மீனம் : 2015 - குருப்பெயர்ச்சிப் பலன்கள்

மீன ராசிக்கு இதுவரை உச்ச நிலையில் ஐந்தாமிடத்தில் இருந்து ராசியை பார்த்த குருபகவான் தற்போது நமது மூலநூல்களில் சாதகமற்ற இடம் என்று சொல்லப்படும் ஆறாமிடத்திற்கு மாறுகிறார்.

குருபகவான் ஆறாமிடத்தில் இருந்தால் நன்மைகள் கிடைக்காது என்று பொதுப் பலனாகச் சொல்லப்படுகிறது. ஜோதிடத்தில் பொதுவிதி என்று ஒன்று சொல்லப்பட்டால் சில சிறப்பு நிலைகளில் அதற்கு விதிவிலக்கு கண்டிப்பாக இருக்கும். அதன்படி மீன ராசி போன்ற உபய ராசிகளுக்கு குருபகவான் மறைவு ஸ்தானங்களில் இருக்கும்போது நன்மைகளைத் தருவார்.

ஏற்கனவே உங்களின் ஐந்தாமிடத்தில் உச்சமாக இருந்து ராசியை பார்த்த குருபகவானால் மீன ராசிக்கு மிகப்பெரிய நன்மைகள் எதுவும் சென்ற வருடம் கிடைக்கவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
உபய ராசிகளுக்கு ராசிநாதன் மறைவிடத்தில் மறைவது யோகமாக நமது கிரந்தங்களில் சொல்லப்படுவதால் இம்முறை ஆறாமிடத்திற்கு மாறும் குருபகவானால் சென்ற பெயர்ச்சியால் கிடைக்காத நன்மைகள் அனைத்தும் கிடைக்கும் என்பது உறுதி.

கேந்திராதிபத்திய தோஷம் பெறும் சுபக்கிரகம் மறைந்து நட்பு ஸ்தானத்தில் இருந்தால் நற்பலன் செய்யும் என்பதன்படியும் இம்முறை ஆறாமிடத்தில் உங்கள் ராசிநாதன் குரு அதிநட்பு வலுப்பெறுவதால் குருவால் உங்களுக்கு நன்மைகள் அதிகம் கிடைக்கும்.

இன்னும் ஒரு கருத்தாக குருபகவான் தான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்களைத்தான் வலுப்படுத்துவார் என்பதால் இந்த முறை அவர் பார்க்கும் இடங்களான உங்கள் ராசிக்கு பத்து பனிரெண்டு மற்றும் இரண்டு ஆகிய ஸ்தானங்கள் வலுப்பெறுகிறது. இதனால் மேற்கண்ட பாவங்களின் அமைப்புகளில் உங்களுக்கு நல்ல பலன்கள் நடக்கும்.

முதலாவதாக ஜீவன ஸ்தானத்திற்கு குருவின் பார்வை இருப்பதால் உங்களுடைய தொழில், வேலை, வியாபாரம் போன்ற விஷயங்களில் நல்ல வளர்ச்சி இருக்கும்.

வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் இதுவரை இருந்து வந்த மந்த நிலை உடனடியாக விலகி தொழில் வியாபாரம் மிகவும் சிறப்பாக நடைபெறும். பொருட்கள் சேதமின்றி மீதமுமின்றி லாபத்திற்கு விற்பனையாகும்.
அதேநேரத்தில் வியாபாரிகள் தொழிலிடத்திலேயே இருந்து கவனிக்க வேண்டியது அவசியம். வேலைக்காரர்களை நம்பி கடையையோ தொழில் ஸ்தாபனத்தையோ ஒப்படைத்தால் வேலை செய்பவர்களின் ஆதிக்கம் மேலோங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது. கொள்முதலுக்கு பணம் கொண்டு போகும் நேரங்களில் கவனமாக இருக்க வேண்டும். பெரிய தொகை பரிமாற்றங்களில் எச்சரிக்கையாக இருக்கவும். அனைத்திற்கும் வேலை செய்பவர்களை நம்பாமல் கவனமாக இருப்பது நல்லது.

புதிதாக வேலை தேடிகொண்டிருக்கும் இளைய பருவத்தினருக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ற வேலை உடனடியாக கிடைக்கும். ஒருசிலருக்கு வெளியூரிலோ வெளிமாநிலத்திலோ தூரதேசங்களிலோ தங்கி வேலை செய்ய கூடிய அமைப்புகள் உருவாகும். இருக்கும் இடத்தில் இருந்து தொலைதூரம் செல்லும் படியான மாற்றங்கள் சிலருக்கு உருவாகும்.

முதலீடின்றி தனது புத்திசாலித்தனத்தை வைத்து சொந்த தொழில் செய்பவர்கள், மெக்கானிக்குகள் போன்ற சுயதொழிலர்கள், கடுமையான உழைப்பாளிகள், ஆலைத் தொழிலாளர்கள் விவசாயிகள் கலைஞர்கள் போன்றவர்களுக்கு வருமானம் மற்றும் பணவரவுகளுக்கு எந்தக் குறையும் இருக்காது.

பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள், கலைத்துறையில் இருப்பவர்கள், அன்றாடத் தொழில் செய்பவர்களுக்கு இனிமேல் பிரச்னைகள் எதுவும் இருக்காது. விவசாயிகளுக்கு இது நன்மை தரும் காலம். விளைந்த பயிருக்கு நியாயமான விலை கிடைக்கும். பணப்பயிர் மற்றும் எண்ணை வித்துகள் போன்றவை பயிரிட்டவர்களுக்கு லாபம் வரும்.

தொழிலதிபர்கள், கலைஞர்கள், பத்திரிகை மற்றும் ஊடக துறையினர், இயக்கும் தொழில் செய்பவர்கள், தினசரி சம்பளம் பெறுபவர்கள் உள்ளிட்ட சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரும் முன்னேற்றம் காணுவீர்கள்.

குறிப்பாக காண்ட்ராக்டர்கள், நிர்வாகப்பணி சம்பந்தப்பட்டவர்கள், ஒரு துறைக்கோ அல்லது நிறுவனத்திற்கோ தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், தந்தையின் தொழிலைச் செய்பவர்கள், நெருப்பு சம்பந்தப்பட்டவர்கள் போன்றோருக்கு இந்தக் குருப்பெயர்ச்சி நல்ல பலன்களைத் தரும்.

அரசு தனியார் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு போன்றவைகள் கிடைக்கப் பெறும். சம்பளம் தவிர்த்த மேல் வரும்படிகளுக்கு அதிகமாக ஆசைப்பட வேண்டாம். அதனால் சிக்கல்கள் வரலாம். முறைகேடான வருமானங்கள் வரும்போது விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம். அவற்றால் வேறு விதமான பிரச்னைகள் வரும்.

பணியிடங்களில் மேலதிகாரி சொல்வதைக் கேட்டு நடப்பது நல்லது. எவரிடமும் வீண் வாக்குவாதம் செய்யாதீர்கள். நண்பர்களும் விரோதியாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த காலகட்டத்தில் சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதால் யாரையுமே பகைத்துக் கொள்ள வேண்டாம்.
இதுவரை செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கு மாற முயற்சி எடுத்துக் கொண்டிருப்பவர்கள் அதை சற்று ஒத்தி வைப்பது நல்லது. ஆனாலும் மாற்றங்கள் வந்தே தீரும் என்பதால் வேலையை விட்டு வெளியேறுவதற்கான நெருக்கடிகள் அதிகரிக்கக் கூடும்.

பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகமாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. வேலை செய்யும் இடத்தில் முதலாளியாலோ அதிகாரியாலோ மனக் கசப்புக்கள் வருவதற்கும் சங்கடங்கள் தோன்றுவதற்கும் வாய்ப்பு இருப்பதால் எதிலும் எச்சரிக்கையும் கவனமுமாக இருந்து பொறுத்துப் போவது நல்லது.
குருபகவான் ஆறாமிடத்தில் வலுப்பெறுவதால் கடன் நோய் எதிரிகளைக் குறிக்கும் ஆறாம்பாவம் வலுப்பெறுகிறது. இதனால் சில அத்தியாவசியத் தேவைகளுக்கு கடன் வாங்கியே ஆகவேண்டியது இருக்கும். எவ்வளவு பெரிய தலை போகிற பிரச்னையாக இருந்தாலும் கந்து வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். அதிக வட்டிக்கு வாங்கினால் அடுத்த வருட ஆரம்பத்தில் கடன் தொல்லையில் கொண்டு போய் விடும் என்பதால் எச்சரிக்கை தேவை.

மேலும் கடன் வாங்குவதால் பிரச்சனைகள் தீராமல் இன்னும் அதிகமாகவே செய்யும். ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன் வாங்குவது சட்டியிலிருந்து தப்பித்து அடுப்பில் விழுந்த கதை ஆகிவிடும்.
சொந்தத் தொழில் வைத்திருப்பவர்கள் அதனை விரிவாக்கம் செய்வதற்கான முயற்சிகளை செய்வீர்கள். இதுவரை தாமதமாகி வந்த வங்கிக்கடன் தற்போது உடனடியாக ஓகே செய்யப்படும். இதுவரை உங்களிடம் முகம் கொடுத்தும் பேசாத வங்கி அதிகாரி தற்போது உபசரித்து கடன் தருவார்.

ஆடம்பரச் செலவுகளுக்கு கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. கிரெடிட் கார்டு உபயோகப் படுத்துவதில் கவனமாக இருப்பது நன்மையைத் தரும். குறிப்பிட்ட சிலருக்கு நீண்டகால வீட்டுக்கடன் அமைந்து கடனாளி ஆனாலும் நல்ல வீடு அமையும் யோகத்தையும் குருபகவான் தருவார்.
யாரிடமும் தேவையற்ற வீண் வாக்குவாதம் வைத்துக் கொள்ள வேண்டாம். ஆறாமிடத்துக் குரு நல்ல நண்பர்களையும் சிறு பிரச்னைகளால் எதிரிகளாக மாற்றுவார் என்பதால் தேவையற்ற பிரச்னைகளில் தலையிட வேண்டாம். யாரையும் நம்பி கையெழுத்து போடுவதோ எவருக்கும் ஜாமீன் கொடுப்பதோ 
கூடாது.

நடுத்தர வயதை எட்டுபவர்கள் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டியது அவசியம். சர்க்கரை ரத்த அழுத்தம் போன்றவைகள் கண்டுபிடிக்கப்படும் நேரம் இது என்பதால் உடல்நல விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் சிறு சுகக்குறைவு என்றாலும் மருத்துவரை உடனே அணுகுவது நல்லது. முடிந்தால் ஒரு முழு உடல் பரிசோதனை கூட செய்து கொள்ளலாம்.
நேர்மையற்ற செயல்கள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான தொழில்கள் போன்றவற்றில் தற்போது ஆர்வம் காட்டாதீர்கள். அவற்றால் சிக்கல்கள் வரலாம். போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். பங்குச் சந்தை போன்ற ஊக வணிகங்கள் இப்போது கை கொடுக்காது. நஷ்டம் வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் ஷேர் மார்க்கட்டில் மிகவும் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கல்களில் மிகவும் கவனமாக நடந்து கொள்வது நல்லது.

அடிதடி சண்டை போன்றவைகளால் கோர்ட் காவல்துறை போன்ற இடங்களுக்கு அலைய வேண்டியது ஏற்படக்கூடும் என்பதால் எதிலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏற்கனவே வழக்கு விவகாரங்கள் இருந்தால் அவற்றை முடிப்பதற்கும் அவசரப்பட வேண்டாம். தற்போது தீர்ப்பு வரும் நிலை இருந்தால் அவற்றை தள்ளி வைக்க முயற்சிப்பது நல்லது. தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக வருவது கடினம்.

பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சியால் நல்லபலன்கள்தான் அதிகம் இருக்கும். குடும்பத்தலைவியாக இருக்கும் பெண்களுக்கு அதிகமாக நன்மைகள் நடைபெறும். குடும்பத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதால் இருக்கும் சேமிப்பு செலவழிந்து உங்கள் பாடு திண்டாட்டமாகலாம். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். இருவரும் ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து போவீர்கள்.

பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு:
உங்களின் அனைத்துத் திறமைகளையும் மற்றவர்கள் அடையாளம் கண்டுகொள்ளும் நேரம் இது. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் எனும் பழமொழி இப்போது உங்களுக்குப் பொருந்தும். தோல்விகள் அனைத்தும் வெற்றியின் படிக்கட்டுகளாக மாறும் என்பதால் உற்சாகத்துடன் செயலாற்றுவீர்கள். கேட்கும் இடத்திலிருந்து உதவிகள் தாராளமாகக் கிடைக்கும். நீண்ட கால லட்சியங்களை இப்போது நிறைவேற்றிக் கொள்ள முடியும். ஆன்மிகம் சம்பந்தப்பட்ட துறையினர் சிறப்படைவார்கள். ஞானிகள் தரிசனம் கிடைக்கும்.

உத்திராட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு:
கையில் தாராளமாக பண நடமாட்டம் இருக்கும் என்பதால் பணச்சிக்கல் வராது. கொடுக்கும் வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். உங்கள் வாக்குப் பலிக்கும். நீண்ட நாட்களாக வீடு கட்ட வேண்டும் அல்லது வீடு வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தவர்களுக்கு வீட்டுக்கனவு நனவாகும். பெரும்பாலானவர்கள் லோன் போட்டு வீடு கட்டவோ வாங்கவோ செய்வீர்கள். இந்தக் குருப்பெயர்ச்சி உங்களை கடன்காரராக்கி அதன் மூலம் ஒரு நல்ல சொத்து சேர்க்க வைக்கும்.

ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு:
உங்களில் சிலர் கிழக்கு நாடுகளுக்கு வேலை விஷயமாகச் செல்வீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். எதிர்கால நல்வாழ்விற்கு சேமிப்பது நல்லது. வீண் செலவுகளை முடிந்தவரை குறைத்துக் கொண்டால் வளமான வாழ்க்கை உண்டு. சுயதொழில் வியாபாரம் போன்றவைகளை நடத்துவோருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். ஆயினும் வாங்கும் கடன் நல்லபடியான முதலீடாக முன்னேற்றத்திற்கானதாக வருமானம் வரும் வகையில்தான் செலவாகும்.

பரிகாரம் :
வியாழக்கிழமை தோறும் அருகில் உள்ள பழமையான ஈஸ்வரன் கோவிலில் உள்ள ஸ்ரீ தக்ஷிணாமூர்த்திப் பெருமானுக்கு கொண்டைக் கடலை மாலை சாற்றி மஞ்சள் ஆடை சமர்பித்து மஞ்சள் நிற இனிப்பான லட்டு நைவேத்தியம் செய்து நெய் தீபம் ஏற்றி வாருங்கள். வயதில் மூத்தவர்கள் மனம் குளிரும் காரியங்களை செய்யுங்கள். குருபகவான் உங்கள் ராசிநாதன் என்பதால் உங்களுக்கு எவ்வித குறையையும் இம்முறை வைக்க மாட்டார் என்பது உறுதி. 

No comments:

Post a Comment