்டப்படும் எந்த முயற்சிக்கும் மனதை திடப்படுத்திக் கொண்டு அலைபாயாமலும் அடிபணியாமலும் இருக்க வேண்டியது அவசியம்.

கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு:

பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும் என்பதால் நஷ்டங்கள் ஏற்படலாம். கவனத்துடன் இருங்கள். கடன் பெற்று வீடு வாங்கும் அமைப்பு இந்த வருடம் உள்ளது. புதிய வாகனம் அமையும். வருடத்தின் பிற்பகுதி உங்களுக்கு மிகவும் நல்ல பண வரவைத் தரும். அதேநேரத்தில் செலவுகள் அதிகமாகத்தான் இருக்கும். நீண்ட நாள் கனவு ஒன்று இந்த வருடம் நனவாகும். உங்கள் மனது போலவே எல்லா நிகழ்ச்சிகளும் நடக்கும். உங்களின் நட்சத்திரநாதன் சூரியன் குருவிற்கு நண்பர் என்பதால் இந்தக் குருப்பெயர்ச்சியில் கெடுதல்கள் எதுவும் உங்களுக்கு இருக்காது.

ரோஹிணி நட்சத்திரக்காரர்களுக்கு:

உங்களின் நட்சத்திரநாதன் சந்திரன் குருவிற்கு நண்பர் ஆவதால் நல்ல வருமானங்களும், ரொம்ப நாட்கள் மனதில் நினைத்திருந்த லட்சியங்கள் நிறைவேறுதலும், திருமணம், குழந்தைபிறப்பு, வீடு வாங்குதல் போன்ற சுபநிகழ்ச்சிகளும் குடும்பத்தில் நடைபெறும். வீடுமாற்றம் அல்லது தொழில் இடமாற்றம் போன்றவைகள் அடுத்த வருடம் ஆரம்பத்தில் நடக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரக்காரர்களுக்கு:

உங்களில் சிலருக்கு வெளிநாட்டுப் பயணம் அமையும். அதிகாரம் செய்யும் துறைகளில் இருப்போருக்கு மிகவும் நல்ல பலன்கள் உண்டு. யூனிபாரம் அணிந்து வேலை செய்யும் துறைகளில் இருப்போருக்கு கடும் வேலை நெருக்கடியிலும் சில நல்ல பலன்கள் நடக்கும். வாழ்க்கைத்துணை மூலம் இந்த வருடம் உங்களுக்கு மிகச்சிறப்பாக அமையும். கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து பேசி எதிர்கால வாழ்க்கையை திருப்திகரமாக அமைத்துக் கொள்வீர்கள். நல்ல திட்டங்களைத் தீட்டி அதை செயல் படுத்தவும் செய்வீர்கள்.

பரிகாரம் :

ஜென்ம நட்சத்திரத்தினத்தன்று தாய், தந்தை அல்லது நீங்கள் மிகவும் மதிக்கும் ஒரு பெரியவரை கிழக்குப் பார்க்க நிறுத்தி வைத்து அவர்களின் கையில் ஒரு கிழங்கு மஞ்சளை கொடுத்து பிறகு அவரது கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து பின்பு அந்த மஞ்சளை வாங்கி தரையில் வைக்காமல் ஒரு மஞ்சள் தட்டில் வைத்து பின் அதை புது மஞ்சள் துணியில் முடித்து பூஜை அறையில் வைத்து வியாழன் தோறும் அதனை வழிபட்டு வருவது இந்த குருப்பெயர்ச்சியில் நல்ல பலன்களைத்தரும். 

No comments:

Post a Comment